IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில்...
வகுப்பறையில் சக மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட மாணவர்; பஞ்சாப்பில் அதிர்ச்சி!
பஞ்சாப் மாநிலத்தில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. சமீபத்தில்கூட ஆம் ஆத்மி கட்சி பிரமுகரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலைசெய்தனர். தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சக மாணவியை சுட்டுக் கொலைசெய்துள்ளார். அங்குள்ள தர்ன் தரன் என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பிரின்ஸ் ராஜ். இதே கல்லூரியில் படித்து வந்தவர் சந்தீப் கவுர். இரண்டு பேரும் ஒரே வகுப்பில்தான் படித்து வந்தனர். இன்று ராஜ் தான் படிக்கும் வகுப்பிற்குள் நுழைந்தபோது கவுர் எதோ சொல்லி இருக்கிறார். அந்நேரம் ராஜ் அதற்கு எதிராக எதையும் சொல்லவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் கவுர் வகுப்பறையை விட்டு வெளியில் சென்றார்.
அவரை பின் தொடர்ந்து ராஜ் சென்றார். உடனே மற்றொரு மாணவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்று சமாதானப்படுத்த முயன்றார். அதோடு அவர் ராஜ் மற்றும் கவுரை மீண்டும் வகுப்பறைக்குள் அழைத்து வந்தார். கவுர் பின்னால் இருந்த இருக்கைக்கு சென்றார்.

ஆனால் ராஜ் முன் இருக்கையில் அமர்ந்தார். அந்நேரம் கவுர் தனது இருக்கையில் எழுந்து நின்றார். உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்த ராஜ், தனது பேக்கில் இருந்த துப்பாக்கியை எடுத்து கவுரை நோக்கி சுட்டார்.
அதோடு கவுர் கீழே விழுந்தவுடன் சில அடிகள் பின்னால் வந்து தனது தலையிலும் ராஜ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதனை நேரில் பார்த்த சகமாணவர்கள் வகுப்பறையை விட்டு அலறியடித்து வெளியில் ஓடினர். இருவரையும் போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சோதித்து பார்த்தபோது கவுர் இறந்திருந்தார். ராஜ்க்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. என்ன காரணத்திற்காக துப்பாக்கியால் சுட்டார் என்று தெரியவில்லை. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


















