விண்வெளிப் போரில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் சீனா; அசரவைக்கும் புதிய மைக்ர...
TNPSC: `தேர்வு ரத்து பெரும் வலி; டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு அது ரொம்பவே புரியும், ஏன்னா?'
தமிழ்நாட்டில் நேற்று டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட, 'தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு நிகழ்ந்து விட்டது, வருந்துகிறோம்' என ஒற்றை வார்த்தையில் அறிவித்து விட்டது தேர்வாணையம்.
அரசும் உடனடியாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டு புதிய அதிகாரியை நியமித்திருக்கிறது.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் என்பது மிகவும் முக்கியமான பணிகளுக்கான தேர்வாகும். அரசுத் துறைகளில் முதன்மையான குரூப் 1 க்கு அடுத்தபடியான தேர்வு. அரசுத் துறை செயலாளரகளின் தனி உதவியாளர், சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர், உதவி வரி ஆணையர் உள்ளிட்ட பல பணியிடங்களூக்கு இந்த தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பிரிலிமினரி, மெயின் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடக்கும். முதல்கட்டத் தேர்வான பிரிலிமினரி தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள், மெயின் தேர்வில் 2 அல்லது 2 ஏ இரண்டில் எதை எழுத வேண்டுமென்பதை தீர்மானிக்குமென்கிறார்கள்.
மெயின் தேர்வில் தகுதி பெற்று விட்டால் நேர்முகத் தேர்வே கிடையாது. உடனடியாகப் பணி தான்.
இத்தகைய முக்கியமான தேர்வுக்கு வருடக் கணக்கில் பயிற்சி எடுத்துத் தயாராகிறார்கள் தேர்வர்கள்.

சில துறைகளில் நடக்கும் நேரடி ஆள் சேர்ப்பு மூலம் வேலையில் சேர்வது என்பது சாதாரண மற்றும் பொருளாதர ரீதியாக பின் தங்கிய குடும்பங்களில் இருந்து வருபவர்களுக்கு இயலாத ஒன்றாகி விட்டது. இத்தகைய பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. ஆளுங்கட்சிக்காரர்களுக்கு மட்டுமே இந்த வேலைகள் கிடைக்குமென்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டு.
எனவேதான் நேர்மையான முறையில் வெளிப்படைத்தன்மையாக நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே 1000 காலியிடங்கள் என்றால் ஐந்து லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கிறார்கள்.
சரி, நேற்றைய பிரச்னைக்கே வருவோம்.
தூத்துக்குடியில் தேர்வை எழுதச் சென்று எழுதாமல் வந்த சந்தியாவிடம் பேசினோம்.
''பிரிலிமினரி தேர்வுக்கு கோச்சிங் போய் படிச்சேன். மெயினுக்கு குரூப் 2 எழுத செலக்ட் ஆகியிருந்தேன். மெயினுக்கு வீட்டுல இருந்தே தயார் செய்தேன். நேத்து மதியம் பரீட்சை. ஆனாலும் எங்க கிராமத்துல இருந்து சரியான போக்குவரத்து வசதி தூத்துக்குடிக்கு இல்லைங்கிறதால காலையிலயே சென்டருக்கு வந்துட்டேன். கொஞ்ச நேரத்துல கேன்சல்ங்கிற அறிவிப்பு வந்துட்டதால ஊருக்குத் திரும்பிட்டேன்.

சும்மாவே ஒரு தேர்வு எழுதினா, அதோட அடுத்தகட்ட தேர்வு, ரிசல்ட் பிறகு சர்டிபிகேட் வெரிஃபிகேஷன், அதன் பிறகு வேலையில் சேர்றதுன்னு வருஷக் கணக்குல நீளுது. இந்த நிலைமையில தேர்வு கேன்சல் ஆகுதுன்னா அது நம்பிக்கையை காலி செய்திடுது. இப்ப எங்களுக்கு என்ன பயம்னா, இது தேர்தல் நேரமா இருக்கு. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுடுச்சுன்னா அதுக்குப் பிறகு எந்தவித புதிய அறிவிப்புகளூம் இருக்காது. தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏதாவது நிகழ்ந்தா புது அரசு பணிக்கு ஆட்களை எடுக்கறதுல எந்தளவு ஆர்வமா இருக்கும்கிறதையெல்லாம் யோசிக்கத் தோணுது' என்கிறார் இவர்.
பொதுவாக எந்தவொரு தேர்வென்றாலும் தேர்வு நடைபெறும் நாளுக்கு சில நாட்களுக்கு முன்பே தேர்வு மையங்கள் கண்டறியப்பட்டு தேர்வு எழுதுபவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தச் சூழலில் தேர்வு நாள் அன்று தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது இதுவரை நடக்காத ஒன்று. ஏன் இப்படி? சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் டி.என்.பி.எஸ். சி தேர்வெழுதும் மாணவர்களுக்குப் பயிற்சி தரும் சிவபாலனிடம் பேசினோம்.

''போன வருசமும் இதே தேர்வுல குழப்பம் நிகழ்ந்தது. அப்ப வினாத்தாள்களில் குழப்பம். ஒவ்வொரு மாணவருக்கும் வினாத்தாள் வரிசை வேறுபட்டிருக்கும். அந்த ஆர்டர் படி வினாத்தாள் வழங்கப்படாம குழப்பம் பண்ணினாங்க. இந்த முறை தேர்வு மையமே பிரச்னை. டி.என்.பி.எஸ்.சி யில அதிகாரிகளா இருக்கிறவங்களே இந்த தேர்வை எழுதிதான் அந்தப் பதவிக்கு வர்றாங்க. மத்தவங்களைக் காட்டிலும் அரசுப் பணிக்குத் தயார் செய்கிற மாணவர்களின் வலி இவங்களுக்கு நல்லாவே தெரியும்.
ஒரு சில மாணவர்கள் பத்து வருஷம்லாம் கூட தயார் செய்து வாழ்வா சாவானு கடைசிக் கட்டத்துல இருப்பாங்க. அவங்களை மாதிரியானவங்களுக்கு தேர்தல் ரத்துங்கிறது பெரிய கொடுமை. இன்னைக்கு நடந்தது பொறுப்பா சீரியஸா செயல்பட வேண்டிய இடத்துல இருந்துகிட்டு அலட்சியமா இருந்துட்ட சிலரால் நடந்திருக்கு. போன தடவை நடந்த தவறுல இருந்து பாடம் கத்துக்காம அதே தவறு திரும்பவும் நிகழக் காரணமாகியிருக்காங்க. இனியாச்சும் இந்த மாதிரி பொறுப்பில்லாம நடந்துக்குவாங்களா தெரியல, ரொம்பவே வருத்தமா இருக்கு'' என்கிறார் இவர்.

சில மாதங்களுக்கு முன் இதே டி.என்.பி.எஸ்.சி தேர்வில் அய்யா வைகுண்டரை அவமானப்படுத்தும் வகையில் கேள்வி இடம்பெற்றது என தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்திய வழக்கறிஞர் ராமலிங்கம் பேசிய போது, 'இந்த ஆட்சியாளர்கள் தங்களது கொள்கையை கிடைக்குமிடத்திலெல்லாம் புகுத்துவதில் காட்டும் ஆர்வத்தை நிர்வாகம் செய்வதில் காட்டினாலே இந்த மாதிரி தவறுகள் நடக்காது. நிர்வாகத் தோல்வினுதான் இதைச் சொல்லணும்' என்றார்.
நடப்பதை எல்லாம் பார்த்தால் தேர்வு நடத்துகிறவர்களுக்கே தேர்வு வேண்டுமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.!

















