"வென்டிலேட்டருடன் கூடிய ஐ.சி.யூ வார்டுகூட இல்லை என்பது வேதனை!" - ஸ்ரீரங்கம் த.வெ...
காங்கிரஸ்: ``அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா?" - `NO' சொல்லும் கார்த்தி சிதம்பரம்; காரணம் என்ன?
தவெக ஆட்சி அமைத்ததும், அ.தி.மு.க-வில் இப்போது நடந்துவரும் உட்கட்சிப் பூசலெல்லாம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான செய்தியாக வலம் வருகின்றன.
இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக அணி அமைச்சரவையில் இடம்பெற தவெக-வுடன் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடன் தவெக - அதிமுக கூட்டணி, தவெக மீதான குற்றச்சாட்டு, அதிமுக பிளவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பதிலில், ``தவெக தலைவர் விஜய் தலைமையில் அமைந்துள்ள இந்தப் புதிய அரசு, தற்போதுதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று நடைமுறைகளைச் சீரமைத்து வருகிறது. அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் முழுமையாக ஒதுக்கப்பட்டு, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது, அதில் காங்கிரஸ் கட்சியும் கண்டிப்பாகப் பங்கேற்கும்.
எனினும், எத்தனை அமைச்சர்கள், என்னென்ன இலாக்காக்கள் என்பதை முதலமைச்சர் விஜய்தான் முடிவெடுக்க வேண்டும். புதிய அரசு செட்டிலாவதற்கும் அதன் முதல் பட்ஜெட்டைத் தயாரிப்பதற்கும் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்று என்பதால், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரும் அது தடையின்றித் தொடர்வது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் முந்தைய திட்டங்களின் மீதே புதிய திட்டங்கள் கட்டமைக்கப்படுகின்றன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க தொடர்ச்சியாக நான்கு தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால், அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலேயே தங்களின் எதிர்காலம் குறித்த ஒரு நெருக்கடி எழுந்துள்ளது.
தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஏற்பட்டு வரும் உட்கட்சிப் பிளவுகளால் அ.தி.மு.க தற்போது தமிழக அரசியல் களத்தில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தற்போது தவெக பிரதான ஆளுங்கட்சியாகவும், தி.மு.க முக்கிய எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்துள்ள நிலையில், அ.தி.மு.க மீண்டும் புதுப்பொலிவு பெற்று இவற்றுக்கு இணையாக மாறுமா என்பது கேள்விக்குறியே. தவெக-வின் தேர்தல் வெற்றியைப் பல அரசியல் கணப்பாளர்களும் ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டிருந்தனர்.
தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே வேண்டாம் என்று நினைக்கும் ஒரு வாக்கு வங்கி எப்போதும் இருந்து வந்துள்ளது. அதனை தவெக சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. குறிப்பாக, 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களைத் தவிர்த்து, சமூக ஊடகங்கள் மூலமாகவே தகவல்களைப் பெறுகின்றனர்.
இவர்களை இலக்கு வைத்து வீடுகளுக்குள்ளேயே நடத்தப்பட்ட 'மைக்ரோ கேம்பைன்' பிரசார முறையை மற்ற பாரம்பர்ய அரசியல் கட்சிகள் கவனிக்கத் தவறிவிட்டன. நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்த காலத்தை விட, தற்போதைய சமூக ஊடகங்களின் ஆதிக்கம் மற்றும் நவீன யுக்திகள் தவெக-வின் 35% வாக்கு வங்கி வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளன.
புதிய அரசு அமைவதற்கு தவெக யாரிடமும் பேரம் பேசவில்லை. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐஎம்யுஎல் ஆகிய கட்சிகள் தாமாகவே முன்வந்து கடிதம் மூலம் ஆதரவு அளித்துள்ளன. தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்காகவே வாக்களித்துள்ளனர் என்பதால், அ.தி.மு.க-வின் எந்தவொரு பிரிவையும் இந்தப் புதிய அரசில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

அ.தி.மு.க-வைச் சேர்த்துக் கொள்வது புதிய அரசின் இமேஜுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். தவெக தோழமைக் கட்சிகளின் 'எய்ட் அண்ட் அசிஸ்டென்ஸ்' மூலமாகவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியைச் சுமுகமாக நடத்த முடியும்.
உலக அரங்கில் நிலவும் சப்ளை செயின் பாதிப்புகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழிப் போக்குவரத்துச் சிக்கல்களால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்தியா போன்ற ஒரு இறையாண்மை கொண்ட நாடு தனது வர்த்தக முடிவுகளைத் தன்னாட்சியுடன் எடுக்க வேண்டும்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்காக, ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்று இந்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். மேலும், இந்தச் சூழலைப் பயன்படுத்தி அமெரிக்காவிடமிருந்து அதானி குழுமத்திற்குக் கட்டுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதை உற்று நோக்கும் போது, மத்திய அரசு அமெரிக்காவிடம் முழுமையாக அடிபணிந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இத்தேர்தலில் வேட்பாளர் யார் என்று பாராமல், தவெக-வின் 'விசில்' சின்னத்திற்கும் விஜய் என்ற முகத்திற்கும் மட்டுமே மக்கள் வாக்கு அளித்துள்ளனர்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதன்முதலில் பெற்ற வெற்றியைப் போல, இது ஒரு 'கேண்டிடேட் அக்னோஸ்டிக்' தேர்தலாக அமைந்துள்ளது. நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு இது ஆரோக்கியமானது இல்லை என்றாலும், மக்கள் மாற்றத்தை மட்டுமே பிரதானமாக நோக்கியுள்ளனர்.
தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள சூழலில், வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரசுத் துறை மற்றும் அதிகாரத்துவ மறுசீரமைப்புகள் கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களைப் போல இங்கும் விரைவில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன" என்றார்.











