செய்திகள் :

அரிசி, மசாலா, மாம்பழத்திற்கு 'நோ' - இந்திய விவசாய ஏற்றுமதிகள் வெளிநாடுகளில் நிராகரிக்கப்படுவது ஏன்?

post image

ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் அரிசி, மசாலாக்கள் நிராகரிப்பு, சீனாவின் இந்திய வரமிளகாய்களுக்கு நிராகரிப்பு... ஜப்பானில் இந்திய மாம்பழங்களுக்குத் தடை... சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இந்திய மசாலாக்களுக்குத் தடை...

- கடந்த சில காலங்களாகவே இந்தச் செய்திகள் திரும்பத் திரும்ப காதுகளை எட்டி வருகின்றன.

ஏன் இந்தத் தடைகள்?

பூச்சிகள் அண்டக்கூடாது... பூஞ்சை வந்துவிடக் கூடாது என்று தற்போது விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

அறுவடைக்குப் பின், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களில் இந்தக் கொல்லிகளின் மீதம் கொஞ்சம் இருக்கும்.

அரிசி
அரிசி

ஐரோப்பிய ஒன்றியம்: நெல் பூஞ்சைக் கொல்லி ட்ரைசைக்ளோசோல் (Tricyclazole). இதன் மீதம் ஏற்றுமதி செய்யும் அரசிகளிலும் கொஞ்சம் இருக்கும். இந்த மீதத்திற்கும் அனுமதிக்கப்பட்ட எஞ்சிய அளவுகள் உண்டு. இதற்கு 'எஞ்சிய அளவு வரம்புகள்' என்று பெயர்.

இதனால், இந்தியாவில் அரிசியில் ஒரு கிலோவிற்கு 3 மில்லி கிராம் அளவிற்கு ட்ரைசைக்ளோசோல் இருக்கலாம்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிமுறைப்படி, அரிசியில் ஒரு கிலோவிற்கு 0.01 மில்லி கிராம் அளவு மட்டுமே இருக்க வேண்டும். இது ஒரு உதாரணம் மட்டுமே.

இத்தகைய வழிமுறையால், இந்திய அரிசியில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சைக் கொல்லிகளின் மீதம் இருக்கின்றன என்று ஐரோப்பிய ஒன்றியம் இந்திய அரிசிகளை நிராகரிக்கிறது.

சீனா: இந்த மாதம் சீனா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வரமிளகாய்களில் மெத்தமிடோபாஸ் என்னும் ஒரு வகை ரசாயனம் இருந்ததாக அவற்றை ரத்து செய்தது. இந்த ரசாயனம் இந்தியாவில் விவசாயிகள் பயன்படுத்த அனுமதிக்காத ரசாயனம் ஆகும்.

அதே போல, சீனா, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாஸ்மதி அல்லாத 70 கன்சைன்மென்ட் அரிசிகளையும் நிராகரித்துள்ளது. இதற்கு சீனா சொல்லும் காரணம் - இந்தியாவில் இருந்து வந்த அந்த அரிசிகள் மரபணு மாற்றப்பட்ட அரிசிகள் என்பதாகும். ஆனால், அதை இந்தியா முற்றிலும் மறுக்கிறது.

வரமிளகாய்யையும் சரி... அரிசிகளையும் சரி... சீனா இந்தியாவில் இருந்துதான் அதிகம் இறக்குமதி செய்கிறது. அப்படியிருக்கையில், இந்தத் திடீர் நடவடிக்கைகளுக்குக் காரணம், சீன அரசு தங்களுடைய சோதனைகளைத் தற்போது தீவிரப்படுத்தி இருக்கிறது.

மாம்பழம்
மாம்பழம்

ஜப்பான்: ஜப்பானை எடுத்துக்கொண்டால், பூச்சி கட்டுப்பாட்டிற்கான நடைமுறைகளை இந்தியா சரியாகப் பின்பற்றவில்லை என்று இந்திய மாம்பழங்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது.

20 ஆண்டுக்கால ஏற்றுமதி வரலாற்றில், ஜப்பான் இந்திய மாம்பழங்களைத் தடை செய்வது இதுவே முதல் முறை ஆகும்.

முன்பு, இதே காரணத்திற்காக இந்திய மாம்பழங்களைத் தடை செய்திருந்தது ஜப்பான். ஆனால், இந்தியா பூச்சி கட்டுப்பாட்டு நடைமுறை முதல் ஏற்றுமதி வரை அனைத்தையும் மேம்படுத்திய பின், 2006-ம் ஆண்டு இந்தத் தடையை விலக்கியது ஜப்பான். ஆனால், இப்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், ஹாங்காங்: அனுமதிக்கப்பட்ட அளவை விட, இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் மசாலாக்களில் எத்திலீன் ஆக்சைடு அதிகம் உள்ளது என்று சிங்கப்பூர், ஹாங்காங் குரல் எழுப்பின.

நுண்ணுயிர் மாசு (Microbial Contamination) ஏற்பட்டுவிடக் கூடாது என்று பயன்படுத்தும் ரசாயனம் இது.

நாட்டின் முதுகெலும்பே விவசாயம் என்று கூறும் ஒரு நாட்டின் விவசாயப் பொருள்கள் தொடர்ந்து நிராகரிப்புகளையும், தடைகளையும் சந்திக்கிறது என்றால், அதைக் கடந்து போய் விடக் கூடாது.

என்னென்ன பிரச்னைகள்?

