Types of Money Funds Explained Simply | SGB | IPS Finance - 449
காளான் வளர்ப்பில் மாதம் 'ரெண்டு லட்சம் டேர்ன் ஓவர்' - கெத்துக் காட்டும் எம்.பி.ஏ பட்டதாரி கெளரி!
"பிசினஸ்ல தினம் தினம் சவால்களைச் சந்திக்கிறது சாதாரணமானது. பிரச்னைகளை எப்படி சமாளிக்றோங்கிறதுல இருக்கு நமக்கான வெற்றி. நிறைய நஷ்டங்களை சந்திச்சாச்சு. ஆனாலும், முயற்சிகள் தொடருது. முயற்சிகள் வெற்றியை நோக்கி நகர்த்துது" உற்சாகம் பொங்கப் பேசுகிறார் கெளரி.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கெளரி. எம்.பி. ஏ பட்டதாரியான இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக காளான் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டலில் ஈடுபட்டு வருகிறார். நெய்வேலியில் காளான் மூலம் தயாரிக்கும் பொருள்களை விற்கும் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அரியலூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் பல பெண்களை ஒருங்கிணைத்து தினமும் 100 கிலோ காளான் வரை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறார். கடலூரில் சுமார் 750 சதுர அடி உள்ள அந்தப் பண்ணையில், அறுவடை செய்த காளான்களை எடை போடுவதில் பிஸியாக இருந்த கெளரியிடம் பேசினோம்.
"எனக்குச் சொந்த ஊர் கடலூர், பெத்தாங்குப்பம் கிராமம். விவசாயக் குடும்பம். திருமணத்துக்குப் பிறகு என் கணவரோடு சிங்கப்பூரில் செட்டில் ஆயிட்டேன். அங்கேதான் பல வண்ண காளான்களைப் பார்த்தேன். அதனால காளான் வளர்ப்பில் ஈர்ப்பு வந்துச்சு. சிங்கப்பூரில் இருந்து கடலூர் வந்ததும் அரசாங்கம் சார்பா இலவசமாக நடத்தப்பட்ட காளான் வளர்ப்பு தொடர்பா பயிற்சி வகுப்பில் கலந்துக்கிட்டேன். காளான் வளர்ப்பை கத்துக்கிட்டு பிசினஸ் பண்ண ஆரம்பிச்சேன்" என்ற கெளரி தொழில் தொடங்கியது பற்றிப் பேச ஆரமபித்தார்.

"ஒரு லட்ச ரூபாய் முதலீட்டுல 360 சதுர அடியில் 2017 - ம் வருஷம் காளான் வளர்ப்பை ஆரம்பிச்சேன். சிப்பிக் காளான், பால் காளான் வகைகளை வளர்க்கத் தொடங்கினேன். முதல் சில மாசங்கள்ல உழைப்பைக் கொட்டியும் நல்ல அறுவடை கிடைக்கல. விதை கொடுத்தவங்ககிட்ட கேட்டா, 'நீங்க ஒழுங்கா பராமரிக்கல'னு சொல்லிட்டாங்க. ஆனா, தரமான விதைகளைக் கொடுக்காம என்னை ஏமாத்திட்டாங்கன்னு லேட்டா தான் புரிஞ்சுது. பிசினஸ் ஆரம்பிச்ச சில மாசங்கள்லேயே கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாயை இழந்தேன். ஆனாலும் நம்பிக்கையை கைவிடல. பிறகு எங்க ஏரியாவுல உள்ள வேளாண் அறிவியல் மையத்துலேருந்து விதைகளை வாங்கி பிசினஸை தொடர்ந்தேன்.
காளான் வளர்க்கிறது லேசான காரியம் இல்ல. கொஞ்சம் கவனக்குறைவா இருந்தாலும் மொத்த காளானும் பூஞ்சைத்தொற்று வந்து வீணாகிடும். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகுதான் காளான் வளர்ப்புல உள்ள சூட்சமங்கள் பிடிபட்டுச்சு. 2021-லேருந்து விதைகளையும் நானே உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன்" என்ற கெளரி, பாலிதீன் பைகளில் வைக்கோலை அடைத்துக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.

"வெவ்வேறு ரகங்கள்ல உற்பத்தி பண்ண காளானின் முதல் அறுவடையை எங்க பகுதி மக்களுக்குதான் கொடுத்தேன். காளான்கள் பல்வேறு நிறங்கள்ல இருந்ததால செயற்கை கலர் எதுவும் பயன்படுத்திருக்கோம்னு நினைச்சு வாங்குறதுக்கு மக்கள் தயக்கம் காட்டுனாங்க. இது காளான்ல ஒரு ரகம்னு சொல்லிப் புரியவெச்சதும் வாங்கினாங்க. அடுத்தபடியா கடைகளுக்கு, வீடுகளுக்குனு விற்பனை பண்ண ஆரம்பிச்சேன்.
எங்க பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையம் மூலமாக நூற்றுக்கும் அதிகமானவங்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சிகள் கொடுத்திருக்கேன். என்கிட்ட பயிற்சி எடுத்தவங்க இன்னிக்கு காளான் உற்பத்தியை தங்களோட பிசினஸாக மாத்தியிருக்காங்க. அவங்களுக்கு உற்பத்தி மட்டுமில்லாம, விற்பனை, மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கும் உதவுறேன். அவங்க உற்பத்தி பண்ற காளான்களை நானே கொள்முதல் பண்ணி விற்பனையும் பண்ணிக்கொடுக்குறேன். நாங்க உற்பத்தி பண்ற காளான்களை ஹோட்டல்கள், கடைகளுக்கு விற்பனைக்கு கொடுக்குறோம். கடந்த எட்டு மாசமா நெய்வேலியில் காளான் உணவு கடை ஒன்றை ஆரம்பிச்சிருக்கேன். காளான் சூப், கிரேவி, தோசை, பிரியாணினு காளான் மூலம் செய்யக்கூடிய உணவுகளை மட்டும் தயார் பண்ணி விற்பனை பண்ணிட்டு இருக்கேன். எங்க தேவைகள் போக மீதமுள்ள காளானில் பிஸ்கட், ஊறுகாய், சூப் மிக்ஸ்னு மதிப்புக்கூட்டல் செஞ்சும் விற்பனை பண்ணிக்கிட்டு இருக்கோம்.

ஒரு கிலோ காளான் 200 ரூபாய் வரை விலை போகுது. என் கணவரும் என்கூட சேர்ந்து காளான் வளர்ப்பு பிசினஸ்தான் பண்றாரு. ஆறுபேர் வேலைக்கும் இருக்காங்க. இப்போ என் பிசினஸ் மூலமா மாசம் ரெண்டு லட்சம் வரை டேர்ன் ஓவர் பண்றேன். 'எம்.பி. ஏ படிச்சுட்டு வைக்கோல் கொட்டகைனு தேவையில்லாத வேலை பார்க்குது'னு சொன்னவங்களுக்கு என் வெற்றி மூலமா பதில் கொடுத்திருக்கேன். உழைக்கத் தயாரா இருந்தா அதுக்கேத்த கூலி நிச்சயம் கிடைக்கும். எந்த வேலையும், உழைப்பால் கிடைக்கும் எந்த வருமானமும் வெற்றியின் வெளிப்பாடே'' என்று கெத்தாக சொல்கிறார் கெளரி.





















