"பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்...
சென்னை: காதல் விவகாரம்; இளைஞர் கொலை - த.வெ.க ஆதரவாளர், அவரின் குடும்பத்தினர் கைது!
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரின் மகன் பிரவீன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை என்பவரின் மகளை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதலுக்கு எழுமலை குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 16 - ம் தேதி பிரவீனிடம் ஏழுமலையின் உறவினரான மணிகண்டன் என்பவர் தகராறு செய்தார். அப்போது தன்னுடைய உறவினர் மகளை காதலிப்பதை விட்டுவிடும்படி மணிகண்டன் மிரட்டியதாகத் தெரிகிறது. ஆனால் பிரவீன், காதலைக் கைவிட முடியாது என்று கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பிரவீன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அதன் பிறகு மணிகண்டன், தன்னுடைய உறவினர் ஏழுமலைக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் போன் மூலம் விவரத்தைக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஒரு கும்பல் வந்தது. அந்தக் கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் பிரவீனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றது. பிரவீனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக பிரவீன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். இது தொடர்பாக பிரவீன் அம்மா பிரபாவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தமிழன்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரவீன் அளித்த தகவல், சி.சி.டி.வி கேமரா பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்படை போலீஸார், த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை, அவரின் மகன் கெளதம், ஏழுமலையின் உறவினர் மணிகண்டன், கௌதமின் நண்பர் நந்தீஸ் ஆகிய நான்கு பேரை கைதுசெய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிரவீனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரவீனின் கொலைக்கு நீதிகேட்டு அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து கேளம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட பிரவீன், காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது ஆணவக் கொலை அல்ல. தவறான தகவல்கள் பரபரப்படுகின்றன. சம்பவத்தன்று பிரவீனை ஏழுமலையின் குடும்பத்தினர் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது நடந்த தகராறில்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.
மகளின் காதல் விவகாரத்தில் த.வெ.க ஆதரவாளர் ஏழுமலை குடும்பத்தினர் கொலை வழக்கில் சிக்கியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















