TV Update: மீண்டும் குஷ்பு நடத்தும் ஜாக்பாட்; டாக் ஷோ மூலம் என்ட்ரி தரும் சேரன்!
'LED ஸ்க்ரீன், வாட்டர் பாட்டில், ஒரு நாள் அரசு டாக்டர்'- அவையில் எம்.எல்.ஏக்களின் வினோத கோரிக்கைகள்!
சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மக்கள் பிரச்னைகளை கடந்து சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த ஜாலியான வேடிக்கையான கோரிக்கைகள் இங்கே.

முதல்வரை பார்க்க LED ஸ்க்ரீன்:
மதுரை வடக்கு தொகுதியின் எம்.எல்.ஏ கல்லாணை விஜய் அன்பன். பல ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர். கட்சியின் பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கமானவர்.
இவர் அவையில் பேசும்போது, 'எங்களின் முதல்வர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜோக் சொன்னால் கூட அழகாக குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். ஆனால், எங்களால் அந்த சிரிப்பை இங்கிருந்து பார்க்க முடியவில்லை. அதனால் முதல்வரின் ரியாக்சன்களை நாங்கள் பார்க்கும் வகையில் ஒரு LED ஸ்கீரின் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்றார். தினமும் 110 விதியின் கீழ் எதாவது அறிவிப்பை வெளியிடும் முதல்வர் விஜய், ரசிகரின் கோரிக்கையையும் 110 விதியின் கீழ் நிறைவேற்றி வைத்தாலும் ஆச்சர்யமில்லை. அப்படி ஸ்க்ரீன் வைத்தால் கல்லாணை அன்பன் தியேட்டர் நினைப்பில் முன் சீட்டில் காலை தூக்கி போட்டு நாக்கை மடித்து விசில் அடிக்காமல் இருக்க வேண்டும்!!!

டம்ளருக்கு பதில் வாட்டர் பாட்டில் :
அவையின் ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் குனிந்து குனிந்து வந்து தண்ணீர் டம்ளரை கொடுத்துவிட்டு செல்வதை கண்டு வருந்திய பிரேமலதா விஜயகாந்த், 'இனி டம்ளருக்கு பதில் ஒரு கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் கொடுக்க வேண்டும்' என கடந்த கூட்டத் தொடரில் கேட்டிருந்தார். அப்போதே, 'ஓ.பி.எஸ் எழுந்து பாட்டில் வைத்தால் கோவம் வந்தால் தூக்கியடித்துவிடுவார்கள்' என்றார்.
அந்த யோசனை அத்தோடு முடித்து வைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தொடரிலும் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் வேண்டுமென பிரேமலதா கேட்டார். ஆனால், இன்னமும் அவரின் கோரிக்கை அவையில் நிறைவேறவில்லை. மேஜையில் கண்ணாடி தண்ணீர் பாட்டில் வைக்கப்படும் வரை அண்ணியாரின் உரிமைக்குரல் ஓயாது என்கின்றனர் தேமுகவினர்.

ஸ்பில்ட் ஸ்க்ரீன் டெலிகாஸ்ட்:
தவெக அமைச்சர்கள் பேசுகையில், திமுக எம்.எல்.ஏக்கள் கூச்சல் போட்டு எழுந்து நிற்பதால் இரண்டையும் ஒரே ப்ரேமில் காட்ட ஸ்பிலிட் ஸ்க்ரீனில் டெலிகாஸ்ட் செய்யுங்கள் என அவையிலேயே கேமரா மேன்களுக்கு உத்தரவிட்டார் அமைச்சர் ராஜ்மோகன். பள்ளிக்கல்வி மட்டுமல்ல, செய்தித்தொடர்புத்துறைக்கும் ராஜ்மோகன் தான் அமைச்சர். அதனால் அவரின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படலாம். ஸ்பிலிட் ஸ்க்ரீன் டெலிகாஸ்ட் மட்டுமில்லாமல், ஆக்சன் ரீப்ளே, ஹைலைட்ஸ் பேக்கேஜ் எல்லாம் அவ்வப்போது ஒளிபரப்பவும் அமைச்சர் உத்தரவிடலாம். சட்டமன்ற நேரலையை கிரிக்கெட் மேட்ச் போல இன்னும் சுவாரஸ்யமாக்கலாம்.
ஒரு நாள் டாக்டர்:
திருவள்ளூர் தொகுதியின் எம்.எல்.ஏ அருண் குமார். இவர் ஒரு டாக்டர். இவர் அவையில் பேசும் போது, முதல்வரை நோக்கிய புகழுரைகள் தொகுதி பிரச்னைகள் எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டு கடைசியில் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, 'திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாதம் ஒரு நாள் டாக்டராகவோ அல்லது எதோ ஒரு பணியை சேவையாக செய்ய அனுமதி கொடுக்க வேண்டும்' என்றார். அதாவது பள்ளிகளுக்கும் மருத்துவமனைக்கும் போய் திடீர் சோதனைகளில் ஈடுபட்டு ரீல்ஸ் அட்டூழியம் செய்யக் கூடாதென உத்தரவிட்டிருப்பதால், சுற்றி வளைத்து இப்படியொரு கோரிக்கை போல! உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறதா என பரிசீலித்து சொல்வதாக அமைச்சர் அருண்ராஜ் கூறியிருக்கிறார்.

ட்ரோல் ஆன கார் விவகாரம்:
விசிக எம்.எல்.ஏவான ஜோதிமணி 'பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஏழையாக இருப்பதால் எம்.எல்.ஏக்களுக்கு கார் கொடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தார். உடனடியாக முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் எம்.எல்.ஏக்களுக்கு கார் கொடுப்பதாக அறிவித்தார். சமூகவலைதளங்களில் இந்த அறிவிப்பு பெரும் விமர்சனத்தை எதிர்கொண்டது. கார் இல்லையென கேட்ட ஜோதி மணிக்கு ஏற்கனவே கார் இருக்கிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கார் இல்லை. கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழிக்கு 26 கார் இருக்கிறது என சட்டமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த அபிடவிட் தகவலும் இணையத்தில் பகிரப்பட்டு கடும் விமர்சனம் எழுந்தது. உடனடியாக அரசு பின்வாங்கியது. 'தவெகவில் கார் இருக்கும் உறுப்பினர்கள் யாரும் அரசு காரை வாங்கமாட்டார்கள்' என அமைச்சர் ஆதவ் அறிவித்தார். கொடுத்ததெல்லாம் கொடுத்தார்....யாருக்காக கொடுத்தார்!

















