நெல்லை: SIPCOT நில எடுப்பிற்கு இழப்பீடு தர மறுப்பு; தலைகீழாக நின்று போராடிய ஓய்வ...
ஆந்திரா: திருடிய பணத்தில் சொகுசு கார், வெளிநாட்டுப் பயணம்; வெளியான எஞ்சினியரின் ரகசிய வாழ்க்கை
ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பூட்டை உடைத்து திருட்டு நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்துகொண்டே இருந்தன. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வந்தனர். இதில் தீவிர விசாரணைக்குப் பிறகு காக்கிநாடாவைச் சேர்ந்த சன்னி என்பவரைக் கைது செய்தனர்.
சன்னியைக் கைது செய்து விசாரித்தபோது போலீஸாரே அதிர்ச்சியடைந்தனர். சன்னி முதுகலைப் பட்டம் முடித்துவிட்டு ஐதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அந்த வேலையை உதறிவிட்டு இது போன்ற இரவுத் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

திருடிய பணத்தில் பி.எம்.டபிள்யூ. கார், வெளிநாட்டுப் பயணம் எனச் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். பல முறை வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். சன்னியிடமிருந்து 700 கிராம் தங்க நகைகள், 3.8 கிலோ வெள்ளி போன்றவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் சங்க பிரதா பக்ஷி கூறுகையில், ''கைது செய்யப்பட்டுள்ள சன்னி 15 வயதாக இருக்கும்போதே பூட்டை உடைத்து திருடியதாகக் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த சிறைக்கு அனுப்பப்பட்டான்.
அங்கிருந்து விடுதலையான பிறகும், காக்கிநாடா, சரபவரம், ராமச்சந்திரபுரம், இந்திரபாலம் மற்றும் ராஜமுந்திரி ஆகிய இடங்களில் தொடர்ந்து திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்தான்.
இதற்காக ராஜமுந்திரி மத்திய சிறையில் 14 மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்தான். மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட திருட்டுகளில் அவன் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்'' என்றார்.
வீடுகளுக்குள் நுழைய சன்னி முகமூடிகள், தொப்பிகள், கையுறைகள், சுத்தியல்கள், ஸ்க்ரூடிரைவர்கள் மற்றும் துளையிடும் இயந்திரங்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


















