`ஏதேனும் திருத்தங்கள் இருந்தால்.!' - JEE main 2-ம் பருவத் தேர்வு.! NTA-யின் அறி...
UPSC / TNPSC: 'மாணவர்கள் இந்த மூன்று விஷயங்களை முதலில் செய்ய வேண்டும்.!'- பயிற்சியாளர் ஆதில் பெய்க்
'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
'UPSC/TNPSC குரூப் -1, 2 - தேர்வுகளில் வெல்வது எப்படி?' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்த நிகழ்வில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல் துறை தலைவர்), டாக்டர். V. இராம் பிரசாத் மனோகர் (இ.ஆ.ப தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர், கர்நாடக மின்சார கழகம்) திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் ஊக்க உரை ஆற்றுகிறார்.
ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் திரு. ஆதில் பெய்க்கை (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி) தொடர்பு கொண்டு பேசினோம்.

"அரசாங்க வேலைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் முதலில் எந்தத் தேர்வுக்கு தயாராக போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அது UPSC/ TNPSC என எந்தத் தேர்வாக இருந்தாலும் சரி அதில் தெளிவு வேண்டும். குறிப்பிட்ட ஒரு தேர்வை தேர்ந்தெடுத்த பிறகு அதனுடைய பாடத்திட்டம் என்ன? என்ன மாதிரியான தலைப்புகள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
தேர்வுக்கு தயாராகுபவர்கள் மூன்று விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டும். முதலில் அரசியல், பொருளாதாரம், வரலாறு, புவியியல் இந்த நான்கு பாடப்பிரிவுகளிலும் உறுதியாக இருக்க வேண்டும். இந்தப் பாடப்பிரிவுகளின் அடிப்படையை நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு அவர்கள் பள்ளிக்கூட புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
UPSC தேர்வு படிப்பவர்களாக இருந்தால் NCERT புத்தகங்களைப் படிக்க வேண்டும். TNPSC தேர்வு படிப்பவர்களாக இருந்தால் தமிழ்நாடு அரசின் சமச்சீர் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இதில் படிக்கும்போது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இரண்டாவதாக தினமும் செய்திதாள் படிக்க வேண்டும். குறிப்பாக எது பயிற்சிக்கு தேவையோ அதை கட்டாயம் படிக்க வேண்டும். மூன்றாவது எந்தத் தேர்வாக இருந்தாலும் ஆப்டிடியூட் தான் முக்கியம். இது இல்லாமல் அரசாங்க தேர்வே இல்லை. அதனால் ஆப்டிடியூட் தொடர்பான நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டு பயிற்சி செய்ய வேண்டும். கல்லூரி படிக்கும் மாணவர்கள் இதை முதல் இரண்டு ஆண்டுகளில் செய்யலாம். மூன்றாவது ஆண்டில் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம். இப்படி செய்தால் தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகமாகும்" என்றார்.



















