ஜம்மு-காஷ்மீர்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்... 10 வீரர்கள் பலி, பலர் படுகாயம்!...
சென்னை புத்தகக் காட்சி நிறைவு; இவ்வாண்டு அதிகம் விற்பனையான முதல் 5 புத்தகங்கள் என்னென்ன தெரியுமா?
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 49 வது சென்னை புத்தகக் காட்சி 8 ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே நூல் வெளியீடுகளும், இலக்கிய அமர்வுகளும், கலை நிகழ்ச்சிகளும் எனப் புத்தகக் காட்சியே களைகட்டியது.
புத்தகக் காட்சியில் வாங்கப்பட்ட அனைத்துப் புத்தகங்களுக்கும் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்பட்டது. 13 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த 49 வது புத்தகக் காட்சியில் சில பதிப்பகங்களும் அவற்றில் இந்த ஆண்டு அதிக விற்பனையான 5 புத்தகங்களைப் பற்றிப் பார்க்கலாம்..!
முதலாவது நமது விகடன் பிரசுரம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை நன்றாகவே இருந்ததாகவும், எப்போதும் போல சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி, காவல் கோட்டம் ஆகிய நூல்கள் இந்த ஆண்டும் நன்கு விற்பனையாகியதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் விகடன் பிரசுரத்தில் அதிக விற்பனையான ஐந்து புத்தகங்கள் பின்வருமாறு,
1. இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதிய சம்படி ஆட்டம்,
2. இயக்குநர் பிரேம் குமாரின் மெய்யழகன் கதை,
3. வெ.நீலகண்டன் எழுதிய ஸ்டார்ட் அப் ஸ்டார்ஸ்,
4. சு.வெங்கடேசன் எழுதிய காலத்தின் மீது எரியும் கல்,
5. இயக்குநர் இரா. சரவணன் எழுதிய சங்காரம்.
ஒவ்வொரு ஆண்டும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகங்களின் முன்பக்க அட்டைகள் பேசுபொருளாகவும் ஆகியிருக்கின்றன என்றும் பதிப்பகத்தார் தெரிவித்தனர்.

நீலம் வெளியீடாக இந்த ஆண்டு 23 புத்தகங்கள் சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக நீலம் புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு நீலம் பதிப்பகத்தில் அதிக விற்பனையான முதல் ஐந்து புத்தகங்கள்,
1. கேரளத்தின் மறைக்கப்பட்ட வரலாறு
மலையாள நூலான இது தமிழில் சுஜா ராஜேஷ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.
2. உப்பளத்தான்
அறிமுக எழுத்தாளரான ஆறு பேச்சிபாண்டியன் எழுதிய நாவல்
3. யானும் ஒரு சித்தனடா
என்.டி ராஜ்குமார் கவிதைகளின் முழுத் தொகுப்பு
4. மணிபல்லவம்
வாசுகி முருகவேல் எழுதிய நாவல்
5. மராத்வாடா: தலித் சமையலறை
மராத்தியிலிருந்து சா.முத்துக்குமாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வாசகர்களும் குறிப்பாக இளைஞர்களும் இந்த ஆண்டு அதிகம் வருகை புரிந்தார்கள் எனவும் ஜெயமோகனின் அறம் மற்றும் லதாவின் 'கழிவறை இருக்கை' புத்தகங்கள் எப்போதும் போல இந்த ஆண்டும் அமோக விற்பனை ஆகி உள்ளன என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

பனுவல் புத்தக நிலையத்தில் இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் அதிக விற்பனையான ஐந்து புத்தகங்கள்,
1. எழுத்தாளர் லதா எழுதிய கழிவறை இருக்கை,
2. க்ரிஷ் பாலாவின் 'மெல்ல செத்து மீண்டும் வா' என்ற கவிதை தொகுப்பு.
3. ஃபிரான்ஸ் காஃப்கா எழுதிய உருமாற்றம் என்ற உலகப் புகழ்பெற்ற குறுநாவல்.
4. ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் புகழ்பெற்ற நாவல் சித்தார்த்தன்,
5. லியோ டால்ஸ்டாயின் 'இரண்டு கிழவர்கள்'.
வருடா வருடம் எங்கள் பதிப்பகத்தில் பலதரப்பட்ட வாசகர்களின் வரவேற்புடன் புத்தக விற்பனை சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. எப்போதும் போல இந்த வருடமும் ஜெயமோகன், பெருமாள் முருகன் ஆகியோரின் புத்தகங்கள் நன்கு விற்பனையாகியுள்ளன.

30க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்த அரங்கில் வெளியிடப்பட்டதாகவும் விற்பனையாளர் நம்மிடம் கூறினார்.
காலச்சுவடு பதிப்பகத்தில் இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையான முதல் ஐந்து புத்தகங்கள்
1. புக்கர் பரிசு பெற்ற பானு முஸ்தாக்கின் 'ஒரு முறை பெண்ணாகி வா கடவுளே' புத்தகம். சகாதேவன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.
2. தி. ஜானகிராமனின் கவிதை தொகுப்பான ரசிகரும் ரசிகையும் என்ற புத்தகம்
3. இசைப்பட வாழ்தல்
எழுத்தாளர் கிருபாஜி அவர்களால் எழுதப்பட்ட தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகம்.
4. டச்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உன் கதை, என் கதை.
5. சீன எழுத்தாளர் சூ.டிஷானின் மெட்ராஸ் வணிகரின் சீன மனைவி என்ற தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகம்.
இந்த ஆண்டு புத்தகக் காட்சியை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட புதிய தலைப்புகளி்ல் புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். மறுபதிப்பாக 175 நூல்கள் எனப் புதியதும், பழையதுமாக 350-க்கும் மேற்பட்ட நூல்கள் கொண்டு வந்திருக்கிறோம்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மக்களின் வருகை அதிகளவில் இருந்தது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் அதிக விற்பனையான முதல் 5 புத்தகங்கள்
1. புத்தகத் திருவிழாப் பேருரைகள் - ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு அவர்களின் புத்தகக் காட்சிப் பேருரைகளின் தொகுப்பு
2. மிட்டாய் நினைவுகள்
சியாமளா ரமேஷ்பாபு எழுதிய புத்தகம் இது
3. 'காலனிய தமிழகத்தில் திசை மாறிய இசை' - எஸ் ஜெயசீல ஸ்டீபன் எழுதிய மொழிபெயர்ப்பு நூல்
4. வாழ்க்கை மீதான பேராவல்
வான்காவின் வாழ்க்கை நாவல் வடிவில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது.
5. பிரபாஹரன் ஜெ. மூணாறு அவர்களின் 'மலக்காடு' நாவல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.

















