``ஒரு நடிகராக சக நடிகருக்குச் சொல்கிறேன்.! " - நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட வீட...
``ஒரு நடிகராக சக நடிகருக்குச் சொல்கிறேன்.! " - நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட வீடியோ
கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள ‘கர்நாடகா வித்யாவர்தகா சங்க’ வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) ‘மனுஷ்யத்வதெடகே சமுதாயா’ சார்பில் சமூக மற்றும் தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ள வந்த பிரபல நடிகர் பிரகாஷ் ராஜை முற்றுகையிட முயன்ற சில இந்துத்துவ அமைப்பினர் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்களால் அப்பகுதியில் திடீர் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. `நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்துக்களுக்கு எதிராகப் பேசுவார்' எனக் குற்றம் சாட்டிய எதிர்ப்பாளர்கள், அரங்கத்திற்குள் நுழைய முயன்றனர். மேலும் அங்கிருந்த பிரகாஷ் ராஜின் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மீது சிலர் மையை ஊற்றி, அதைச் சேதப்படுத்தினர்.

அரங்கின் நுழைவுவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதை அடுத்து, இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போராட்டக்காரர்களைப் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், "சமூக மற்றும் நாட்டின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்த அரங்கம் ஒரு நல்ல வாய்ப்பை அளித்தது. மூத்த நீதிபதிகள் பலரும் கலந்து கொண்ட இத்தகைய பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று கூறுபவர்கள் முதலில் தங்களின் அறியாமையை உணர வேண்டும். என்னை இந்து எதிர்ப்புவாதி என்று முத்திரை குத்துவதைத் தவிர அவர்களிடம் வேறு வழியில்லை. ஆனால், நான் உலகத்தின் எந்த மூலையிலும் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``தார்வாடில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் இளைஞர்களின் பிரச்னைகள் மற்றும் சமூகத்தில் கலையின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. நாட்டின் தற்போதைய சூழல் குறித்து நாம் பேசுவதையோ, கேள்விகள் கேட்பதையோ பா.ஜ.க விரும்பவில்லை. என்னைப்போன்றவர்களை மிரட்டுவதற்காகச் சுவரொட்டிகள் மீது மை வீசுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். கேள்விகள் கேட்கும் நேஹா போரா, அபிஜித் தீப்கே போன்றவர்கள் மீதும், என் மீதும் மை வீசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
‘மையை வைத்துப் படியுங்கள், எழுதுங்கள்; அதை மனிதர்கள் மீது வீசி வீணடிக்காதீர்கள்’ என்று நேஹா போரா கூறியதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நடிகராக சக நடிகருக்கு சொல்கிறேன். சினிமாவில் ரவுடிகளைப் பயன்படுத்துவது, தடிஅடி நடத்துவது, பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகளில் நடித்தால் பெயரும், பணமும், வேலையும் கிடைக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி எழும் குரல்களை ஒடுக்க நினைப்பது சட்டவிரோதமானது.

கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் வன்முறையைக் கையாள்பவர்களைச் சமூகம் கோழைகள் என்றும் குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் என்றுமே கருதும். இதுபோன்ற மிரட்டல்கள் உங்களுக்குத்தான் அவப்பெயரைத் தரும். ஒரு பெருமைமிக்க நடிகனாக, சிந்தனைவாதியாகச் சொல்கிறேன், இனிமேலாவது இதுபோன்ற மலிவான செயல்களை நிறுத்துங்கள். தடை எதுவந்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என் உரைகளும், கேள்விகளும் தொடரும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். என்று அவர் உறுதியளித்துள்ளார்.















