பங்குச்சந்தை ‘பல்டி’ அடித்தால் பதறுவதா? மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு ஒ...
கரூர்: மூலப்பொருள்கள் விலையேற்றம்; தொழிலாளர் பற்றாக்குறை... நெருக்கடியில் ஜவுளித்துறை!
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (KTMEA) உறுப்பினர்கள் கூட்டம் 15.05.2026 அன்று சங்கத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இதில், தற்போதைய ஜவுளித் தொழிலின் சவால்கள், உற்பத்தி தடைகள் மற்றும் ஏற்றுமதி துறையில் உருவாகி வரும் நெருக்கடிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற் கொண்டனர்.
கரூரில் ஜவுளி ஏற்றுமதி தொழில் ஆண்டு ஒன்றுக்கு ரூ6500 கோடி அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு சுமார் ரூ 3000 கோடியாவது ஏற்றுமதி செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அப்போது அவர்கள் பேசுகையில்,
"கடந்த சில மாதங்களாக ஜவுளி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை 30% முதல் 60% வரை உயர்ந்திருப்பது குறித்து உறுப்பினர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் மற்றும் சர்வதேச அரசியல் பதற்றங்களின் தாக்கம் உலகளாவிய வர்த்தகத்தையும், கடல் வழி போக்குவரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. இதன் விளைவாக, பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களான பாலியஸ்டர், சாயத் தொழிலுக்கான இரசாயனங்கள், பாலித்தீன் மற்றும் பேக்கிங் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்திக்கு அத்தியாவசியமான பல பொருட்களின் விலை திடீர் உயர்வை சந்தித்துள்ளது.

சர்வதேச கப்பல் போக்குவரத்து தாமதங்கள் மற்றும் இறக்குமதி சரக்குகளின் பற்றாக்குறை காரணமாக சாயம் இடுதல், பிரின்டிங் மற்றும் பிற ஜாப்-வர்க் செயல்முறைகளின் செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ளன.
மேற்கண்ட தடைகளுக்கு வலு சேர்க்கும் வகையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, இந்தியாவில் பருத்தி நூல்களின் விலை 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்தியா பருத்தி உற்பத்தியில் முன்னணியில் இருந்தாலும், எந்த வித காரணமும் இல்லாமல் பருத்தி நூல் விலையேற்றம் செயற்க்கையாகவே தெரிகிறது.
இந்திய ஜவுளி தொழிலுக்கு உயிர்நாடியான பருத்தி நூல் விலையை மத்திய அரசு கட்டுக்குள் வைத்துக்கொள்ளாதது வருத்தத்தை தருகிறது.
அதேபோல், கரூர் ஜவுளித் துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மறுசுழற்சி செய்யப்பட்ட பருத்தி மற்றும் பாலியஸ்டர் கலவை நூல்களின் விலையும் 10% முதல் 20% வரை உயர்ந்துள்ளது.
இதனுடன், தொழிலாளர் பற்றாக்குறை ஜவுளித் துறைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். மேலும், உள்ளூர் தொழிலாளர்களின் வருகையும் குறைந்துள்ளதால், உற்பத்தி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஊதியச் செலவுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில் தற்போதைய விலையில் உற்பத்தியை தொடர்வதும், புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களை ஏற்கவும் தொழில் நிறுவனங்களுக்கு கடுமையான நிதிச் சுமையாக மாறியுள்ளது.
இந்த நிலை நீடித்தால், கரூர் ஜவுளித் துறையின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, ஏற்றுமதி வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதனை முன்னிட்டு, கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்த முடிவு செய்துள்ளது:
- ஜவுளித் துறைக்கு உடனடி நிவாரண மற்றும் ஆதரவு திட்டங்கள் அறிவிக்க வேண்டும்.
- மூலப்பொருட்களின் விலை நிலைத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வட்டி மானியம் மற்றும் நிதி உதவிகள் வழங்க வேண்டும்.
- தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பு திட்டங்கள் உருவாக்க வேண்டும்.
- சிறு மற்றும் நடுத்தர ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஊக்கத் திட்டங்கள் வழங்க வேண்டும்.
மேலும், கரூர் ஜவுளி நிறுவனங்களிலிருந்து பொருட்களை வாங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய சூழ்நிலைகளை விளக்கி, மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தயாரிப்புகளின் விலையை மறுஆய்வு செய்யவும், உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவும் வேண்டுகோள் விடுக்கும் வகையில் கடிதம் அனுப்ப சங்கம் முடிவு செய்துள்ளது.

அதேபோல், மூலப்பொருட்கள் வழங்கும் விற்பனையாளர்கள், சாயம் மற்றும் ஜாப்-வர்க் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய தரப்பினரும் தற்போதைய சூழ்நிலையை உணர்ந்து, அடிக்கடி விலை உயர்வு செய்யாமல், கரூர் ஜவுளித் துறையை பாதுகாக்கும் நோக்கில் தொழில் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கரூர் ஜவுளித் துறை என்பது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. எனவே, இந்த நெருக்கடியான சூழலில் அரசு, வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் அனைத்து தொடர்புடைய தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் இந்த முக்கியமான ஏற்றுமதி துறையை பாதுகாக்க முடியும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.














