செய்திகள் :

TNPSC: 'தேர்வுக்கு ஹால் ஒதுக்க எக்செல் ஷீட் போதுமே?' - டிஎன்பிஎஸ்சி தேர்வும் அரசின் குழறுபடியும்!

post image

உலகிலேயே மிகக் கடினமான வேலை எது தெரியுமா? அது சந்திரயான் ராக்கெட்டை நிலவுக்கு அனுப்புவது அல்ல; தமிழ்நாட்டில் ஒரு டி.என்.பி.எஸ்.சி (TNPSC) தேர்வை எவ்வித குளறுபடியும் இல்லாமல் நடத்தி முடிப்பதுதான்!

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5.5 லட்சம் பேருக்கு வேலை தருவோம்" என்று மைக் பிடித்து முழங்கியவர்கள், ஏற்கெனவே இருக்கும் வேலையை நிரப்ப நடக்கும் ஒரு பரீட்சையைக் கூட ஒழுங்காக நடத்த முடியாமல், "ஹலோ மைக் டெஸ்டிங்" செய்து கொண்டிருக்கிறார்கள்.

வரலாற்றிலேயே முதல் முறையாக, ஹால் ஒதுக்கத் தெரியாமல் தேர்வு நின்றிருக்கிறது. அடேங்கப்பா... என்ன ஒரு நிர்வாகத் திறமை!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு குழறுபடி
டி.என்.பி.எஸ்.சி தேர்வு குழறுபடி

தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

ரத்து செய்யப்பட்டதற்குக் காரணமாக அதிகாரிகள் சொல்வது, "தொழில்நுட்பக் கோளாறு". என்னாது? தொழில்நுட்பக் கோளாறா? ஐயா, ஒரு கல்யாண மண்டபத்தில் 500 பேருக்குப் பந்தி பரிமாறி, மொய் எழுதும் நோட்டில் யார் எவ்வளவு தந்தார்கள் என்பதைக் கச்சிதமாகச் சிக்கல் இல்லாமல் கணக்கு போட்டுவிடுகிறார்கள்.

அங்கேயும் தற்போது க்யூ.ஆர்.கோடு வைத்து தெளிவாக மொய் வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளால், எந்தப் பதிவெண் கொண்ட மாணவர், எந்த அறையில் உட்கார வேண்டும் என்பதை பெரிய டெக்னாலஜி எல்லாம் தேவையில்லை, ஒரு சாதாரண 'எக்செல் ஷீட்' (Excel Sheet) உதவியுடன் பார்க்க முடியவில்லை என்றால், இவர்களிடம் எதை நம்பி எப்படிக் கொடுப்பது? கூகுளில் How to use Excel? என்று தேடியிருந்தாலே பாதிப் பிரச்னை தீர்ந்திருக்கும்.

2021-ல் தேர்தல் வாக்குறுதியாக `விடியல் தரப்போகிறோம்... 5.5 லட்சம் வேலைவாய்ப்பு’ என்றெல்லாம் அள்ளி வீசியவர்கள் ஒரு தேர்வைச் சரியாக நடத்தத் தெரியாமல் திணறுகிறார்கள். இவ்வளவு பெரிய குளறுபடி நடந்ததற்கு, அரசு செய்த 'கடுமையான' நடவடிக்கை என்ன தெரியுமா? டி.என்.பி.எஸ்.சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை இடமாற்றம் செய்ததுதான்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு குழறுபடி
டி.என்.பி.எஸ்.சி தேர்வு குழறுபடி

அடடா... என்ன ஒரு தீர்வு! ஒரு வீட்டில் சமையல் சரியில்லை என்று சமையல்காரரைத் திட்டுவதற்குப் பதில், அவரை பக்கத்து வீட்டுக்குச் சமைக்க அனுப்புவது போல இருக்கிறது இந்த நடவடிக்கை. அதிகாரியை மாற்றிவிட்டால், அலைந்து திரிந்து, பஸ் ஏறி, ரயில் ஏறி, சாப்பிடாமல் தேர்வு மையத்திற்கும் நடந்தே வந்த மாணவனின் உழைப்பும் அலைச்சலும் செலவும் திரும்ப கிடைத்துவிடுமா? மன உளைச்சல் சரியாகிவிடுமா?

வேலைக்காக இளைஞர்கள் படும் பாடு இருக்கிறதே, அது சொல்லி மாளாது. புத்தகத்தோடு போராடி, வறுமையோடு போராடி, கடைசியில் தேர்வு மையத்திற்கு வந்தால்... அங்கே அரசாங்கத்தின் அலட்சியத்தோடும் போராட வேண்டியிருக்கிறது.

"தம்பி, நீங்க படிச்சது முக்கியமல்ல, நாங்க ஹால் போட்டாதான் நீங்க பாஸ்" என்று சொல்லாமல் சொல்லித் திருப்பி அனுப்பியிருக்கிறது இந்த அரசு. படித்து முடித்து வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்தவர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு, "சாரி, சர்வர் டவுன்" என்று சொல்வது எவ்வளவு பெரிய குரூரம்! ஒன்ஸ்மோர் என்று சொல்வதற்கு இது என்ன சாதாரண தேர்வா?

தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலத்தில், செவ்வாய் கிரகத்திற்குச் சாட்டிலைட் அனுப்பும் இந்த நாட்டில், ஒரு தேர்வு மையத்தை முறையாக ஒதுக்கத் தெரியாத நிர்வாகத்தை நினைத்துச் சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை.

ஆட்சியாளர்களே, அதிகாரிகளே... மேடையில் பேசுவதற்கு வேண்டுமானால் அரசு பற்றியும் ஆட்சி பற்றியும் வார்த்தை ஜாலங்கள் உதவலாம். ஆனால், களத்தில் தேவைப்படுவது உண்மையான அக்கறையும், சரியான திட்டமிடலும்தான்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு குழறுபடி
டி.என்.பி.எஸ்.சி தேர்வு குழறுபடி

இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்துங்கள். உங்களின் ஒரு நாள் அலட்சியம், ஒரு மாணவனின் ஒரு வருட உழைப்பு. இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள், இடமாற்றம் என்ற போர்வையில் ஒளிந்து கொள்ளாமல், வெட்கித் தலைகுனிய வேண்டும்.

அடுத்த முறையாவது எக்செல் ஷீட் போடத் தெரிந்த ஒருவரை வேலைக்கு வையுங்கள். இல்லை என்றால், தேர்வை ரத்து செய்வதற்குப் பதிலாக, உங்களுடைய நிர்வாகத்தையே 'ஷட் டவுன்' (Shut Down) செய்துவிடுங்கள்!