`அதிமுக ஆட்சியாக இருந்தால் `ஜனநாயகன்' படம் எப்போதோ வெளியாகியிருக்கும்!' - சொல்கி...
'துண்டுச் சீட்டை பார்த்து வாசிக்கும் ரோபோ!' - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடும் ஆதவ் அர்ஜூனா
TNPSC தேர்வு ரத்தான விவகாரம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்புப் போன்றவற்றை பற்றி தவெக-வின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.

அவர் பேசியதாவது, 'திமுகவின் தேர்தல் வாக்குறுதி 187 இல் ஐந்தரை லட்சம் அரசுப்பணிகளை உருவாக்குவோம் என்றனர். அப்படி பார்த்தால் 5 ஆண்டுகளில் 28 லட்சம் அரசுப்பணிகளை உருவாக்கியிருக்க வேண்டும்.
தமிழகத்தில் மது விற்பனையை விட கஞ்சா விற்பனை அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு பள்ளியிலும் கஞ்சா சுலபமாக கிடைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா மட்டுமே 60-70 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகிறது. கஞ்சாவை பயன்படுத்தும் நடிகர்களை கைது செய்கிறார்கள். ஆனால், கஞ்சா நெட்வொர்க்கை தொடுவதில்லை.
தெருத்தெருவாக விற்கப்படும் கஞ்சா நெட்வொர்க்கை பற்றி திமுக நிர்வாகிகளுக்கு தெரியாதா? கஞ்சா விற்பனை மூலம் வரும் பணத்தை திமுக தேர்தலுக்காக பயன்படுத்தப் போகிறது. ஒன்றிய அரசின் ஏஜென்சிகள் இதை விசாரிக்க வேண்டும்.

அரசுப்பணி குறித்து நிதியமைச்சர் சட்டமன்றத்தில் ஒரு கருத்தை சொல்கிறார். முதல்வர் ஒரு கருத்தை சொல்கிறார்.
சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வெறுமென விண்ணப்பங்கள் பெறும் அலுவலகங்களாக மட்டுமே உள்ளன. 30 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். அதில் 17 லட்சம் பேர் பெண்கள். தன்னுடைய பையனை துணை முதல்வராக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அவர்களின் வலியெல்லாம் தெரியாது.
TNPSC தேர்வை கூட முறையாக நடத்த முடியாத நிர்வாக திறனற்ற அரசுதான் இது. தேர்வு எழுத வந்தவர்கள் அத்தனை பேருக்கும் இழப்பீடு கொடுக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் துண்டு சீட்டை கொடுத்து முதல்வரை பேச வைக்கிறார்கள். ஒரு ரோபோ முதல்வரைத்தான் நம் மாநிலம் கொண்டிருக்கிறது.
2021 இல் அதிமுக ஆட்சியிலிருந்து போன போது நான்கரை லட்சம் கோடி மட்டுமே கடன் இருந்தது. இப்போது தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது திராவிட மாடலா? கடன் மாடலா? கேள்வி கேட்டால் பத்திரிகையாளர்களை அடிக்கிறார்கள்.

நேற்று ரத்தான தேர்வுக்கும் கே.என்.நேரு மீது பதியப்பட்ட வழக்குதான் காரணமா? யாருமே பதில் சொல்லவில்லை. இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொண்டு துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.
கிரிஷ் சோடங்கர் என்கிற சுயமரியாதைமிக்க தலைவரை காங்கிரஸ் கூட்டணி பேச அனுப்பியிருக்கிறது. தவெகவின் வாக்கு வங்கி உயர்ந்திருப்பதும் திமுகவின் வாக்கு வங்கி குறைந்திருப்பதும் அவருக்கு தெரிகிறது. அதனால் அதிக சீட்களை கேட்கிறார். ஆனால், திமுக பேச்சுவார்த்தை குழுவை அமைக்காமல் அறிவாலய கதவை திறக்காமலேயே தாமதப்படுத்துகிறது.
எங்கள் தலைவர் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் உழைக்க தயாராக இருக்கிறார். தினமும் மக்களோடு மக்களாக நடக்க தயாராக இருக்கிறார். ஆனால், பிரசார வழிகாட்டு நெறிமுறைகள் என்ற ஒன்றை வெளியிட்ட திமுகவும் காவல்துறையும் எங்கள் தலைவரை முடக்குகிறது' என்றார்.
















