நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! - ...
SRH v KKR: ``இதையெல்லாம் ஒரு சாக்காகச் சொல்ல விரும்பவில்லை.!" - தோல்வி குறித்து கேப்டன் ரஹானே
ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று (ஏப்ரல் 2) மோதின. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ஹைதராபாத் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சால் 16 ஓவர்களிலேயே 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 65 ரன்கள் வித்தியாசத்தில் தனது ஹோம் கிரவுண்டில் வெற்றியை நழுவவிட்டது.
இந்த தோல்விக்குப்பிறகு பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, ``நிச்சயமாக இது ஒரு கடினமான நாள்தான். பேட்டிங்கின்போது சில முக்கியமான பார்ட்னர்ஷிப்கள் அமைந்திருக்க வேண்டும். களத்தில் செட் ஆன பேட்டர்கள் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் அது இன்று நடக்கவில்லை. பந்துவீச்சைப் பொறுத்தவரை, முதல் 10 ஓவர்களில் எதிரணி 130 முதல் 140 ரன்கள் வரை எடுப்பார்கள் என்றுதான் கணித்திருந்தோம். ஆனால், மிடில் ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு மீண்டும் ஆட்டத்திற்குள் எங்களைக் கொண்டு வந்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் பந்து சற்று மெதுவாக வந்தது. பிட்ச் பேட்டிங்கிற்கு இன்னும் சாதகமாகும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது. இருந்தாலும், இதையெல்லாம் ஒரு சாக்காகச் சொல்ல விரும்பவில்லை. பவர்பிளேயில் 78 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தைப் பெற்றும், முக்கியமான ஒரு விக்கெட்டை கிரீன் ரன் அவுட் மூலம் இழந்தது எங்களுக்குப் பின்னடைவாக அமைந்தது.
ஹோம் கிரவுண்டில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். இப்போது நாங்கள் மீண்டும் அறைக்குச் சென்று, அணியில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என யோசிக்கப் போகிறோம். பேட்டிங்கில் இன்னும் ஒரு வீரரை கூடுதலாகச் சேர்ப்பது பற்றியும் ஆலோசிப்போம். இன்னும் 3-4 நாட்கள் இடைவெளி இருப்பதால், ஒரு மோசமான நாளை மறந்துவிட்டு நேர்மறையான மனநிலையுடன் அடுத்தப் போட்டியில் மீண்டு வருவோம்" என்று பேசினார்.















