"விஜய் மீது எனக்கு பொறாமையா? அப்படித் தரம் கெட்ட ஆள் நான் கிடையாது" - ரஜினிகாந்த...
POCSO வழக்கில் மத்திய இணை அமைச்சர் பண்டியின் மகன் கைது; பதவி நீக்கம் செய்ய மோடிக்கு TRS கோரிக்கை
மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத், போக்சோ வழக்கில் நேற்று (மே 16) கைது செய்யப்பட்டிருக்கிறார்.
17 வயது சிறுமிக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக, அச்சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த மே 8-ஆம் தேதி ஹைதராபாத் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி பகீரத் தாக்கல் செய்த மனுவை தெலங்கானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவர் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜரான பகீரத்தை காவல்துறை கைது செய்திருக்கிறது.
இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்றால், மத்திய உள்துறை இணை அமைச்சராக இருக்கும் பண்டி சஞ்சய்யை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று டிஆர்எஸ் (TRS) தலைவர் கே.கவிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில் தன் மகன் மீதான இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், "சட்டத்தின் முன் அனைவரும் சமமே. அவர் எனது மகனாக இருந்தாலும் சரி, நாட்டின் சாமானிய குடிமகனாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து நடக்க வேண்டும்.
நீதி அமைப்பின் மீதுள்ள மரியாதையின் காரணமாகவும், விசாரணையை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்பதற்காகவும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் எனது மகனை விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தினேன். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

அதே வேளையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பகீரத், அந்தச் சிறுமியின் குடும்பத்திற்கு எதிராக போலீஸில் ஒரு எதிர் புகாரையும் அளித்துள்ளார்.
அதில், அச்சிறுமியின் குடும்பத்தினர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி மிரட்டியதாகவும், அதற்குத் தான் சம்மதிக்காததால் தன்னிடம் ரூ. 5 கோடி பணம் கேட்டு மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கேட்கப்பட்ட தொகையைத் தராவிட்டால் சிறுமியின் தாயார் தற்கொலை செய்துகொள்வதாகப் பயமுறுத்தியதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த இருதரப்பு புகார்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














