பி.டி.ஆர் vs மரிய வில்சன் : தவெக அரசின் வெள்ளை அறிக்கையின் போதாமைகள் என்னென்ன?
`அப்செட், நோஸ்கட்... ரணகளமான பனையூர் கூட்டம் டு சீண்டிப் பார்க்கும் சி.வி சண்முகம்!' | கழுகார்
தேர்தலுக்கு பின் பனையூரில் நடந்த முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தொகுதிகளை வெல்ல வைத்த மா.செ-க்களுக்கு பாராட்டுக்கு பதிலாக ஷாக் கொடுத்து அனுப்பியிருக்கிறது த.வெ.க தலைமை.
‘234 மா.செ-க்களை நியமிப்பதால் உங்கள் அதிகாரம் குறையலாம். மாற்றுக் கட்சியினருக்கு பொறுப்பு வழங்கவிருப்பதால் சிலருக்கு பதவியே இல்லாமல் போகலாம்’ என்று வடிவேல் காமெடி பாணியில் அடுத்தடுத்து ஷாக் கொடுக்க... பொறுமையிழந்துபோன மா.செ-க்களால் கூட்டத்தில் ரகளை வெடிக்கும் சூழல் ஏற்பட்டதால் அவசர அவசரமாக கூட்டம் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. அன்பான முன்னாள் மாண்புமிகுவை தோற்கடித்த தவெக எம்.எல்.ஏ ஒருவர், ‘அதிகாரிங்களும் எங்களை மதிக்க மாட்றாங்க. கட்சி நிர்வாகிங்களும் எங்களை மதிக்க மாட்றாங்க. நிர்வாகிகள்கிட்ட சொல்லி கொஞ்சம் கண்டிச்சு வையுங்க...’ என சூரிய மாண்புமிகுவிடம் எகிறியிருக்கிறார்.
‘நீங்கல்லாம் நேத்து வந்தவங்க. உங்களுக்கெல்லாம் சீட்டு கொடுத்து ஜெயிக்க வச்சதே பெருசு. அமைதியா உட்காருங்க’ என அவர் காட்டமாக பதில் கொடுத்திருக்கிறார். இதனால் மக்கள் இயக்கப் புள்ளிகளும் அப்செட்... கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கும் நோஸ்கட் என பல்வேறு சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன.
மாவட்ட பிரிப்பில் பனையூரில் ஒரு பெரிய அணுகுண்டே வெடிக்கும் என்கின்றனர்.
வாசமான தலைவரின் சைக்கிள் கட்சியிலிருந்து அண்மையில் வெளியேறினார் ராஜ பிரமுகர். நடிகர் கட்சியில் விரைவிலேயே இணைவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், ‘அங்கே சில பொறுப்புகளை எதிர்பார்த்து காய்நகர்த்தியிருக்கிறார்’ ஆனால், ‘உங்களுக்கு பொறுப்பு தருவது குறித்து எந்தவித உத்திரவாதங்களும் தர முடியாது’ என கைவிரித்துவிட்டனராம்.
இதையடுத்து, ‘சைக்கிள் கட்சியில் தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் நாம். அப்படியிருக்கும்போது எந்தப் பதவியும் இல்லாமல் எப்படி கட்சியில் இணைய முடியும்?’ என தனது சகாக்களுடன் கலந்தாலோசித்து வருகிறாராம் அந்த ராஜ புள்ளி.
இதற்கிடையே, இலைக்கட்சியிலும் சார்பு அணியின் மாநிலச் செயலாளர் பொறுப்பு தருவதாக முதலில் சொன்னார்களாம். ஆனால், அந்த பொறுப்பை வாரிசுக்கு கொடுக்க சேலத்துக்காரர் முடிவு செய்திருப்பதால், அந்த வாய்ப்பும் கைநழுவிவிட்டது.
இதனால், ‘நடிகர் கட்சியிலிருந்து பதவியுடன் அழைப்பு வந்தால் செல்வோம். இல்லையென்றால் அரசியலிலிருந்து சிறிது காலம் விலகியிருப்போம்’ என இப்போதைக்கு முடிவெடுத்திருக்கிறாராம்.
இவர்மட்டுமல்ல... பனையூர் பக்கம் ஒதுங்கும் எந்த பிரமுகருக்கும் ‘பொறுப்பு கொடுக்கிறோம்’ என்ற உத்தரவாதத்தை நடிகர் கட்சி தர மறுப்பதால், பலரும் இணைப்பு ப்ளானை கிடப்பில் போட்டிருக்கிறார்களாம்.
தலைநகருக்கு அருகேயுள்ள ‘திரு’ மாவட்ட எல்லை வழியாக போதை பொருள்கள் சர்வ சாதாரணமாக நுழைவதாக மேலிட காவல் அதிகாரிகளுக்கு புகார் வந்திருக்கிறதாம். இதில் மாவட்ட காக்கி ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகங்கள் கிளம்பிய நிலையில், ரகசிய விசாரணை ஒன்றை நடத்தியிருக்கிறார்கள் சீனியர்கள்.
