`ராஜா அப்படிப்பட்டவர் அல்ல; தவறான கணிப்பில் இப்படி...' - சர்ச்சை சம்பவம் குறித்த...
எங்களுக்கு மட்டும் 18% வரி; அமெரிக்க விவசாயிகளுக்கு வரி இல்லை - ஏன்?| நாளை விவசாயிகள் போராட்டம்
இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 10 நாள்கள் ஆகிவிட்டன.
இதுவரை எந்த ஒப்பந்தத்திலுமே விவசாயிகளின் நலனை பிரதமர் மோடி விட்டுக்கொடுத்ததில்லை... இந்த ஒப்பந்தத்திலும் அப்படித் தான் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பெருமையுடன் தெரிவித்திருந்தார்.
ஆனால், அமெரிக்கா - இந்தியா ஒப்பந்தத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் நாளை (பிப்ரவரி 12) போராட்டத்தை அறிவித்துள்ளன விவசாய சங்கங்கள்.
இவர்கள் தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து தொழிற்சங்கங்களும் போராட்டம் நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
'விவசாய நலன் சார்ந்த ஒப்பந்தத்திற்கு எதிராக ஏன் இந்தப் போராட்டம்?' என்கிற கேள்வியோடு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரனிடம் பேசினோம்.
"இந்தியா சிறு, குறு விவசாயிகள் நிறைந்த நாடு.
ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் விவசாயிகள் சராசரியாக 500 - 1,000 கணக்கிலான ஏக்கர் நிலங்களை வைத்திருப்பார்கள்.
அந்த மாதிரியான விவசாயிகளுக்குத் தான் இப்போது மத்திய அரசு இந்திய சந்தையின் கதவைத் திறந்துவிட்டுள்ளது.
இவர்கள் இந்திய சந்தைக்குள் வந்ததும் மிகக் குறைந்த விலைக்கு அவர்களது உற்பத்திகளை விற்கத் தொடங்குவார்கள்.
மேற்கத்திய கலாச்சாரத்தின் மீது ஏற்கெனவே இந்தியர்களுக்கு அதிக மோகம். அதனால், அவர்களது பொருள் இந்தியர்களை நன்கு ஈர்க்கும். இத்துடன் குறைந்த விலைக்கும் விற்பதால், மக்கள் அவர்களது பொருள்களை அதிகம் வாங்க ஆரம்பிப்பார்கள்.
சிறு, குறு விவசாயிகளான நம் மக்களால் அமெரிக்க இறக்குமதிகளோடு போட்டிப்போட முடியாது. அதன் விளைவாக, நம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிடுவார்கள்... மாடுகளையும் விற்றுவிடுவார்கள்.
அப்போது அவர்கள் மட்டுமே இந்திய சந்தையில் இருப்பார்கள். ஆனால், விலை தாறுமாறாக மாறியிருக்கும். சந்தையின் மோனோபாலியாகவே மாறிவிடுவார்கள்.

நம் விவசாயிகளால் அமெரிக்க விவசாயிகளோடு ஏன் போட்டி போட முடியாது?
அமெரிக்க விவசாயிகளை விவசாயிகள் என்று சொல்வதை விட, நிறுவனங்கள் என்று சொல்லலாம். அத்தனை ஏக்கரில் நிலம் வைத்திருப்பார்கள்.
அதனால், அவர்கள் ஒரு கிலோ அரிசியை ரூ.25-க்கு கூட விற்கலாம். ஆனால், இதை நம் விவசாயிகளால் செய்ய முடியாது.
மேலும், அந்த விவசாயிகளுக்கு அவர்களது அரசாங்கம் பெரியளவில் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வசதியும் இங்கு இல்லை.
ஆக, இங்கே சமப் போட்டியே அமையாது.
இங்கு இருந்து அமெரிக்கா செல்லும் பெரும்பாலான பொருள்களுக்கு 18 சதவிகிதம் வரி தொடர்கிறது. ஆனால், அங்கிருந்து இங்கு வரும் பல பொருள்களுக்கு ஒன்று வரி குறைக்கப்பட்டிருக்கிறது அல்லது முழுவதும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது எப்படி நியாயம் ஆகும்?
நமக்கு 18 சதவிகித வரி என்றால், அமெரிக்க பொருள்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவிகித வரியாவது விதிக்க வேண்டாமா?

இந்த விஷயத்தில் மட்டுமல்ல... வேளாண் சட்டங்கள், எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிக்கையை அமல்படுத்தாதது, இன்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்காதது என்று இந்த அரசு தொடர்ந்து விவசாயிகளின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.
நாளைய போராட்டத்தின் நோக்கம் - அமெரிக்காவில் இருந்து விவசாயப் பொருள்களின் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும். இதை நிச்சயம் மத்திய அரசு செய்ய வேண்டும்". என்றார்.



















