கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்
`US விசா கிடைக்காத விரக்தி' - உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவர்; ஹைதராபாத்தில் சோகம்
ஆந்திரா மாநிலம் குன்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர், அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, ஹைதராபாத்தில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஹைதராபாத்தின் மற்றொரு பகுதியில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை (நவ. 22) அவரது வீட்டின் கதவை உடைத்து பார்க்கும்போது அவர் பேச்சு மூச்சற்று இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரோஹிணி என்ற அந்த பெண்ணின் வீட்டுக் கதவு திறக்காததால் அவரது வீட்டுப் பணிப்பெண் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.
அங்கு கிடைத்த தற்கொலை கடிதத்தில் அவரது அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்தும் மன அழுத்தத்துடன் போராடி வருவது குறித்தும் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.
ரோஹிணியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் உட்கொண்டிருக்கலாம் அல்லது தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
எனினும் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்துத் தெரிவிக்கவில்லை.

ரோஹிணியின் தாய் இலட்சுமி கூறுவதன்படி, அவர் தனது மருத்துவர் பணியில் கவனம் செலுத்தி வந்துள்ளார். அமெரிக்கா வேலைக்குச் செல்வது குறித்து பெரிய கனவுகளைக் கண்டிருக்கிறார்.
ஆனால் விசா வழங்கப்படாததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கிர்கிஸ்தானில் 2005-10 ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்த ரோகிணி, இந்தியாவில் பணியில் இருந்தாலும், அமெரிக்காவில் நோயாளிகள் எண்ணிக்கைக் குறைவு மற்றும் வருமானம் அதிகம் என்பதனால் அமெரிக்காவுக்குச் செல்ல நினைத்துள்ளார். விசா கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ளாத ரோகிணி சொந்த வாழ்க்கையை விட பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து சில்கல்குடா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
















