கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு; தாழ்வான மின்மாற்றிதான் காரணமா? வன...
'மக்களவையில் வேற இடம் கொடுங்க, காங்கிரஸுடன் எங்களால்.!'- மக்களவை சபாநாயருக்கு கனிமொழி கோரிக்கை
நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.
ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியது.

காங்கிரஸும் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்து 5 இடங்களை வழங்கிவிட்டது. மீதம் தேவைப்படும் 6 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக கோரிக்கை வைத்திருக்கிறது.
இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி மக்களவை சபாநாயருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், " மக்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (திமுக) சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கை அமைப்பில் தகுந்த மாற்றங்களைச் செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாறிவரும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டும், இந்திய தேசிய காங்கிரஸுடனான எங்களது கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாலும், அவையில் அவர்களுடன் இணைந்து தற்போதைய இருக்கை அமைப்பிலேயே எங்களது உறுப்பினர்கள் தொடர்ந்து அமர்ந்திருப்பது பொருத்தமாக இருக்காது எனத் தோன்றுகிறது.

எனவே, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்கள் இந்த உயரிய சபையில் தங்களது கடமைகளைச் சிறப்பாகச் செய்யும் வகையில், அவர்களுக்குத் தனித்தனியாக இருக்கைகளை ஒதுக்கீடு செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உங்கள் அலுவலகத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து தாங்கள் எடுக்கும் கனிவான பரிசீலனைக்கு நான் நன்றியுணர்வோடு இருப்பேன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.














