முதல்வர் விஜய்க்கு செவித்திறன் கருவியை அனுப்பிய கோவை சமூக ஆர்வலர்; காரணம் என்ன?
சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயில்: அச்சங்கள் விலகும்... தோல்விகள் நீங்கி, வெற்றி உண்டாகும்!
சென்னையின் ஆன்மிக அடையாளங்கள் என்று சொன்னால் கபாலீஸ்வரர்கோயில், பார்த்தசாரதி கோயில், திருவொற்றீசர் கோயில் ஆகியவற்றைத் தவிர்க்க முடியாதோ அதேபோன்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆலயம்தான் காளிகாம்பாள் திருக்கோயில்.
சென்னை மக்கள் பலரின் குலதெய்வமாக விளங்கும் இந்த அன்னையின் ஆலயம் பழைமையும் பெருமையும் வாய்ந்தது. வாருங்கள் அந்த அன்னையின் ஆலயம் குறித்து அறிந்துகொள்வோம்.
ஆதியில் மீனவ மக்களின் காவல் தெய்வமாக இருந்தாள் இந்த அன்னை என்கிறார்கள். நெய்தல் நிலக் காமாட்சியாக பரதவர்களுக்கு திசை காட்டும் தேவியாக அன்னை திகழ்ந்தாள். அப்போது அவர்கள் காளிகா தேவிக்கு செந்தூரம் சாற்றி வழிபட்டனர் என்கிறது தல வரலாறு.
இப்போதும் இந்தத் தலத்துக்கு வந்து காளிகாதேவிக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து அதைப் பிரசாதமாகப் பெற்றுப் பயன்படுத்தி வந்தால் வெம்மை நோய் தணியும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணவரமும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்குக் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீகாளிகாம்பாள் சமேத ஸ்ரீகமடேஸ்வரர் ஆலயம் பாரிமுனை தம்புச்செட்டித் தெருவில் அமைந்துள்ளது. இங்கே தேவிக்கே சிறப்பு. மந்திரரூபிணியாக, மங்கல தேவியாக, மாமணி சக்தியாக, ஒளஷதப் பொருளாக இங்கே காளிகாம்பாள் வீற்றிருக்கிறாள்.
ஆதி பீட பரமேஸ்வரி என்று போற்றப்படும் காளிகாம்பாளின் இரு திருக்கண்களும் திருமகளும் சரஸ்வதியும் உறையும் திருவிடம் என்று போற்றப்படுகின்றன. இதனால் காளிகாம்பாளை தரிசிப்பவர்களுக்கு செல்வமும் ஞானமும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
ஆதியில் சென்னம்மாள் என்று வணங்கப்பட்ட இந்தத் தேவியின் பெயராலேயே இப்பகுதி உருவானது என்றும் ஒரு தகவல் உண்டு. விஜயநகர தெலுங்கு அரசர்கள் ஆட்சியில் போற்றக் கொண்டாடப்பட்ட இந்தக் காளியே சென்னப்ப நாயக்கருக்கும் குலதேவி என்கிறார்கள்.
இங்கு தல விருட்சம் மாமரம். தீர்த்தம் வங்கக்கடல். முற்காலத்தில் சென்னை ஜார்ஜ் கோட்டைப் பகுதியில் எழுந்தருளி இருந்த காளிகாம்பாள், கோட்டை விரிவாக்கம் கண்ட காரணத்தால் 1639-க்குப் பிறகு தம்புச்செட்டி தெருவுக்கு எழுந்தருளினாள் என்கிறது வரலாறு.

புராண காலத்தில் இந்திரன், குபேரன், வருணன், நாகலோக கன்னிகள், கடல் கன்னிகள் மற்றும் தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜன்ம புண்ணியங்களை அடைந்தனர் என்கிறது தலவரலாறு.
வீர பிரம்மேந்திரர் எனும் மகாஞானி வழிபட்ட தேவி இவள் என்றும் சொல்கிறார்கள். இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மகாமேரு மாபெரும் சக்தி கொண்டது.
இங்கு வந்து வழிபட்டாலே தோல்விகள் விலகி வெற்றிகள் கைகூடும் என்பது நம்பிக்கை. அந்நியரை வெற்றி கொள்ளப் போராடிய மராட்டிய வீரசிவாஜி இந்த அன்னையை வழிபட்டு அதன்பிறௌ பல வெற்றிகள் பெற்றார் என்றும் சொல்கிறார்கள்.
கருவறையில் காளிகாம்பாள் திருக்கரங்களில் பாசம், அங்குசம், நீலோற்பலம் ஏந்தியும் வரத முத்திரை காட்டியபடி அர்த்த பத்மாசனத்தில் மேற்குப் பார்த்து எழுந்தருளி இருக்கிறாள். மஹாலக்ஷ்மி, சண்டிகேஸ்வரி, சரஸ்வதி, ப்ரம்ம வித்யாம்பிகை, வைஷ்ணவி, தாக்ஷாயணி என ஆறு சக்திகளும் அம்பிகையின் திருச்சுற்றில் அமைந்திருப்பதும் விசேஷம்.
அவளின் திருப்பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் மனமுவந்து அமைத்த ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இந்தத் தலத்தில் வேண்டுவன அனைத்தும் குறைவின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
செவ்வாய்க்கிழமை மாலையில் ராகுகால வேளையில் காளிகாம்பாளைத் தரிசித்து தீபமேற்றி வழிபடுவதும், எலுமிச்சை மாலை சமர்ப்பித்து வழிபடுவதும் இங்கு விசேஷம். இதனால் தீராத பிரச்னைகள் தீரும். தெளிவான வாழ்க்கை உருவாகும்.

குறிப்பாக வைகாசி பிரமோற்சவ தினங்களில் அன்னை காளிகாம்பாளைத் தரிசித்தால் வெம்மை நோய்கள் யாவும் தீரும். காளி என்றால் வேண்டியவை யாவும் தருபவள் என்றும் அர்த்தம். காளிகாம்பாள் கோயில் சுற்றுப் பிராகாரத்தில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் பிரத்யங்கரா தேவி துடியான சக்தி கொண்டவள்.
இவளை வேண்டிக்கொண்டு புனித ரட்சையைக் கட்டிக்கொண்டால், உங்களை வாட்டும் கவலைகள், அச்சங்கள் யாவும் ஓடும். தீமைகள் யாவும் வீழும். ஏதோ ஒருவித அச்சத்தால் பயந்துகொண்டிருப்பவர்கள் இவள் சந்நிதிக்கு வந்து தரிசித்தாலே தேவையற்ற அச்சமும் குழப்பமும் தீரும் என்கிறார்கள். இங்கு மேற்கு நோக்கிய நிலையில் உள்ள அனுமனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று அன்னையையும் அருள்தரும் கமடேஸ்வரரையும் தரிசித்து வாருங்கள். வாழ்க்கையில் மிகப்பெரிய நல்மாற்றங்கள் உண்டாகும்.





















