`பாஜக-வின் சர்க்கஸ் யானைபோல தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார்'- திண்டுக்கல் ...
"17 நாள்களாக தனி மனிதனாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்"- நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு என்னாச்சு?
நகைச்சுவை, ஸ்டண்ட் நடிகரான முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்த அவர் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார்.
அவரின் மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக சில வாரங்களுக்கு முன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மாலதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் நோய் தொற்று காரணமாக கடந்த 17 நாள்களாக மூச்சு விட சிரமப்பட்டு வரும் தனது மனைவிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க உதவிடக் கோரி முத்துக்காளை தமிழக முதல்வர் விஜய்யிடம் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
``எனது மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்த காயத்திற்காக சென்னை கே.எம்.சி. மருத்துவமனையில் சேர்ந்திருந்தேன். ஆப்ரேஷன் முடிந்து 17 நாள்களாகிடுச்சு. மூளையில் ஏற்பட்ட ரத்த காயங்கள் சரியானாலும் கூட அதனால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக என் மனைவி மூச்சு விட சிரமப்பட்டு வருகிறார்.

இந்த நேரத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சார் அவர்கள் என் மனைவியின் மேல் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்து என் மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுகிறேன். கிட்டத்தட்ட 17 நாள்களாக தனி மனிதனாக மருத்துமனையில் நின்று போராடிக்கொண்டிருக்கிறேன். தமிழக முதல்வர் எனக்கு உதவி செய்தால் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்'' எனத் தெரிவித்துள்ளார்.














