திண்டுக்கல்: மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் `சிறுமலை பல்லுயிர...
UPSC/TNPSC: ”உழைக்கும் எண்ணமும், சேவை செய்யும் எண்ணமும் இருக்க வேண்டும்!” - மாவட்ட ஆட்சியர் அறிவுரை!
UPSC/TNPSC குரூப் - 1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடன், King Makers IAS அகாடமி இணைந்து 'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது. அதன்படி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் இன்று 'நீங்களும் ஆகலாம் IAS' பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் திருமதி பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு E.சுந்தரவதனம் இ.கா.ப., கிங்க் மேக்கர்ஸ் IAS அகாடமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அத்துடன் அரசுப்பணி கனவையும் ஆட்சியர் பணி கனவையும் நனவாக்க துடிக்கும் மாணவர்கள், மாணவிகள் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பெண்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பேசியதாவது, ``UPSC தேர்வில் தேர்ச்சியுறுவது மட்டுமே ஒரு ஆட்சியாளருக்கான தகுதி கிடையாது. அது ஒரு தேர்வு மட்டுமே. உண்மையாவே ஆட்சியருக்கான சிறந்த அடிப்படை பண்பு என்பது மற்றவர்கள் படும் கஷ்டத்தை கண்டு தன்னையும் அவர்களுள் ஒருவராக நினைத்து, அவர்களுக்காக வருந்துவது கருணை காட்டுவது போன்றவை தான்.
சமூக பிரச்சனை, அநீதியை கண்டு கோபம் கொள்ளுதல் அனைத்து சூழ்நிலைகளிலும் நடுநிலைமையாக நடத்தலும் அவசியம். கலெக்டர் ஆகிவிட்டால் மாலை, மரியாதையெல்லாம் கிடைக்கும் என்றெல்லாம் நினைத்து இப்பதவிக்கு வரக்கூடாது. உழைக்கும் எண்ணமும், மக்களுக்கான சேவை செய்யும் எண்ணமும் கொண்டிருக்க வேண்டும். மக்களுக்கு நான் செய்யும் சேவையின் மூலம் கிடைக்கும் வெற்றிதான் எனது மகிழ்ச்சி என்றிருக்க வேண்டும்.

விழிப்புணர்வு என்பது நம்மிடையே தோன்ற வேண்டும். அடுத்தவர் கூறி வருவது என்பது தற்காலிகமானது மட்டுமே. தங்களுக்கு தானே உந்து சக்தியாக இருந்து தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி தள்ளி போகலாம், ஆனால், ஒரு நாள் நடந்தே தீரும்" என்றார். மா
வட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு E. சுந்தரவதனம் பேசியதாவது, ``நாம் எங்கு தவறு செய்கிறோம் என்பதை கண்டறிந்து தவறிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
பள்ளி கல்லூரிகளில் நாம் எழுதும் தேர்வு எல்லாம் மதிப்பெண்களை நோக்கிய தகுதித்தேர்வு. ஆனால், நாம் இப்பொழுது எழுதுகின்ற தேர்வு பணிக்கு செல்வதற்கான ஒரு தொடர் ஓட்டம். இந்த ஓட்டத்தில் நாம் மற்றவர்களை விட எவ்வளவு முன்பு இருக்கிறோம் என்பதே முக்கியம். அதுவே நம் வெற்றியை தீர்மானிக்கும். ஹார்டு வொர்க் செய்வதை விட ஸ்மார்ட் வொர்க் செய்வதே சிறந்தது.

தேசிய காவல் படையில் பயிற்சியுறும் போது குதிரை ஏற்றம் பயிற்சி கொடுப்பார்கள். குதிரை ஏற்ற பயிற்சி, பயிற்சியாளர்களின் தலைமைப்பண்பை வளர்ந்தெடுக்க கொடுக்கப்படுகிறது. நாம் பயிற்சிக்கு சென்றால் நம்முடைய ஆளுமைகளை தானாகவே வளர்த்துக் கொள்ளலாம். ஓடினாலும், நடந்தாலும் அல்லது தவழ்ந்தாலும் நம்மால் வெற்றி பெற முயலும். ஆனால், நாம் எதை செய்தாலும் தொடர்ச்சியாக செய்தால் மட்டுமே அது வெற்றி வாகை சூடித்தரும். எங்கு படித்தாலும் எப்படி படித்தாலும் தொடர்ச்சியான பயிற்சியும் முயற்சியுமே ஒருவரின் வெற்றிப்பாதைக்கு வழி வகுக்கும்" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய கிங்க் மேக்கர்ஸ் IAS அகாடமியின் இயக்குநர் பூமிநாதன், UPSC/TNPSC சர்வீஸ் பற்றிய முழுமையான தகவல்களையும், தேர்வில் எளிமையான முறையில் வெற்றிப் பெறுவதற்கான உத்திகளையும் எடுத்து கூறினார். மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளைபற்றியும் விரிவாக கூறினார்.













