TV Update: மீண்டும் குஷ்பு நடத்தும் ஜாக்பாட்; டாக் ஷோ மூலம் என்ட்ரி தரும் சேரன்!
Miss Universe India 2026: ``மூன்றாண்டுக்கால உழைப்புக்குக் கிடைத்தது..!" - காசியா லிஸ் மேஜோ பேச்சு!
ஜெய்ப்பூரில் உள்ள ஜீ ஸ்டுடியோஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) Miss Universe India 2026-பிரமாண்ட இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து 52 பேர் இறுதிப் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர். இந்தியாவின் முதல் மிஸ் யூனிவர்ஸ் சுஷ்மிதா சென், முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா ஊர்வசி ரவுத்தேலா, 2024-ம் ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா ரியா சிங்ஹா, சுற்றுச்சூழல் ஆர்வலரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பிரக்யா கபூர் மற்றும் முன்னாள் மிஸ் இந்தியா யூனிவர்ஸ் செலினா ஜெய்ட்லி ஆகியோர் இந்த அழகிப் போட்டியின் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

இந்தப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 19 வயதான காசியா லிஸ் மேஜோ 'மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2026' என்ற மதிப்புமிக்க பட்டத்தை வென்றார். விழாவின் போது, 2025-ஆம் ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா மணிகா விஸ்வகர்மா வெற்றி மகுடத்தை காசியாவிற்குச் சூட்டினார். அதைத் தொடர்ந்து, வைஷ்ணவி கணேஷ் முதல் RunnerUp பட்டத்துடன் 'மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா 2026' ஆகத் தேர்வானார். அனுஸ்ரீ சதாவ்லேகர் இரண்டாவது RunnerUp இடத்தையும், தேஜஸ்வினி ஸ்ரீவஸ்தவா மூன்றாவது RunnerUp இடத்தையும், அனுபா வசிஷ்ட் சௌத்ரி நான்காவது RunnerUp இடத்தையும் பிடித்தனர்.
Miss Universe India 2026 பட்டம் வென்ற காசியா லிஸ் மேஜோ, வரும் நவம்பர் மாதம் போர்ட்டோ ரிகோவில் நடைபெறவுள்ள 75-வது உலகளாவிய 'மிஸ் யூனிவர்ஸ்' (Miss Universe) அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கவுள்ளார். இந்த வெற்றி குறித்துப் பேசிய அவர், ``நான் உலகின் உச்சிக்கே சென்றுவிட்டது போல் உணர்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நான் உழைத்த உழைப்பிற்கு கிடைத்த மிகச் சிறந்த தருணம் இது. இந்த மகுடத்தை என் சொந்த மாநிலமான கேரளாவுக்குக் கொண்டு செல்வதிலும், என் ஊரை உலகிற்கு அடையாளப்படுத்தி, அதை உலகளாவிய மேடைக்கு எடுத்துச் செல்வதிலும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய போராட்டம் என்பது எப்போதும் நமக்குள்ளேயே இருக்கும் போராட்டம்தான். நாம் நினைப்பதை விடவும் நமக்கு அதிக தகுதி இருக்கிறது என்பதை நாமே நம்புவதுதான் அது. வெறும் 19 வயதில் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போன்ற ஒரு பெரிய மேடையில் நிற்பதற்கு மிகுந்த துணிச்சலும் மன தைரியமும் தேவைப்பட்டது. அந்தத் தடைகளை கடந்து வந்ததாலேயே இன்று இந்த கிரீடத்துடன் நிற்கிறேன். உலகளாவிய மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தருவதே என் முதல் இலக்கு. நான் செய்யும் ஒவ்வொன்றிலும் இந்தியாவையும் கேரளாவையும் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துவேன்." என்றார்.

