தொடர்ச்சியாக நிராகரிப்புகளையும், தடைகளையும் இந்திய விவசாயப் பொருள்கள் சந்திக்கும் போது...

இந்தியா
இந்தியா

முதல் மற்றும் முக்கியமாக, இந்தியா பிரான்ட் மற்றும் பொருள்களின் மீதான நம்பிக்கை வெகுவாக குறையும். இதனால், போட்டியாளர்கள் கைகளுக்கு சந்தை சென்று, அவர்கள் வேகமாக முன்னேறுவார்கள். பொருளாதார ரீதியாக, இது இந்தியாவிற்குப் பின்னடைவாக அமையும்.

அடுத்ததாக, வளர்ச்சி. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருள்களின் அளவும் குறையும்.

இந்தியா 2024-25 நிதியாண்டில், விவசாயப் பொருள்களை மட்டும் 51.12 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது என்று இங்கு கவனிக்கத்தக்கது.

இந்தத் தொகையும், அதன் அளவும் ஒவ்வொரு ஆண்டு அதிகரிக்க வேண்டுமே தவிர குறையக் கூடாது. அதுதான் இந்தியப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும்.

ஏற்றுமதியாகும் பொருள்கள் தடையானாலோ, நிராகரிப்பானாலோ, அதன் செலவுகள் ஏற்றுமதியாளர்களின் தலையில்தான் வந்து விழும். இது அந்தத் துறைக்கே சற்று சறுக்கலை ஏற்படுத்தும்.

அடுத்ததாக, சர்வதேச சந்தையில், ஒப்பந்தங்களின்போது அடித்துப் பேரம் பேச இந்தியாவால் முடியாது. இது பிற நாடு சொல்வதைக் கேட்டுகொள்ளும் நிலைக்கு உள்ளாக்கும்.

இந்தியா வளர்ந்து வரும் நாடு. பிற நாடுகளின் நிபந்தனைகளுக்கு உள்ளாகும் போது, அது இந்தியாவிற்கு அவ்வளவு சாதகமாக அமையாது.

இந்தப் பிரச்னைகளைத் தடுக்க இந்தியா தன்னைத் தானே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏற்றுமதி - இறக்குமதி
ஏற்றுமதி - இறக்குமதி

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

நாட்டிற்கு நாடு நடைமுறைகளும், வழிமுறைகளும் மாறுபடும். இதனால், ஒவ்வொரு நாட்டின் விதிமுறைகளைத் தெளிவாக ஏற்றுமதியாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட பொருள்கள், சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாடுகளும் கொல்லிகளின் எஞ்சிய அளவு வரம்புகளைக் குறைத்துக்கொண்டு வரும்போது, இந்தியா மட்டும் 2024-ம் ஆண்டு அதன் அளவை அதிகரித்துள்ளது.

இதை வைத்துதான், இந்திய விவசாயிகள் பொருள்களை உற்பத்தி செய்வார்கள். இதுதான் ஏற்றுமதிகளுக்குப் பெரிய சறுக்கலை ஏற்படுத்துகிறது.

இதனால், ரசாயன பயன்பாட்டிலும், எஞ்சிய அளவு வரம்புகளையும் உலகத் தரத்திற்கு இந்தியாவில் மாற்ற வேண்டும்.

இந்திய அரசு ஏற்றுமதிக்கு முன்னான மாதிரி எடுத்தல் மற்றும் ஆய்வகப் பரிசோதனையை அப்டேட்டாக மாற வேண்டும். அந்தந்த நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதிகளை செக் செய்வதை விட, இந்தியா ஏற்றுமதி செய்யும் முன் அந்தப் பொருள்களை அதை விட சோதனை செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு 'சரியான விவசாயப் பழக்க வழக்கங்களை' (Good Agricultural Practices) சொல்லித் தர வேண்டும். இதற்கு மேலே பார்த்த சீன வரமிளகாய் ஏற்றுமதி நல்ல எடுத்துக்காட்டு.

இந்தியாவில் உரத்துறையை இன்னும் ஒழுங்குபடுத்த வேண்டும். அனுமதிக்கப்படாத ஒரு வேதியியல் பொருள் இந்திய வரமிளகாய்களில் இருக்கிறது என்றால் அது எவ்வளவு ஆபத்தானது.

அதனால், அவற்றை உரத்துறையை நிச்சயம் ஒழுங்குபடுத்த வேண்டும்.

உணவு
உணவு
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொருள்கள் தடை, நிராகரிப்பு என்று பேசுகிறோம். அதே நேரத்தில்தான், அந்தப் பொருள்களைத்தான் இந்தியாவில் நாம் உண்கிறோம் என்பதை மறுக்கவும் முடியாது... மறக்கவும் முடியாது.

இது நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது, ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம்.

இந்திய விவசாயப் பொருள்களில் உள்ள குறைபாடுகளை வெளிநாடுகள் கண்டுபிடிக்கின்றன என்றால், இங்கே உள்ள உணவு பாதுகாப்புத் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்கிற கேள்விகள் எழுகிறது.

இதனால், வெளிநாடு, பொருளாதாரம் என்று பார்ப்பதை விட, உள்நாட்டு மக்களின் உடல்நலத்திற்காகவும் இந்திய அரசு கொல்லிகள், ரசாயனங்களின் பயன்பாட்டை நிச்சயம் முறைப்படுத்த வேண்டும்.