டெலிவரி ஊழியர்கள்: "சுகாதாரக் காப்பீடு டு ஓய்வூதியம் வரை" - சமூகப் பாதுகாப்புச்...
அரியலூர் திருமழபாடி வைத்தியநாதர் கோயில்: குழிகளாக நவகிரக சந்நிதி... நோய் தீர்க்கும் ஈசன்!
காவிரிக்கரை எங்கும் ஈசன் கோயில் கொண்ட தலங்கள் ஏராளம். தேவார மூவரும் பாடிப் பரவி அத்தலங்கள் மிகவும் சிறப்பும் மகிமையும் வாய்ந்தவை.
இத்தலங்களுக்குச் சென்றாலும் அங்கு வாழ்ந்தாலும் மனதால் நினைத்தாலுமே புண்ணிய பலன்கள் சேரும். அப்படி ஒரு தலம்தான் திருமழபாடி.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் இருந்து புறப்பட்டு நன்னிலம், திருவீழிமிழலை, திருவாஞ்சியம் போன்ற தலங்களைத் தரிசித்து வந்தார்.
ஒருநாள் இரவு அவர் கனவில் தோன்றிய ஈசன், ‘மழபாடி மறந்தனையோ?’ என்று கேட்க மறுநாள் சுந்தரர் திருமழபாடி நோக்கி ஓடினார். அங்கே கோயில் கொண்டிருக்கும் ஈசனைக் கண்டு கண்ணீர் மல்கினார்.
அங்கே ஈசன் திருமேனி அழகைக் கண்டு தம்மை மறந்து, ‘பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.

பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்
இனியாரை நினைக்கேனே
என்ற இப்பதிகத்துள், ஈசனே உம்மையல்லால் இனி நான் யாரை நினைப்பேன் என்று பொருள்படும்படிப்பாடி உருகினார். சுந்தரர் மட்டுமல்ல சம்பந்தரும், அப்பர் சுவாமிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.
அரியலூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ளது திருமானூர். திருமானூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருமழபாடி திருத்தலம். பனைமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட இத்தலத்தில்தான் நந்தி பகவான் சிவகணங்களின் தலைமையை ஏற்றார்.
அன்றுமுதல் கயிலாயத்தின் காவலனாகவும் ஆனார் என்கிறது தலபுராணம். எனவே பதவி உயர்வு வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டுப் பயன்பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
அதேபோன்று இங்கு நடைபெறும் நந்தி திருமணமும் விசேஷமானது. ‘நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்’ என்ற சொல்வழக்கும் உண்டு. திருமண வரம் வேண்டுபவர்கள் இங்கு நடைபெறும் நந்தி திருமணத்தைத் தரிசித்தால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.

இங்குள்ள ஈசனுக்கு வைத்தியநாதர் என்பது திருநாமம். சந்திரனின் நோயைத் தீர்த்து அருளிய ஈசன் என்பதால் இங்கு வந்து ஈசனையும் அம்பிகையையும் வணங்கினால் சரும நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
அம்பிகை இங்கு சுந்தராம்பிகையாகக் கோயில் கொண்டுள்ளாள். பெயருக்கேற்ப அம்பிகையின் பேரெழில் நம் மனதைக் கொள்ளை கொள்ளும். இங்கு வரும் பக்தர்கள், சுவாமிக்கு வேஷ்டியும் சம்பங்கி மாலையும், சுந்தராம்பிகைக்கு மாம்பழ நிறத்து பட்டுப் புடவையும் சிவப்பு ரோஜா மாலையும் சாத்தி வழிபடுவதால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்தத் தலத்தில் பாலாம்பிகையும் தனிச்சந்நிதி கொண்டிருக்கிறாள். இந்தத் தலத்தில் திருமணக்கோலத்தில் இருந்த இறைவனைத் தரிசிக்க வந்த அம்பிகை, சுவாமியின் அழகில் லயித்தவராக இந்தத் தலத்திலேயே தங்கிவிட்டார்.
கிழக்கு நோக்கிய சந்நிதிகளில் ஐயன் வைத்தியநாதரும் அன்னை சுந்தராம்பிகையும் திருக்காட்சி தர, பாலாம்பிகை தெற்குப் பார்த்த சந்நிதியில் அருட்காட்சி தருகிறாள்.
மேலும் இந்தக் கோயிலில் காத்தியாயினி அம்மனும் மயில் வாகனத்தில் காட்சி தருவது குறிப்பிடத்தக்க விசேஷம்.
விசேஷமாக இந்தக் கோயிலில் விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சி தருகிறார். மேலும் இந்தத் தலத்தில் நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு நந்தி தேவர்கள் திருக்காட்சி தருகிறார்கள்.

மூன்று குழிகளே நவகிரக சந்நிதி
இந்தக் கோயிலில் மூன்று குழிகளே நவகிரகங்களாக வழிபடப்படுகின்றன. ஒருமுறை நவகிரகங்களுக்கு ஆணவம் ஏற்பட்ட காரணத்தால் ஈசன் இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை அகற்றினார் என்றும் அன்றுமுதல் அந்தத் தலத்தில் மூன்று குழிகளே நவகிரக சந்நிதியாக உள்ளன என்றும் சொல்கிறார்கள்.
சிபி சக்கரவர்த்தியின் நவகிரக தோஷமும் நீங்கிய தலம் இது என்கிறார்கள். சனிக்கிழமைகளில் இந்தக் குழிகளுக்கு முன்பாக எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதிகம்.
இங்குள்ள, ஒரே கல்லினால் ஆன சோமாஸ்கந்த மூர்த்தமும், ரிஷப வாகனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியும் சிற்பச் சிறப்பினை விளக்குவதாகத் திகழ்கின்றன. வேறொரு சிறப்பும் உண்டு இந்தக் கோயிலில்.
ஆம்! இந்தக் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் ஜுரஹரருக்கு புழுங்கலரிசி சாதமும் மிளகு ரசமும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தீராத காய்ச்சலும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இப்படிப்பட்ட புராணச் சிறப்பு பெற்ற தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாழ்க்கை மாறும். வளமும் நலமும் சேரும்.




















