மேற்கு வங்கம்: தனித்து போட்டியிடும் காங்கிரஸ்; உருவாகும் நான்கு முனைப்போட்டி - ப...
அவதூறு வழக்கு: ``டி.ஆர் பாலுவை குறுக்கு விசாரணை செய்தேன்" - அண்ணாமலை
அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தபோது திமுக ஃபைல்ஸ் என்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, திமுக தலைவர்களின் சொத்து விவரம் என்றப் பெயரில் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக எம்.பி டி.ஆர்.பாலு-வின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரான தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``நீதியின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. சாமானிய மனிதர்கள் நம்முடைய உரிமைக்காகப் பேசும் பொழுது, நம்முடைய வழக்கை நாமே எடுத்து வாதாட முடியும் என்பதற்கு இன்று நடந்த சம்பவம் ஒரு சாட்சி. எவ்வளவு பெரிய மனிதர்களாக, எப்படிப்பட்ட பொறுப்புகளில் இருந்தாலும் கூட, ஒரு சாமானிய மனிதன், தான் சொல்லியிருக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், வாதாடலாம்.
இன்று நீதிமன்றத்தில் டி.ஆர் பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்தோம். வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதால் அனைத்து விவரங்களையும் சொல்ல முடியாது. இருப்பினும், சேதுசமுத்திரத் திட்டம், சாராய ஆலைகள், குடும்பம் நடத்தக்கூடிய நிறுவனங்கள், இன்று அவர் நீதிமன்றத்திற்கு வந்த கார் எந்த நிறுவனத்தின் பெயரில் இருக்கிறது, அவருடைய கடன் போன்ற பல கேள்விகளை கேட்டுள்ளோம்

விசாரணையின் போது, நான் என் மனைவியின் பெயரில் சொத்து வாங்கியிருப்பதாக ஒரு புதிய அவதூறை டி.ஆர்.பாலு கிளப்பினார். என் மனைவி என்ன படித்துள்ளார், எங்கே வேலை பார்க்கிறார், அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று எதுவுமே தெரியாமல், நான் ஊழல் செய்து சொத்து வாங்கியதாகக் கூறினார். நாங்கள் வாங்கியிருப்பது ஒரு விவசாய நிலம். அதற்கு முறையான வருமான வரி கட்டப்பட்டுள்ளது, வங்கியில் 2.5 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. எதுவுமே தெரியாமல் என் மனைவி மீது அவதூறு பரப்பியதற்காக, அவர் மீது நாளை மற்றுமொரு புதிய அவதூறு வழக்கை எனது வழக்கறிஞர்கள் மூலமாகத் தொடுக்க இருக்கின்றேன்.
அந்த வழக்கின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் நானும் என் மனைவியும் சம்பாதித்த சம்பளம், வாங்கிய கடன் என அனைத்து வங்கி விவரங்களையும் பொதுவெளியில் வெளியிடப் போகிறேன்.
நான் சென்னையில் தங்கி இருப்பதற்கு நண்பர்கள் வாடகை கொடுக்கிறார்கள் என்பதையும் அவர் அவதூறாகச் சொன்னார். நான் சென்னையில் இருப்பது பாஜக மாநிலத் தலைவர் என்கின்ற பொறுப்பினால் மட்டுமே.
எனக்குச் சென்னையில் தொழிலோ வீடோ கிடையாது. கட்சிப் பணிக்காக நண்பர்கள் கொடுத்த பணத்தைக் கட்சி எப்படிச் செலவு செய்தது என்பதை அந்தப் புதிய வழக்கின் மூலம் தெளிவுபடுத்துவேன். நேர்மையான அரசியலுக்காக இந்தக் கடினமான பாதையில் பயணித்துத்தான் ஆக வேண்டும்.
நம்முடைய ஒற்றை இலக்கு திமுக-வை வீழ்த்துவது மட்டுமே. அந்தப் பணியில் இருந்து கவனம் சிதறக் கூடாது. டி.ஆர்.பாலுவுக்கு மார்ச் மாதம் முழுவதும் நாடாளுமன்றப் பணிகள் இருப்பதால், ஏப்ரல் 7-ம் தேதிக்கு அடுத்த குறுக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது." என்றார்.













