India Valves 2026: "மருத்துவ வசதி என்பது மனித உரிமை" - குடியரசு துணைத் தலைவர் சி...
Nepal: ”இதுவரை பஸ் கிடைக்காததே நல்ல விஷயம்தான்” - டி.என்.ஏ சோதனைக்கு வந்த மகன் நம்பிக்கை
நேபாளத்தில், கடந்த 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில், ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 305 பேரில், சுமார் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீதமுள்ள 85 பேர் மயாமான நிலையில், அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.
இதில் கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏனென்ஸி சுற்றுலா டிராவல்ஸ் மூலம் தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர் நேபாள் கைலாஷ் யாத்திரை சென்றனர்.

மூன்று மினி பேருந்துகளில் சென்ற நிலையில் ஒரு பேருந்து மட்டும் வெள்ளத்தில் இருந்து தப்பியதாகச் சொல்கிறார்கள். மற்ற பேருந்துகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.
கும்பகோணம் டிராவல்ஸ் மூலம் சென்ற 16 பேரின் நிலை என்னவென்றும் அவர்கள் குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், வெள்ளத்தில் மாயமானவர்களை அடையாளம் கண்டறிய நேபாள அரசு டி.என்.ஏ பரிசோதனை தரவுகளைக் கேட்டிருந்தது.
அதன்படி, தமிழக அரசு சார்பில், சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூரில் உள்ள தடய அறிவியல் மூலம் டி.என்.ஏ பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சட்டம் சார்ந்த மருத்துவம் மற்றும் நஞ்சியியல் துறை பிரிவு டாக்டர் தமிழ்மணி, மருத்துவக்கல்லுாரி முதல்வர் மணிமேகலை, தஞ்சாவூர் மண்டல தடய அறிவியில் துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் அடங்கிய குழுவினர் உதவியுடன் நேற்று தஞ்சாவூர், மயிலாடுதுறை, கரூர், திருச்சி, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 23 பேரின் குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
இந்த ரத்தமாதிரி சேகரிப்புப் பணிகளை கலெக்டர் ரேவதி ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து இணை இயக்குநர் ராஜ்மோகன் கூறியதாவது: ''முதற்கட்டமாக 23 பேரின் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் தகவலறிந்து வரும்பட்சத்தில் இரண்டு நாட்கள் ரத்தமாதிரிகளை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ரிசல்ட் அறிக்கை ஒரு வாரத்தில், தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, நோபாளம் மற்றும் சீனா நாட்டிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும்'' என்றார்.
கலெக்டர் ரேவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை. இருப்பினும், அவர்களின் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளேன். இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் நேபாள அரசுக்கு அனுப்பப்பட்டு, டி.என்.ஏ ஒத்து போனால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
தஞ்சாவூர் ஜே. ஜே. நகரைச் சேர்ந்த சிவயோகம் என்பவரின் நிலை தெரியாத நிலையில் டி.என்.ஏ டெஸ்ட் கொடுக்க வந்த அவரது மகன் அசோக் கூறியதாவது, ''அம்மாவைத் தேடுவதற்காக டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு ரத்த மாதிரிகள் கொடுத்துள்ளேன்.

அம்மா கூட பிறந்தவர்கள் ரத்த மாதிரிகள் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறேன். மாவட்ட ஆட்சியர் ரேவதி மேடம், நேபாளத்தில் நடைபெறும் தேடுதல் குறித்த தகவல்களையும் உடனக்குடன் தெரிவித்து வருகிறார்கள்.
அங்கு தேட முடியாத கடினமான சூழ்நிலை இருப்பதையும் அறிய முடிகிறது. பேருந்து இதுவரை கிடைக்கவில்லை அதுவே ஒரு நல்ல விஷயம்தான். அதனால் என் அம்மா உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.





















