நான் வந்ததுக்கு அப்புறம் தான் அந்த வீடு வீடாக மாறுச்சு..! - Salmanul & Megha Sal...
"விஜய் சாருக்காக நான் வெரி ஃபர்ஸ்ட் எழுதின ஸ்கிரிப்ட் இன்னும் இருக்கு!" - ATM இயக்குநர் பரதன் பேட்டி
இயக்குநர் பரதன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அழகிய தமிழ் மகன்'.
நம் சினிமா விகடன் ரீவைண்ட் தொடருக்காக இந்த வாரம் 'அழகிய தமிழ் மகன்' படத்தின் சுவாரஸ்யக் கதைகளைக் கேட்டறிவதற்கு இயக்குநர் பரதனை சந்தித்தோம்.

நம்மிடையே பேசியவர், "படத்தின் டைட்டில் கார்டில் 'இனிய தளபதி', 'இதய தளபதி', 'இளைய தளபதி' எனப் போட்டிருப்பேன். தொடக்கத்திலேயே ஆடியன்ஸை இம்ப்ரெஸ் பண்ணனும்ங்கிறதுதான் இதனுடைய ஐடியா !
விஜய் சாருடைய குணாதிசயங்களுக்கேத்த மாதிரி அந்த டைட்டிலை போட்டோம். அதைப் பார்த்து அவரும் ஹாப்பி ஆனார். அவருக்கு 2007-ம் ஆண்டில்தான் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுச்சு.
சரியாகச் சொல்லப்போனால், எங்களுடைய படப்பிடிப்பு நடந்திட்டு இருக்கும்போதுதான் டாக்டர் பட்டம் கொடுத்தாங்க. டாக்டர் பட்டம் வாங்கிய பிறகு வெளிவருகிற முதல் படம் இது என்பதால, டைட்டில்ல டாக்டர்னு போடலாம்னு ப்ளான் பண்ணினோம்.
இதை நானே அவர்கிட்ட 'யூஸ் பண்ணிக்கலாம். நல்லா இருக்கும்'னு சொன்னேன். அவரும் அதுக்கு ஓகே சொல்லிட்டாரு." என்றவர், "'கில்லி' படம் முடிவு பெறவிருந்த சமயத்துல நான் விஜய் சாருக்கு ஒரு கதை சொன்னேன். அந்தக் கதை அவருக்குப் பிடிச்சதும், அதை அப்படியே எஸ்.ஏ.சி சார்கிட்ட சொல்ல சொன்னாங்க.
அவருக்குமே என்னுடைய கதை ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, சூழ்நிலைகள் காரணமாக அந்தக் கதை படமாக உருவாகல.
பிறகு விஜய் சார் 'மதுர' படத்துல நடிக்கும்போது என்னை வசனம் எழுதுவதற்கும் கூப்பிட்டார். இயக்குநர் எஸ்.கே. ஜீவா, விஜய் சாருக்கு ஒரு கதை சொல்லியிருக்கார்.
அவர் சொன்ன இந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதை விஜய் சாருக்கு பிடிச்சிடுச்சு. பிறகு என்னை அந்தப் படத்தை இயக்க சொன்னாங்க. படத்தினுடைய இடைவேளை காட்சியில நான் சில மாற்றங்கள் சொன்னேன்.

ரைட்டர்களை பொறுத்தவரையில், அவ்வளவு சீக்கிரம் கதையில மாற்றத்தைச் செய்திட மாட்டாங்க. ஆனா, ஜீவா சார் நல்ல விஷயங்களை எடுத்துகிட்டு கதையில மாற்றங்கள் செய்தார்.
ஆனா, விஜய் சாருக்காக நான் பண்ணின ஃபர்ஸ்ட் கதையை இப்போ வரைக்கும் வச்சிருக்கேன்." என்றார். "'அழகிய தமிழ் மகன்' படத்துல வர்ற கவிதை காட்சியை பார்த்திபன் சார்தான் எங்களுக்கு எழுதிக் கொடுத்தாரு.
அப்போ, கலைஞர், பார்த்திபன் சார் எல்லாம் ஒரு நிகழ்வுக்குப் போயிருக்காங்க. அங்க திடீரென மின்சாரம் கட் ஆகிடுச்சு. எல்லோரும் 'டார்ச் லைட் எடுங்க'னு சொல்லிட்டு இருக்கும்போது பார்த்திபன் சார் 'சூரியனுக்கே டார்ச்சா'னு ஒரு கமென்ட் போட்டிருக்கார்.
அப்போ இந்த விஷயம் பெரும் பேசுபொருளானது. இதை விஜய் சாருமே கேள்விப்பட்டிருந்தார்.
பிறகு, கவிதை சொல்லப்படுகிற அந்தக் காட்சியை அவர் எழுதித் தர்றதுக்கு கேட்டோம். அப்படி அவர்தான் அந்தக் காட்சியை எழுதினார்!" என்றவர், " இந்தப் படத்துல வர்ற 'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' பாடலை வாலி சார் எழுதினார்.
அந்தப் பாடலை ரஹ்மான் சார் கம்போஸ் செய்ய வாலி சார் எழுதினாரு. இந்தப் பாடலை எழுதும்போது வாலி சார், 'நான் எழுதும் வரிகள் ம, மு வரிசையில் தொடங்கி, அதை ரஹ்மான் பாடினால், நிச்சயமாக வெற்றி பெறும்' என்றார்.
இவங்க காம்போவுல வந்த 'முக்காலா முக்கபுலா', 'முஸ்தபா முஸ்தபா' போன்ற ம வரிசை பாடல்களெல்லாம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கு. பிறகு 'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' பாடல் வரிகளைப் வாலி சார் எழுதினார்.

அதை எழுதி முடிச்சதும் ரஹ்மான் சார் லண்டன் கிளம்பி போயிட்டாரு. அங்கதான் இந்தப் பாடலின் ரெக்கார்டிங் நடந்தது.
ரெக்கார்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி ரஹ்மான் சார் எனக்கு கால் பண்ணி 'வாலி சார் ம வரிசையில பாடல் தொடங்கினால், வெற்றினு சொன்னாரே...அதுனால தொகையறாவாக 'முன்னால் முன்னால் முன்னால் வாடா, உன்னால் முடியும் தோழா'ங்கிற வரியை சேர்த்துக்கலாமா'னு கேட்டு சேர்த்துகிட்டாரு.
பாடலுக்காக நடனங்களை கோரியோகிராஃபர்கள் அழகாக அமைத்துக் கொடுத்தாங்க. 'வளையப்பட்டி' பாடலை தினேஷ் மாஸ்டர் கோரியோ பண்ணினாரு. அந்தவொரு பாடலுக்காக, ஒட்டுமொத்த டான்சர்ஸுக்கும் மொட்டை போட்டோம்." எனப் பேசினார்.



















