எடப்பாடி: 'தாய் கழகத்தில் தவெக வேட்பாளர்!' - பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இ...
எடப்பாடி: 'தாய் கழகத்தில் தவெக வேட்பாளர்!' - பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அருண் குமார்
நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியின் த.வெ.க வேட்பாளராக அருண் குமார் என்பவரை தலைமை அறிவித்திருந்தது.
அருண் குமார் வேட்பாளராகவும் அவரின் மனைவி மாற்று வேட்பாளராகவும் த.வெ.க தரப்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுவை முறையாகப் பூர்த்தி செய்யவில்லை என அருண் குமார் மற்றும் அவர் மனைவி ஆகிய இருவரின் வேட்புமனுக்களையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.
எடப்பாடி தொகுதியில் த.வெ.க போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. தொலைகாட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளருக்கு அந்தத் தொகுதியில் த.வெ.க ஆதரவு அளித்தது. அவர் கணிசமான வாக்குகளைப் பெற்றாலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார்.

"முன்னாள் அ.தி.மு.க நிர்வாகியான அருண் குமார், அ.தி.மு.க- விடம் விலைபோன காரணத்தால்தான் வேண்டுமென்றே வேட்புமனுவை முறையாகப் பூர்த்தி செய்யவில்லை. சூழ்ச்சியால்தான் எடப்பாடி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டோம்" என அக்கட்சியினர் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில், தாய் கழகமான அ.தி.மு.க- வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மீண்டும் இணைந்திருக்கிறார் அருண் குமார்.
இந்தப் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய சேலம் மாவட்ட த.வெ.க திர்வாகிகள், "கொளத்தூரைப் போலவே எடப்பாடியிலும் ஆட்டம் காண்பிக்க வேலை செய்து வந்தோம். ஆனால், தேர்தல் நாடகத்தில் எடப்பாடி பழனிசாமியால் த.வெ.க- வில் இணைந்து சீட் வாங்கி சூழ்ச்சியை நிறைவேற்றி விட்டு மீண்டும் தாய் கழகத்தில் இணைந்து கொண்டார் அருண் குமார்" என்றனர்.














