`அனைத்துப் புத்தகங்களையும் தொட்டுக் கும்பிட்டு புனிதமாக்க விரும்பவில்லை'- ஆர்ஜே ...
`அனைத்துப் புத்தகங்களையும் தொட்டுக் கும்பிட்டு புனிதமாக்க விரும்பவில்லை'- ஆர்ஜே ஆனந்தி
இணையம் என்பது வெறும் கேளிக்கைகளுக்கு மட்டுமல்ல , அதை அறிவுத் தளத்தில் மாபெரும் திறவுகோலாகத் தன் டிஜிட்டல் பயணத்தின் மூலம் நிரூபித்து , 'தி புக் ஷோ' மூலம் டிஜிட்டல் தலைமுறைக்கு வாசிப்புப் பழக்கத்தைக் கடத்தியது தொடங்கி சமூகப் பிரச்னைகளைத் துணிச்சலாக ஓங்கி ஒலித்தது வரை இவரின் டிஜிட்டல் பயணம் சமூகப் பொறுப்புணர்வு மிக்கது.
பாட்காஸ்டராக, புத்தக விமர்சகராக, மேடைப் பேச்சாளராக... இப்படிப் பல பரிமாணங்களில் டிஜிட்டல் வெளியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி, பல லட்சம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் ஆர்ஜே ஆனந்திக்கு ஒட்டுமொத்தப் பங்களிப்பைப் போற்றும்விதமாக Digital Icon விருது வழங்கப்பட்டது.
விருதை, திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும், அவரின் மனைவியும் நடிகையுமான ரோஜாவும் இணைந்து வழங்கினார்கள்.

தொடர்ந்து பேசிய ஆர்ஜே ஆனந்தி, ``ஜென்ஸி தலைமுறை நினைத்தால் எந்த வரலாற்று மாற்றத்தையும் நிகழ்த்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். பல புத்தகங்களை உயர்த்திப் பேசிய நான், பல்வேறு புத்தகங்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.
எல்லாப் புத்தகங்களும் நல்ல கருத்துகளை மட்டுமே வெளிப்படுத்துவதில்லை.
சில புத்தகங்கள் அநீதியையும், தவறான கருத்துகளையும் வெளிப்படுத்துகின்றன. எனவே, அனைத்துப் புத்தகங்களையும் தொட்டுக் கும்பிட்டு புனிதமாக்க நான் விரும்பவில்லை" என்றார்.



















