தவெக: “எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்” - ச...
TVK : பலிக்காத கூட்டணிக் கனவு; கோட்டைவிட்ட விஜய்; தனித்து விடப்பட்ட தவெக?
திமுக தனது கூட்டணியை இந்த நொடி வரை வலுவாக வைத்திருக்கிறது. காங்கிரஸ் மட்டுமே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் என்.டி.ஏவும் தங்களுடைய கூட்டணியை இறுதிப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது. தேமுதி-கவும் ராமதாஸூம் மட்டுமே கொஞ்சம் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அவர்களும் எதோ ஒரு பக்கம் தஞ்சம் அடைந்துவிடுவார்கள். இந்த இடத்தில்தான் விஜய் தனித்து விடப்படுகிறாரா எனும் கேள்வி எழுகிறது.

'ஆட்சி அதிகாரத்தில் பங்கு!' என அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதை அப்படியே பிடித்துக் கொண்டு தங்கள் பக்கமாக பல கட்சியினரும் வந்து சேருவார்கள் என விஜய் தரப்பினர் எதிர்பார்த்தனர். ஆனால், விஜய்யை திமுக, அதிமுக-விடம் டிமாண்ட் ஏற்ற மட்டுமே ஏனைய கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன.
இது சம்பந்தமாக தமிழக அரசியலை உற்றுநோக்குபவர்கள் சிலரிடம் பேசினோம். ``புதிதாக கட்சி தொடங்கும் நடிகர்கள் தாங்கள் சந்திக்கும் முதல் தேர்தலில் பெரிய கட்சிகள் எதனோடும் கூட்டணி வைக்காமல் தங்களின் பலத்தை தெரிந்துகொள்ள தனித்தே போட்டியிடுவார்கள். விஜயகாந்த் அப்படித்தான் போட்டியிட்டார். கமல்ஹாசனும் பெரிதாக எந்த கட்சிக்கும் வலைவீசவில்லை. தன்னை தேடி வந்த மார்க்கெட் இல்லாத கட்சிகளை மட்டுமே சேர்த்துக் கொண்டுதான் தேர்தலை சந்தித்தார். கடைசி வரை பூச்சாண்டி மட்டுமே காட்டிய ரஜினிகாந்துமே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்றே அறிவித்தார்.

கிட்டத்தட்ட தோல்வி உறுதி என்பதை அறிந்து எடுக்கும் ரிஸ்க் இது. 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்ற விஜயகாந்த், தன்னுடைய வாக்குவங்கியை நிரூபித்து அடுத்த தேர்தலிலேயே கூட்டணிக்கு போனார்.
ஆனால், விஜய் தரப்பு இந்த விவகாரத்தில் கொஞ்சம் வித்தியாசமான போக்கையே கொண்டிருந்தது. சந்திக்கப்போகும் முதல் தேர்தலையே கூட்டணியோடுதான் சந்திக்க வேண்டுமென விஜய் தரப்பு நினைத்தது. அதனால்தான் விக்கிரவாண்டி மாநாட்டிலேயே 'நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம்' என விஜய் பேசினார்.
அப்போது விஜய்யின் மனதில் இருந்தது திருமா. அவரும் அந்த சமயத்தில்தான் ஆட்சியில் பங்கு வேண்டும் எனப் பேசியிருந்தார். கூடவே விஜய்யின் முதல் மாநாட்டுக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.

