யார் துரோகி? TTV தினகரன் Vs சசிகலா நடப்பது என்ன? | Political Pulse
அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?
குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர்.
இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தது அதானி குழுமம்.
இந்தச் சம்பவம் 2020-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2021-ம் ஆண்டு ஜூலை வரை நடந்தது என்று 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது.

இவரது பதிவுகள் அதானி குழுமத்தின் புகழைக் கெடுப்பதோடு, முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அதானி குழுமம் புகார் எழுப்பியிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டை ரவி நாயர் மறுத்து வந்தார். பொது வெளியில் இருக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே தனது பதிவுகளும், செய்திக் கட்டுரைகளும் எழுதப்பட்டது என்று வாதாடினார் இவர்.
இந்த வழக்கிற்கான தீர்ப்பைச் சமீபத்தில் வெளியிட்டது குஜராத் நீதிமன்றம்.
அந்தத் தீர்ப்பில், "குற்றம் சாட்டப்பட்டவரின் பதிவுகள் மற்றும் செய்திக் கட்டுரைகள் எந்தவொரு ஆய்வுமின்றி வெளியிடப்பட்டுள்ளது.
அவை அதானி குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறது. இது அதானி குழுமத்தின் புகழைக் கெடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
அதனால், நாயர் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


















