சென்னை அப்போலோவில் புதிய சிறப்பு மையம் அறிமுகம்; சிரை நாள பாதிப்புகளுக்கு முழுமை...
Labham: என் வயது 30... கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?
கடன் பத்திரங்களில் (Bonds) முதலீடு பற்றி பலரும் விசாரித்து வருகிறார். கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் லாபத்தை அள்ளிவிடலாம் என சில யூடிபர்கள் வீடியோ வெளியிட, அதைப் பார்த்த பலரும் நாமும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாமே என்று யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
கடன் பத்திரங்களில் முதலீடு நம் மக்களுக்கு சரியாக எடுத்துச் சொல்லப்பட்ட விஷயங்களைவிட, தவறாக எடுத்துச் சொல்லப்பட்ட விஷயங்களே அதிகம். இந்த முதலீட்டைப் பற்றி நாம் சரியாகப் புரிந்துகொண்டால் மட்டுமே அதில் யார் முதலீடு செய்யலாம், முதலீடு செய்தால் என்ன வட்டி வருமானம் கிடைக்கும் என்பதைப் பற்றி எல்லாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

கடன் பத்திரங்களில் முதலீடு பற்றி முதலில் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், கடன் பத்திர முதலீடு என்பது யாருக்குத் தேவை இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே அதில் முதலீடு செய்ய பரிசீலிக்கலாம் என்பதுதான். உதாரணமாக, நீங்கள் ரிஸ்க்கே எடுக்க விரும்பாத ஒரு முதலீட்டாளர். எனவே, உங்கள் பணம் அனைத்தையும் வங்கி எஃப்.டி-யில் வைத்திருக்கிறீர்கள். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை மாதந்தோறும் எடுத்து உங்கள் செலவுகளை செய்து வருகிறீர்கள். ஆனால், வங்கி எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் உங்களுக்குப் போதவில்லை. அதைவிட, ஒன்றிரண்டு சதவிகித வட்டி அதிகமாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். இந்த வருமானம் மாதந்தோறும் கிடைப்பது அவசியம் என்று நினைக்கும்பட்சத்தில் நீங்கள் கடன் பத்திரங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
உறுதியான வட்டி வருமானம், அது மாதந்தோறும் கிடைத்தால் நல்லது என்று நினைப்பவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. 30 வயதில் இருப்பவர்கள்கூட இருக்கலாம். உதாரணமாக, 30 வயது கொண்ட ஒருவருக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் வேண்டும். இதற்காகக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள். 18 மாதம் முதல் 24 மாதங்கள் வரை கடன் பத்திரங்களின் மூலம் வட்டி வருமானத்தைப் பெற்றபின், கடன் பத்திரத்தின் முதிர்வுக்குப் பிறகு அவர் முதலீடு செய்த பணம் அனைத்தையும் திரும்பப் பெறுகிறார்.

இதுதான் கடன் பத்திர முதலீடு. அதாவது, வங்கி எஃப்.டி.யைவிட சற்று கூடுதலான வட்டி வருமானம் வேண்டும்; அந்த வருமானமும் மாதந்தோறும் வரவேண்டும் என்கிறவர்கள் மட்டும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப் பரிசீலிக்கலாம்.
வங்கி எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்தைவிட சற்றுக் கூடுதலான வருமானம் எல்லாம் போதாது; அதைவிட அதிகமாக அதாவது, 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் வேண்டும்; மாதந்தோறும் எல்லாம் வருமானம் கிடைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்கிற நிலையில் இருப்பவர்கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்துவிடலாம். இந்த நிலையில் இருப்பவர்கள் நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் (Equity Mutual Fund) முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டை 7 - 10 ஆண்டுகள் வரை தொடர்ந்து வைத்திருப்பதன் மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் லாபம் (CAGR) 12% என்கிற அளவுக்குக் கிடைக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

சுருக்கமாக, ரிஸ்க் குறைவான முதலீடு, வங்கி எஃப்.டி.யைவிட சற்றுக் கூடுதலான வட்டி; மாதந்தோறும் வட்டி வருமானம் வேண்டும் என்பவர்கள் மட்டும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப் பரீசிலிக்கலாம். மற்றவர்கள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், ஓரளவுக்கு ரிஸ்க் குறைவான ஹைப்ரீட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்கலாம்!
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட லிங்க்கினை கிளிக் செய்து தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்: https://labham.money/events/webinar-may09-2026?utm_source=vikatan_social&utm_medium=social_media&utm_campaign=webinar_may09_2026




















