மது அருந்திய வடமாநிலத்தவரை விசாரித்த போலீஸ்; பதிலுக்குத் தாக்கினார்களா இளைஞர்கள்...
மது அருந்திய வடமாநிலத்தவரை விசாரித்த போலீஸ்; பதிலுக்குத் தாக்கினார்களா இளைஞர்கள்? என்ன நடந்தது?
கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் கணேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமி மேற்பார்வையில் அரசு மதுபானக் கடை அருகே ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மூன்று இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து, மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட காவலர் கணேசன், அங்கு மது அருந்தியது குறித்து அவர்களிடம் விசாரித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து காவலர் கணசேன் சட்டையைப் பிடித்து, கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த காவலர் கணேசன் அளித்த தகவலின் பேரில், தென்னிலை மற்றும் க.பரமத்தி காவல் நிலைய போலீஸார் காவலர் கணேசனை கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
மேலும், இரவு ரோந்து பணியில் இருந்த காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 3 வடமாநில இளைஞர்களையும் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தென்னிலை காவல் ஆய்வாளர் சுகன்யா தலைமையிலான போலீஸார் தென்னிலை அருகாமையில் உள்ள நிறுவனங்களில் திடீர் தேடுதல் மேற்கொண்டனர.

அப்போது, விசாரணையில் குடக்கில் நாயக் (வயது: 27) , சகாதேவ் பாரீக்(வயது: 26), ரவிந்தீர கட்டய்யா (வயது: 22) ஆகிய மூன்று வட மாநில இளைஞர்களை, தென்னிலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களது விசாரணையில் மது போதையில் காவலரைத் தாக்கியதை ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அரசு ஊழியரை மது போதையில் தாக்கியது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் இரவு 10 மணிக்குமேல் மதியம் 12 மணி வரை கள்ள சந்தையில் மது விற்பனை நடப்பதால், பொது இடங்களில் மது அருந்தும் மது பிரியர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


