போதை பொருளைக் கடத்தி வரும் வாகனங்களின் பதிவு நம்பர்களை முன்கூட்டியே அனுப்பி அதை சோதனை செய்யாமல் பார்த்துக் கொள்கிறாராம் ஏ.டி.எஸ்.பி ரேங்கில் இருக்கும் காக்கி அதிகாரி ஒருவர்.
இதற்குக் கைம்மாறாக, போதை பொருள் கடத்தல் டீமிடமிருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொள்கிறாராம். ‘மாவட்டத்தில் இத்தனை களேபரங்கள் நடக்கின்றன. மாவட்ட எஸ்.பி என்ன செய்துகொண்டிருக்கிறார்’ என கடிந்துகொண்டிருக்கிறார்கள் காக்கி சீனியர்கள்.
எனவே போதை கடத்தலுக்கு துணைபோன அதிகாரியை விரைவிலேயே தூக்கியடிக்க ஆயத்தமாகிறதாம் காக்கி வட்டாரம். மேலும் மாநிலம் முழுக்க போதைப் பொருள் கடத்தலுக்கு துணைபோகும் காவல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட எஸ்.பி-க்களுக்கு நோட் அனுப்பவுள்ளார்களாம் சீனியர்கள்.
விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர், விரைவிலேயே த.வெ.க-வில் இணையவிருக்கிறார். அவரது ரூட் க்ளியராகிவிட்ட நிலையில், என்ன செய்வதென கையைப் பிசைந்து கொண்டிருக்கிறாராம் சி.வி சண்முகம்.
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்க தயாராகயில்லாத சி.வி.சண்முகம், ‘எடப்பாடியே கட்சியைவிட்டு நீக்கிவிட்டால், கொறடா பிடியிலிருந்து தப்பித்துவிடலாம்.

அதன்பிறகு தி.மு.க-விலோ, த.வெ.க-விலோ எம்.எல்.ஏ பதவியுடன் இணைந்துகொள்ளலாம்’ என கணக்குப் போடுகிறாராம். ஆகவேதான் எடப்பாடி பழனிசாமியை சீண்டும்படி பொதுவெளியில் தொடர்ந்து பேசத் தொடங்கியிருக்கிறார்.
விஷயமறிந்த எடப்பாடி பழனிசாமி, ‘சண்முகம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன். என்னை வந்து பார்க்காததால் அவருக்கு பொறுப்பும் கிடையாது’ என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.
இதற்கிடையே, ‘வண்டி வண்டியாக கட்சியினர் வெளியேறிவருவதால், இடைத் தேர்தலையே புறக்கணிக்கும் முடிவுக்கு தலைமை வந்தாலும் ஆச்சரியம் இல்லை’ என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.
தேர்தல் தோல்வியிலிருந்து மீள அமைப்பு ரீதியாக எக்கச்சக்க மாற்றங்களை மேற்கொள்ளவிருக்கிறது அறிவாலயம். தோல்வியைக் கண்டறியும் குழுவும் பெட்டி பெட்டியாக புகார் கடிதங்களைக் கொடுத்திருப்பதால் அதனையும் பரிசீலித்துவருகிறது தலைமை.
எந்த குழு, என்ன ரிப்போர்ட் கொடுத்திருந்தாலும் எடுக்கப்படவிருக்கும் முடிவுகளில் உதயநிதியின் பங்கு அழுத்தமாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
எனவே, விஷயமறிந்த உடன்பிறப்புகள் பலரும் உதயநிதியைச் சந்திக்க குறிஞ்சி இல்லத்துக்கு படையெடுக்கிறார்களாம். தென்மாவட்டங்களில் கனிமொழியின் எதிர்தரப்பு நிர்வாகிகள், கொங்கு பகுதியில் செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்ட நிர்வாகிகள் உதயநிதியை சந்தித்திருக்கிறார்கள்.

அப்போது, “தலைவர் இடம் கொடுப்பதால்தான் முன்னாள் மாண்புமிகுக்கள் பலர், ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் தொடங்கி சார்பு அணி பொறுப்புகள் வரையிலாக அனைத்தைப் பதவிகளிலும் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியிருந்தால் கட்சி எப்படி வளரும்? இது போதாதென்று மண்டலப் பொறுப்பாளர்களும் தங்களுக்குள் ஈகோ யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே, மா.செ-க்கள் மறுசீரமைப்புக்குப் பிறகு மண்டல வாரியாக நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும்” என உதயநிதியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
அனைத்தையும் பொறுமையாக கவனித்துக் கேட்ட உதயநிதி, ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றி உறுதியளித்திருக்கிறாராம்.















