`தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகள் லாபம்தான் அரசுக்கு முக்கி...
Pizza 4: '''பீட்சா' பிரான்சைஸுக்கு எப்பவும் மார்கெட் இருக்கு!" - 'பீட்சா' தயாரிப்பாளர் சி.வி.குமார்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'பீட்சா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, சினிமாவுக்கான கதவையும் கார்த்திக் சுப்புராஜுக்குத் திறந்து வைத்தது.
அப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, 'பீட்சா' தயாரிப்பாளர் சி.வி. குமார், 'பீட்சா 2', 'பீட்சா 3' என அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை வெவ்வேறு இயக்குநர்களை வைத்து எடுத்தார்.

2023-ம் ஆண்டு 'பீட்சா 3' வெளியாகியிருந்தது. தற்போது, அதன் நான்காம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி. குமார்.
இந்த நான்காம் பாகத்திற்குத் தயாரிப்பாளர் சி.வி. குமார்தான் கதாசிரியராகவும் பணிகளை கவனித்து வருகிறார். 'பீட்சா 4' குறித்தும், 'பீட்சா' பிரான்ச்சைஸுக்கு இருக்கும் மார்க்கெட் குறித்தும் சி.வி. குமாரிடம் பேசினோம்.
நம்மிடையே பேசியவர், "இப்போது மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் 'பீட்சா 4' படத்திற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம். 'பீட்சா 3' திரைப்படம் வெளியான ஒரு ஆறு மாதத்திலேயே 'பீட்சா 4' திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் தொடங்க ஆரம்பித்துவிட்டோம்.
ஆனால், அதற்கான ஸ்கிரிப்ட் அப்போது சரியாக அமையவில்லை. பிறகு, ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒரு புதிய ஐடியா கிடைத்தது. அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகத் திரைக்கதையாக மாற்றினேன். அது முழுமையானதாகத் தெரிந்ததும், படமாகச் செய்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.
நான்தான் 'பீட்சா' படத்தின் கதாசிரியர். என்னுடைய கதைகள் வழக்கமான சயின்ஸ் பிக்ஷன் ஜானர் படமாகத்தான் இருக்கும். ஆனால், ஹாரர் கதைகள் என்பது எனக்குப் புதியது. அதனால், இதையொரு சவாலாக எடுத்துக்கொண்டு எழுதினேன். அதே நேரத்தில், இந்தப் படம் காமன் ஆடியன்ஸுக்கான ஒரு ஹாரர் படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.

அதே போல், பழிவாங்கும் பேய், பிளாஷ்பேக், அந்தப் பேய் வீட்டுக்குள்ளே போய் உட்கார்ந்துகொள்வது போன்ற வழக்கமான பேய் படங்களுக்கான ஃபார்முலாக்கள் எதுவும் இதில் இருக்காது. ஒரு முற்றிலும் புதிய முயற்சியாக இருக்க வேண்டும் என்று யோசித்து எழுதினேன்.
நான் திட்டமிட்டபடி திரைக்கதையும் நிறைவாக உருவாகியிருக்கிறது. 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' திரைப்படத்தில் என்னுடைய அசோசியேட்டாகப் பணியாற்றிய பிரசாந்த்சந்தர்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்." என்றவர், 'பீட்சா' பிரான்ச்சைஸுக்கு இருக்கும் மார்க்கெட் குறித்து, " 'பீட்சா' படங்களுக்கான மார்க்கெட் எப்போதுமே பெரியதாக இருக்கிறது.
அதனால்தான் இப்போது இந்த நான்காம் பாகத்தை எடுக்க முடிகிறது. மார்க்கெட் இல்லை என்றால் நம்மால் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க முடியாது. 'பீட்சா' என்பது ஒரு மிகப்பெரிய பிரான்ச்சைஸ் மதிப்பு கொண்ட ஒரு பிராண்ட்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இது நான்கு முதல் ஐந்து மொழிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஒரு பிரான்ச்சைஸ். நாம் முதன்மையாகத் தமிழில் எடுப்பதால் தமிழை மட்டுமே பார்க்கிறோம். ஆனால், இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஒடியா மற்றும் பெங்காலி ஆகிய ஐந்து மொழிகளிலுமே பெரிய ஹிட்டான ஒரு பிரான்ச்சைஸ்.
சொல்லப்போனால், 'பீட்சா 3' திரைப்படம் தமிழை விட ஹிந்தியிலும், ஒடியாவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒவ்வொரு பாகமும் எங்களுக்குப் பெரிய லாபத்தைக் கொடுத்திருக்கிறது. அதனால்தான் இந்த பிரான்ச்சைஸை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்கிறோம்.

'பீட்சா' இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்களுக்கு இடையே நீண்ட இடைவெளி இருந்தது. இனிமேல் அந்தத் தவறு நடக்கக் கூடாது. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அடுத்தடுத்த பாகங்களைப் பண்ணிவிட வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
2023-ல் மூன்றாவது பாகம் வந்தது, எனவே 2026-க்குள் இந்த நான்காவது பாகத்தை முழுமையாகப் பண்ணி முடித்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறோம். இந்த வருடமே படம் ரிலீஸுக்கும் வந்துவிடும் என்று நம்புகிறேன்.
'பீட்சா 3' நல்ல பிசினஸ் செய்ததால்தான் இப்போது நாம் 'பீட்சா 4' செய்கிறோம். ஒருவேளை எப்போது நமக்கு அது சரியாகப் போகவில்லை என்று தோன்றுகிறதோ, அப்படியொரு சூழல் வரும்போது நாம் அடுத்த பாகம் குறித்த முடிவை எடுக்கலாம். எனவே, 'பீட்சா 4'-ன் பிசினஸ் மற்றும் வெற்றியைப் பொறுத்தே 'பீட்சா 5' முடிவுகள் எடுக்கப்படும்." எனப் பகிர்ந்துகொண்டார்.





















