நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு: தவெகவிற்கு அடுத்த டெஸ்ட்; 'முதல்வர்' விஜய்க...
IPL 2026: புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றங்கள்! - பிளே-ஆஃப் சுற்றை எட்டப்போகும் 4 அணிகள் எவை எவை?
ஐபிஎல் 2026 சீசன் அதன் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது! மைதானத்தில் பந்துகள் பறப்பதைக் காட்டிலும், புள்ளிப்பட்டியலில் அணிகள் முன்னும் பின்னும் நகருவதைப் பார்ப்பதுதான் ரசிகர்களுக்கு இப்போது பெரிய சுவாரசியமாக மாறியிருக்கிறது.
பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறப்போகும் அந்த 'டாப் 4' அணிகள் எவை? எந்த அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது? 10 அணிகளின் தற்போதைய நிலைமையையும், பிளே-ஆஃப் கணக்குகளையும் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)
நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, 11 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் அந்த அணி அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுவிடும். ஒருவேளை அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில், புள்ளிப்பட்டியலில் 20 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து ‘குவாலிஃபையர் 1’ ஆட்டத்தில் பங்கேற்கும் கூடுதல் வாய்ப்பைப் பெறும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
அதிரடி பேட்டிங் மூலம் இந்த சீசனில் தனித்து நிற்கும் சன்ரைசர்ஸ், 11 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் வென்றால் போதும். இருப்பினும், முதல் இரண்டு இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள அந்த அணி குறைந்தது இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இவர்களது சாதகமான நிகர ரன் ரேட் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் (GT)
தொடர் வெற்றிகளின் மூலம் புத்துயிர் பெற்றுள்ள குஜராத் அணி, 11 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நிலைபெற்றுள்ளது. மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றால் எவ்விதச் சிக்கலுமின்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். ஒரு வெற்றியை மட்டுமே பெறும் பட்சத்தில், ரன் ரேட் மற்றும் பிற அணிகளின் வெற்றி-தோல்விகளைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
பஞ்சாப் கிங்ஸ் (PBKS)
பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மற்ற அணிகளைக் காட்டிலும் ஒரு போட்டி கூடுதலாக (மொத்தம் 4 போட்டிகள்) கைவசம் இருப்பது இவர்களுக்குப் பெரும் சாதகம். இதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யலாம். ஒருவேளை மூன்று வெற்றிகளைப் பெற்றால், முதல் இரண்டு இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பும் இவர்களுக்கு உண்டு.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
ஆரம்பத் தடுமாற்றங்களுக்குப் பிறகு மீண்டு வந்துள்ள சென்னை அணி தற்போது 11 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பொதுவாக 16 புள்ளிகள் தகுதிக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுவதால், மீதமுள்ள மூன்று போட்டிகளில் குறைந்தது இரண்டில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை உள்ளது. ஒன்றில் மட்டுமே வென்றால், இவர்களது தகுதி வாய்ப்பு மற்ற அணிகளின் ‘தயவை’ எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)
ராஜஸ்தான் அணி, 11 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கும் வாய்ப்புகள் இன்னும் முடிந்துவிடவில்லை. இவர்களது ரன் ரேட் சற்று பலவீனமாக இருப்பது பின்னடைவாகும். மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் கட்டாயம் வென்றாக வேண்டும். ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் பெரிய அளவிலான வெற்றிகள் இவர்களுக்குத் தேவைப்படுகின்றன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
கேகேஆர் அணிக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு மிகவும் கடினமாகியுள்ளது. 10 போட்டிகளில் 9 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள அந்த அணி, எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 17 புள்ளிகளுடன் தகுதி பெற முடியும். ஒரு போட்டியில் தோல்வியுற்றாலும், அது அந்த அணியின் வெளியேற்றத்தை உறுதி செய்துவிடும். வெற்றி பெறுவதுடன் மற்ற அணிகளின் முடிவுகளும் இவர்களுக்குச் சாதகமாக அமைய வேண்டும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC)
டெல்லி அணி 11 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் பந்தயத்தில் நீடிக்க மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளை எட்டினாலும், அது தகுதிக்கு போதுமானதாக இருக்காது. டாப்-4 இடங்களில் உள்ள அணிகள் தங்களது அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்தால் மட்டுமே டெல்லிக்கு வாய்ப்பு கிட்டும்.
மும்பை இந்தியன்ஸ் (MI)
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் தற்போது 11 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் உள்ளது. மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வென்றாலும் அவர்களால் 12 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இது முதல் நான்கு இடங்களுக்குள் நுழைய போதுமானதல்ல. இதனால் மும்பை அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)
பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள லக்னோ அணியும் 11 போட்டிகளில் 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். தற்போது முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகள் ஏற்கனவே 13 மற்றும் 14 புள்ளிகளைப் பெற்றுவிட்டதால், லக்னோ அணியால் இனி அவர்களை முந்த இயலாது. மும்பை அணியைப் போலவே இவர்களும் தகுதி வாய்ப்பை இழந்துவிட்டனர். !
















