JP Morgan: Share Market-ஐ அச்சுறுத்தும் AI; 2008-ம் ஆண்டைப் போல மீண்டும் ஒரு 'Cr...
`ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' - திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக
அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2022-ல் ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 'அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு' என்ற பெயரில் தனிப்பயணம் மேற்கொண்ட அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
எனினும், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வில் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்துவிட்டனர். அதையடுத்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ.பி.எஸ் தி.மு.க ஆட்சியை பாராட்டியிருந்தார்.

அப்போது, `தி.மு.க-வில் இணைவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, `பொறுத்திருந்து பாருங்கள்' என சஸ்பென்ஸ் வைத்தார். இந்த நிலையில்தான் இன்று தன் மகன் ரவீந்தரநாத் மற்றும் ஆதரவாளர்களுடன் அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணைந்திருக்கிறார் ஓ.பி.எஸ்.
இது குறித்து ஜூனியர் விகடனிடம் பேசிய புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநில செயலாளர் அன்பழகன், ``ஓ.பி.எஸ்ஸின் இந்த செயல் இது துரோகத்தின் உச்சக்கட்டம். சாதாரண டீ கடையில் இருந்த ஓ.பி.எஸ்சை, மறைந்த மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்வு செய்தார்கள்.
அந்த நன்றியை மறந்து புரட்சித் தலைவி சிறை செல்வதற்கும், அதன்பிறகு அவரது மரணத்துக்கும் காரணமாக இருந்த தி.மு.க-வுடன் கைகோர்த்திருப்பது கடைந்தெடுத்த துரோகத்தின் உச்சகட்டம்" என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார்.













