மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?
US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பதில் தாக்குதலாக, ஈரானின் IRGC( Islamic Revolutionary Guards) படை, இஸ்ரேல் நோக்கி ஏவுகணைத் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இஸ்ரேல் மட்டுமின்றி, பஹ்ரேன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களை நோக்கியும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், பஹ்ரேன் தவித்து, மற்ற நாடுகள் ஏவுகணைகளை இடைமறித்து அழித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பஹ்ரேனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5th Fleet மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வளைகுடா நாடுகளும் இந்த போரில் இழுக்கப்பட்டிருப்பதால், இது மிகப் பெரும் போராக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது ஏன்?
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், ஈரான் இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. அணு சக்தி என்பது ஈரானின் உரிமை என்றும், அதை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.
கடந்த 2025 ஜூன் மாதம், ஈரான் தங்கள் அணுசக்தி திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்தது. அந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது, “ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையை எட்டிவிட்டது. அதற்கான யுரேனியம் செறிவூட்டல் இன்னும் சில நாட்களில் முழுமை அடையப் போகிறது. இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல்" எனக் கூறி, ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இதனால், பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது.

பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தவே, அந்த போர் 12 நாட்கள் நீடித்தது. கடைசி நாளில், அமெரிக்கா தன்னுடையை விமானப் படையை திரட்டிக் கொண்டு வந்து, பி2 பாம்பர்கள் என்ற சக்தி வாய்ந்த குண்டுகளை, நிலத்துக்கு அடியில் செயல்படும் ஈரானின் முக்கிய அணு சக்தி மையங்கள் மீது வீசி தாக்கியது. இதில் ஈரானின் அணு சக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மார்தட்டிக் கொண்டார்.
8 மாதங்கள் கடந்த நிலையில், ஈரான் மீண்டும் அணு சக்தி திட்டத்தை தொடங்க முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டினார். எனவே, ஈரான் உடனடியாக அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்; அப்படியில்லை என்றால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம், என ட்ரம்ப் அறிவித்தார். அதற்கு ஏற்ப, அமெரிக்க ராணுவ, கடற்படை, விமானப்படையை ஈரானை சுற்றி நிலைநிறுத்தினார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களான, யூ.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன், யு.எஸ்.எஸ். ஜெரால்டு ஆர் போர்டு ஆகியவை ஈரானை சுற்றிய கடல் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டன. அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர் விமானங்களான F35, F22 ஆகியவை வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் விமானப் படைத்தளங்களில் நிலை நிறுத்தப்பட்டன.
இதற்கு இடையில் ஓமன் மத்தியஸ்தம் செய்ய, அமெரிக்காவுக்கு ஈரானுக்கு இடையே பிப்ரவரி மாதம் மட்டும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் பிப்ரவரி 26-ம் தேதி நடந்து முடிந்தது. ஒவ்வொரு கட்ட பேச்சு வார்த்தையும் நல்ல முன்னேற்றத்தை நோக்கித்தான் போவதாக, அமெரிக்காவும், ஈரானும் தெரிவித்தனர். இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
அமெரிக்காவின் மூன்று வலியுறுத்தல்கள்!
அமெரிக்கா 3 விஷயங்கள் முக்கியமாக வலியுறுத்தியது. 1. ஈரான் அணு சக்தி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். 2. ஏவுகணைத் திட்டங்களையும் முற்றிலும் கைவிட வேண்டும் 3. மத்திய கிழக்கில் ஈரான் ஆதரித்து வரும் ஆயுதக் குழுக்களான, ஹெஸ்புல்லா, ஹெவ்திக்கள், ஹமாஸ், சிரியாவின் ஆயுதக் குழுக்களுக்கு பணம் உள்ளிட்ட ஆதரவு கொடுப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவை மூன்றையும் ஈரான் ஏற்க வேண்டும் என்று அமெரிக்க கேட்கிறது.
ஆனால், ஈரான் இதை முழுமையாக ஏற்கவில்லை. அணு சக்தி திறனை குறைப்பது பற்றி மட்டுமே ஈரான் பேச ஒப்புக் கொண்டது. மற்றவற்றைப் பற்றி பேசக் கூட ஈரான் தயாராக இல்லை. மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தையிலும் தன் நிலைப்பாட்டை மாற்றம் முடியாது என ஈரான் உறுதியாக இருந்ததால், இந்த தாக்குதலை நடத்துவதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.
