அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: ``தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்" – அம...
அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: ``தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்" – அமைச்சர் ரமேஷ்
தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ``சட்டமன்றத்தில் ஜனநாயக முறைப்படி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தேவையற்ற மற்றும் அவைக்குறிப்பிற்கு மாறான வார்த்தைகள் இடம்பெறும்போது, மரபுப்படி அவைத் தலைவரால் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன.
கடந்த ஆட்சியில் கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், தற்போதைய ஆட்சியில் ஜனநாயகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவை நடத்தப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை எழுப்புவதைத் தவிர்த்து, கூச்சலிடுவதிலும், அவையின் மாண்பைக் குறைக்கும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால், ஆளுங்கட்சி தரப்பில் மக்கள் பிரச்னைகளுக்கும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் அமைச்சர்கள் அனைவரும் உரிய பதில்களைத் தொடர்ந்து அளித்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிதி நிலைமையை ஆராயாமல் விளம்பரத்திற்காக மட்டுமே அறிவிக்கப்பட்டன.
இதில் தொடங்கப்படாத திட்டங்கள் மற்றும் தேவையற்ற செலவினங்கள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், அறநிலையத்துறையில் மேற்கொள்ளப்படும் கான்பிடென்ஷியல் நடவடிக்கைகளையும், தணிக்கை விவரங்களையும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் அதிகாரிகளைப் பயன்படுத்தி வேவு பார்ப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தவறுகள் செய்தவர்கள் பயத்தின் காரணமாகவே இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நிச்சயமாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முறைகேடுகள் மற்றும் கையூட்டுகளைத் தடுக்க 80% முதல் 90% வரை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கோவிலின் தினசரி கொள்ளளவைக் காட்டிலும் வார இறுதி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவதால் சிரமங்கள் ஏற்படுகின்றன. இவை அனைத்தையும் படிப்படியாகச் சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கோவில்களின் புனிதத்தைப் பாதுகாக்கவும், மூலவர் மற்றும் விக்கிரகங்களின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுக்கவும் முதற்கட்டமாக 50-க்கும் மேற்பட்ட முதன்மை திருக்கோவில்களில் பாதுகாப்பான ‘மொபைல் கவுண்டர்கள்’ உருவாக்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி திருக்கோவிலைப் போலத் தமிழகக் கோவில்களிலும் பக்தர்கள் கைபேசிகளைத் தவிர்த்து, அமைதியான முறையில் இறை தரிசனம் செய்ய ஒத்துழைக்க வேண்டும்.
கே. என். நேரு ரேஷன் அரிசி சாப்பிடுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால்தான், முதல்வர் ரேஷன் கடைகள் மூலமாகத் தரமான பொருட்களையும், நல்ல அரிசியையும் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்பதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்" என்றார்.













