'துண்டுச் சீட்டை பார்த்து வாசிக்கும் ரோபோ!' - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடும் ...
அறிவுத் தூதுவர்களுக்கு ஒரு சல்யூட்! : உன்னதமான மனிதர்களை கெளரவிக்கும் புதுக்கோட்டை வாசகர் பேரவை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
வெயில் சுட்டெரித்தாலும், பெருமழை கொட்டினாலும், புயலே வந்து நின்றாலும் விடியற்காலையில் நம் கதவைத் தட்டும் அந்த ஒரு சத்தம் - செய்தித்தாள் விழும் சத்தம். உலக நடப்புகளை நம் உள்ளங்கைக்குக் கொண்டு வரும் அந்த "அறிவுத் தூதுவர்களை" நாம் எப்படி நடத்துகிறோம்?
பால் விநியோகிப்பவர் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் உண்டு. ஆனால், துரதிர்ஷ்டவசமாக "ஏய் குப்பை" என்றும் "ஏய் பேப்பர்" என்றும்தான் பல நேரங்களில் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்றவும், அவர்களின் உன்னதமான உழைப்பை அங்கீகரிக்கவும் புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் மரம் நண்பர்கள் அமைப்பு எடுத்து வரும் முயற்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்தியாவின் முதல் நாளிதழான 'பெங்கால் கெசட்' தொடங்கப்பட்ட ஜனவரி 29-ஆம் தேதியை, இந்தியப் பத்திரிகைகள் தினமாக நாம் கொண்டாடுகிறோம். அந்த நாளில், குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே பேப்பர் விநியோகிப்பவர்கள் ஒன்று கூடும் இடத்திற்கே சென்று, அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, இனிப்புகள் வழங்கி கடந்த 6 ஆண்டுகளாக கௌரவித்து வருகிறது புதுக்கோட்டை வாசகர் பேரவை.
30 ஆண்டுகளாகச் மிதிவண்டியிலேயே செய்தி பரப்பும் 'தீக்கதிர்' செல்வம் போன்ற உழைப்பாளிகள், இந்த அங்கீகாரத்தால் அடையும் மகிழ்ச்சி அளவிடற்கரியது. கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களிலும், மரம் விழுந்த சாலைகளைக் கடந்து செய்தித்தாள்களைச் சேர்த்த அந்த மனிதர்களிடம், "ஏன் இவ்வளவு தாமதம்?" என்று கேட்ட சமூகத்தின் மத்தியில், இந்தப் பாராட்டு விழாக்கள் ஒரு பெரும் மாற்றத்திற்கான தொடக்கம்.
எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டது போல, "ஏழரை மணிக்கு முகூர்த்தத்தை வைத்துக்கொண்டு, ஆறரை மணிவரை பேப்பர் போட்டுவிட்டு வந்து தாலி கட்டிய மணமகன்களும் உண்டு., பேப்பர் போட வேண்டும் என்பதால் இறந்த தகப்பனை அன்றே எரியூட்டிய மகன்களும் உண்டு.." என்று கடமையாற்றும் மனிதர்கள் இந்தத் தொழிலில் உண்டு. இவர்களின் தியாகத்திற்கு நாம் செய்யும் ஆகச்சிறந்த மரியாதை, அவர்களை இன்முகத்துடன் "பெயர் சொல்லி" அழைப்பதே.

துப்புரவுப் பணியாளர்களுக்கு மகளிர் தினத்தில் பாராட்டு விழா எடுப்பது, பெண் தபால்காரர்களை நேரில் சென்று வாழ்த்துவது எனப் புதுக்கோட்டை வாசகர் பேரவையின் ஒவ்வொரு செயலும் சிறப்பு.
உலகச் செய்திகளை விடியலில் சுமந்து வரும் அறிவுத் தூதுவர்களுக்கு, அங்கீகார மகுடம் சூட்டிய புதுக்கோட்டை வாசகர் பேரவையின் செயல் உன்னதமானது.
கடும் பனி, பெருமழை, சுழன்றடிக்கும் புயல் - என எதற்கும் அஞ்சாமல் உழைக்கும் அந்த நிசப்த நாயகர்களை, தேடிச் சென்று தேற்றுகிறார்கள்; பொன்னாடை போர்த்திப் போற்றுகிறார்கள்.
'ஏய் பேப்பர்' என்ற விளிப்பை மாற்றி, அவர்களுக்கு ஒரு பெயரும், பெருமையும் உண்டு என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லிய உங்கள் மனிதாபிமானம்...வாசிக்கப்பட வேண்டிய ஆகச்சிறந்த வரலாறு.
தபால்காரர்கள் முதல் துப்புரவுப் பணியாளர்கள் வரை எளியவர்களின் உழைப்பில் இருக்கும் உயிர்ப்பைக் கண்டுகொண்ட புதுக்கோட்டை வாசகர் பேரவையின் சமூகப் பார்வைக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
நாமும் செய்வோம்- நாளை காலை பேப்பர் போடும் தம்பியையோ, அண்ணனையோ பார்த்தால் ஒரு கணம் நிறுத்தி அவர் பெயரைத் தெரிந்துகொள்வோம். அந்த ஒரு சொல், அவர்களின் அன்றைய நாள் உழைப்பின் சோர்வை நீக்கும் மருந்தாக அமையும்.
*****
பழ.அசோக்குமார்
புதுக்கோட்டை




