மிகப் பெரும் போர்:
ஈரான் மீதான இந்த போர் குறித்து வீடியோ மூலம் செய்தி வெளியிட்டிருக்கும் ட்ரம்ப், “ அமெரிக்கா ஒரு மிகப் பெரிய மோதலில் ஈடுபட்டிருக்கிறது. ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்காவின் அழிவையே விரும்புகிறது. அமெரிக்காவை தாக்கும் அச்சுறுத்தலான ஏவுகணைகளை, ஈரான் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பை கருதியே இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும், ஏவுகணை தயாரிப்பு தொழில் துறையும் முற்றிலும் அழிக்கப்படும். ஈரான் மக்களே உங்களுக்கு இதுதான் இறுதி வாய்ப்பு. நாங்கள் ஆட்சியை வீழ்த்திய பிறகு, அரசு உங்கள் கைக்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த சுதந்திரம் கிடைத்துவிடும். பாதுகாப்பாக இருங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அமெரிக்காவின் இறுதி நோக்கம், ஈரானில் ஆட்சி மாற்றம் என்பதை ட்ரம்ப் தனது பேச்சின் மூலம் தெளிவு படுத்தியிருக்கிறார். ஆட்சி மாற்றம் என்பது உடனடியாக நடப்பதற்கான சாத்தியக் கூறு குறைவே. ஈரான் தனது ஏவுகணை பலம் மூலமாக பதிலடி கொடுப்பதால், இது நீண்ட போராக விரிவடைய வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்காவுக்கு இஸ்ரேலின் அழுத்தம்:

இஸ்ரேலை ஓர் அரசாக அங்கீகரித்த முதல் மத்திய கிழக்கு ஈரான்தான் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், ஒரு காலத்தில் ஈரானும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக இருந்தன. பெஹல்விக்கள் ஆட்சி அமெரிக்க, இஸ்ரேல் அரசுகளின் தலையாட்டி பொம்மையாக இருந்தது. 1979-ல் நடந்த உள்நாட்டுப் போரில், பெஹல்விக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அயோதொல்லா கொமேனி தலைமையில் இஸ்லாமிய அரசு அமைந்தது. அதையே Islamic Republic of Iran என்று அழைக்கிறோம்.
மத்திய கிழக்கில் ஈரானை இஸ்ரேல் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. பாலஸ்தீன விவகாரத்தில் ஈரான் ஆதரவில் இயங்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ், ஹெஸ்புல்லா மற்றும் ஏமனின் ஹூதிக்கள் இஸ்ரேலுக்கு இடைஞ்சலாக இருக்கின்றனர். பொருளாதார ரீதியிலும், ஆயுத ரீதியிலும் ஈரான் வளர்வதை இஸ்ரேல் விரும்பவில்லை.
ஈரான் அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்துவதையும், அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவெடுக்கப்பட்டு, ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா நீக்குவதையும் இஸ்ரேல் விரும்பவில்லை. அதனால்தான், பிப்ரவரி மாதம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்த பிறகு, அமெரிக்காவுக்கு சென்று ட்ரம்ப்பை சந்த்திருக்கிறார் நெதன்யாஹு.
இந்த சந்திப்பின்போது, “பேச்சுவார்த்தை மூலம் ஈரானை வழிக்கு கொண்டு வர முடியாது. தாக்குதல்தான் சரி” என்று நெதன்யாஹு ட்ரம்ப்பிடம் கூறியதாகவும், அதற்கு ட்ரம்ப், “ ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம், முடிவு எட்டப்படாவிட்டால் தாக்கலாம்” என்று பதிலளித்ததாகவும் வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்ககள் செய்தி வெளியிட்டன.
பிப்ரவரி 26-ம் தேதி ஜெனிவாவில் நடந்த அமெரிக்க, ஈரான் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக இரு தரப்பும் கூறியபோதும், நெதன்யாஹு விரும்பியபடியே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.
போரின் ஆபத்து:
போரில் உள்ள அனைத்து நாடுகளின் அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதைத்தாண்டி,
மிக முக்கிய ஆபத்து, இந்தப் போர் ஈரானைத் தாண்டி வளைகுடா முழுவதும் பரவுவதுதான். வளைகுடாவில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, சவுதி, அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரேன் போன்ற நாடுகள் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பதில் தாக்குதல் நடத்த உரிமை இருப்பதாகவும், அந்நாடுகள் தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறான பதில் தாக்குதல் நடத்தப்பட்டால், இந்த போர் இன்னும் பெரிய அளவில் விரிவடையும் அபாயம் இருக்கிறது.
எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படுவது இரண்டாவது ஆபத்து. பெர்சிய கடலில் உள்ள ஹோர்முஸ் பகுதி ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெறும் 30 கி.மீ அகலம் கொண்ட இந்த பகுதியை ஈரான் முடக்கினால், உலகளவிலான எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படும். கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கக் கூடும். அவ்வாறு அதிகரித்தால், உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயரும். அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் இருக்கிறது.
உலக நாடுகள் தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த முயல்வதே இந்நேரத்தின் அத்தியாவசியம்!














