`அதிமுக ஆட்சியாக இருந்தால் `ஜனநாயகன்' படம் எப்போதோ வெளியாகியிருக்கும்!' - சொல்கி...
பாம்பு கடியால் துடித்த சிறுமி; சட்டென செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ-க்கு குவியும் பாராட்டு!
தஞ்சாவூர், கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நேற்று மாலை, பெரிய கோயிலுக்கு வந்தார். கேரளாந்தகன் வாயிலுக்கும், ராஜராஜன் வாயிலுக்கும் இடையிலுள்ள புல் தரையில் கவிதாவும் இரண்டு பெண் குழந்தைகளும் அமர்ந்துள்ளனர். சிறுது நேரத்திற்குப் பிறகு இரண்டு குழந்தைகளும் அந்த இடத்தில் விளையாடியுள்ளனர். அப்போது, இரண்டு பேரில் நித்யஸ்ரீ(8) என்பவரை பாம்பு கடித்தது. இதையடுத்து நித்யஸ்ரீ வலியால் துடிக்க, அதிர்ச்சியில் கவிதா பதறியுள்ளார்.

உடனே அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். பெரியகோயில் முன்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். இதனால் ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டது. கோயிலுக்கு எதிரே போக்குவரத்து எஸ்.ஐ ராஜகண்ணன் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சிறுமியை பாம்பு கடித்த விஷயம் அவருக்கு தெரிந்தது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்காமல் சமயோஜிதமாக யோசித்து சட்டென தனது டூவீலரில் பாம்பு கடித்த சிறுமி நித்யஸ்ரீயை ஏற்றிக்கொண்டு சென்றவர்... தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இதையடுத்து சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்த மருத்துவர்கள் தாமதிக்காமல் சிறுமியை அழைத்து வந்த ராஜகண்ணனை பாராட்டினர். இதையடுத்து கவிதா, ராஜகண்ணனை கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டுள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக நித்யஸ்ரீ தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நித்யஸ்ரீ நலமுடன் இருக்கிறார். எஸ்.ஐ ராஜகண்ணன் நித்யஸ்ரீயை டூவீலரில் அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது செயலை அறிந்த பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையடுத்து இன்று எஸ்.பி.,ராஜராஜம், எஸ்.ஐ ராஜகண்ணணை நேரில் அழைத்து துரிதமாக செயல்பட்டதற்கு தட்டிக் கொடுத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இதைத் தொடர்ந்து சக போலீஸாரும் அவரை பாராட்டினர். இது குறித்து எஸ்.ஐ ராஜகண்ணன் கூறுகையில், ``சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனக்கு இருந்தது. உரிய சிகிச்சைக்கு பிறகு சிறுமி நலமுடன் இருக்கிறார். என்னால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதை நினைக்க பெரும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
