விஜய்யும் திருமாவும் கூட்டணிக்காக நெருங்குவார்கள் என ஹேஸ்யங்கள் பறந்து கொண்டிருந்த சமயத்திலேயே திருமா அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
'விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்துகொள்வதை திருமா தவிர்த்தார். 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது திரைமறைவில் பேச வேண்டிய விஷயம்' என விஜய்க்கு கண்டனம் தெரிவித்தார். திமுகவை விமர்சித்த ஆதவ் அர்ஜூனாவை இடைக்காலமாக கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். அந்த சமயத்திலும் விஜய் விடவில்லை.
'புத்தக வெளியீட்டுக்கு திருமா வரவில்லையெனினும் அவர் மனம் முழுவதும் இங்கேதான் இருக்கும்' என தொடர்ந்து தூண்டில் போட்டுக் கொண்டே இருந்தார். விக்கிரவாண்டி மாநாடு முடிந்த 2 மாதங்களுக்கு மட்டுமே தவெக - விசிக கூட்டணி என்பது பேசுபொருளாக இருந்தது. அதன்பிறகு, தவெகவின் பார்வை அப்படியே காங்கிரஸ் பக்கமாக திரும்ப ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ்காரர்களும் விஜய்க்கு அவ்வப்போது ஆதரவு தெரிவித்து நட்பு சக்தியாகவே காட்டிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸூம் அமைச்சரவையில் பங்கு என்கிற கோஷத்தை முன்வைத்தது. அதன்பிறகுதான் திமுக கூட்டணியில் விரிசல், காங்கிரஸ் தவெக பக்கமாக செல்கிறது போன்ற பேச்சுகள் எழ ஆரம்பித்தன.
'ஜனநாயகன்' விவகாரத்தில் முதல்வரின் ஒரே ட்வீட்டோடு திமுக கூடாரம் கப்சிப் ஆகிவிட்டது. ஆனால், காங்கிரஸ் விஜய்க்காக வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு கொடுத்தது. ராகுல் காந்தியே விஜய்க்காக ட்வீட் செய்தார். ஆனால், காங்கிரஸூம் வெட்டு ஒன்று துண்டு ரெண்டென எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் முட்டல் மோதல் ஏற்பட்டால் மட்டுமே விஜய்யை நோக்கி நகர்வார்கள் எனும் நிலையே இப்போது. ஆக, அவர்களுக்கும் விஜய் முதல் ஆப்சன் கிடையாது" என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
'சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும் டிடிவி விஜய்க்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தார். விஜய்க்கு நெருக்கமான நிர்வாகி ஒருவருடன் டிடிவி தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தது. அதை வேகப்படுத்தி டிடிவியை உள்ளே இழுக்கவும் தவறிவிட்டனர். ஓ.பி.எஸ் சீட்டெழுதி வாங்கிய வாக்கெடுப்பிலும் விஜய்யுடன் செல்ல வேண்டும் என்றே அதிகம் பேர் கூறியிருக்கின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு ஆர்ப்பாட்டத்துக்காக அன்புமணியின் பாமக தரப்பில் பாலு தவெகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
வந்த வாய்ப்புகள் அத்தனையையும் தவற விட்டு விட்டு இப்போது இலவு காத்த கிளியாக காத்திருக்கின்றனர்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர். பிரேமலதா விஜயகாந்தும் ராமதாஸூம் மட்டுமே மிச்சம் இருக்கிறார்கள். 'தேமுதிக தகுதிக்கு மீறி சீட் எதிர்பார்க்கிறது' என்பதுதான் திமுக அதிமுக-வினரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. திமுக - அதிமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிகவினரும் உறுதி செய்கின்றனர். ஒருவேளை தேமுதிக தவெக பக்கமாக வந்தாலும் அது பெரிய பலனை கொடுக்குமா என்பதும் சந்தேகமே. ராமதாஸ் தரப்பையும் தவெக தொடர்புகொண்டிருப்பதாக பனையூர் வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர். ஆனால், ராமதாஸ் பழுத்த அனுபவமிக்கவர். அவர் அவ்வளவு எளிதில் ஒரு புதிய கட்சியை நம்பி வருவாரா என்பதும் சந்தேகமே என்கின்றனர் முக்கியப் புள்ளிகள் சிலர்.

இன்னொரு பக்கம் 'திமுகவை பொது எதிரியாக முன்நிறுத்தி விஜய் எங்களின் பக்கம் வருவார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இன்னமும் இருக்கிறது. அதனால்தான் எந்த கட்சிக்கும் இன்னமும் சீட் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருக்கிறோம். விஜய் வந்தால் எல்லாமே மாறும்' என கிசுகிசுக்கின்றனர் கமலாலய வட்டாரத்தினர்.

அதேநேரத்தில் விஜய்யின் இந்த இரண்டாண்டு நடவடிக்கைகளை வைத்து பார்க்கையில், 'வெற்றிக் கூட்டணியை அமைக்கப் போகிறேன் என 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்கிற ஆயுதத்தோடு வந்த விஜய் இப்போது வேறு வழியே இல்லாமல் தனித்து நிற்க வேண்டிய நிலையை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறார்' என அரசியலை உற்றுநோக்குபவர்கள் கூறுகின்றனர்.












