`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன...
குண்டு வீசும் முதல்வர்; திகைப்பில் கதர் சட்டைகள் - புகையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.
தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வீச, பதிலுக்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தமிழ்நாட்டில் ஒத்து வராது' என சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் இன்னொரு குண்டை வீசியிருக்கிறார்.
திகைக்கும் கதர் சட்டைகள்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என களமாடிக் கொண்டிருந்த கதர் சட்டைகளெல்லாம் திகைத்துப் போய் நிற்கின்றனர்.

'ராகுல் அரசியலைக் கடந்து என்னுடைய சகோதரர்' என்றும் ஸ்டாலின் பேசியிருக்கிறார். சகோதரச் சண்டை சுமுகமாகத் தீருமா? நிலவரம் என்ன? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
சகோதரச் சண்டை சுமுகமாகத் தீருமா?
“ஆட்சியில் பங்கு, அதிக சீட்டுகள் போன்றவற்றைக் கேட்பதற்கு காங்கிரஸிற்கு உரிமை இருக்கிறது.
ஆனால் அதைக் கொடுப்பது கூட்டணிக் கட்சிகளின் தலைமையிடம் தான் இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவும், அதிமுகவும் ஆட்சியில் பங்கு என்ற விஷயத்திற்கு ‘NO’ என்று தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலின் கறார்
இன்று கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று ஸ்டாலினும் ஓப்பனாக சொல்லிவிட்டார்.
நேற்று டெல்லியில் நடத்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு காங்கிரஸ், தேர்தல் குழுவை விரைந்து அமைக்க வேண்டும் என்று திமுகவை வலியுறுத்தியிருக்கிறது.
ஆனால் திமுகவிற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. மாநாடுகளை நடந்தி வருகிறார்கள். பல திட்டங்களை நிறைவேற்றி திறப்பு விழாவை நடந்தி வருகிறார்கள்.

திமுக-விற்கு கட்டாயம் இருக்கிறதா என்ன?
தேர்தல் அட்டவணையை வெளியிட்டால் இந்த வேலைகளைச் செய்ய முடியாது என்பதால் கடைசி நேரத்தில் எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற விஷயங்களில் திமுக கவனம் செலுத்துவதால், குழு அமைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
கடந்த முறை ஏப்ரலில் தேர்தல் நடந்தபோது பிப்ரவரியில் தான் தேர்தல் குழுவை அமைத்தது திமுக.
திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.
காங்கிரஸ் குழு அமைத்ததால் திமுகவும் குழு அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன?
ரியாக்ட் செய்த மாணிக்கம் தாகூர்
மற்ற மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடக்கிறது என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை கூட்டணிக் கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருக்கிறார்களே தவிர இணைந்து ஆட்சி அமைத்தது இல்லை.
2006-தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆதரவோடு திமுக வெற்றி பெற்றிருந்தாலும் கலைஞர் ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தரவில்லை.
காங்கிரஸிடம் இருந்து எந்த மாதிரியான ரியாக்ஷன் வருகிறது என்பதைப் பார்ப்பதற்காகத் தான் ஸ்டாலின் கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று பேசியிருக்கிறார்.
அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே மாணிக்கம் தாகூர் ரியாக்ட் செய்திருக்கிறார். 2006- ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது தமிழக காங்கிரஸ் கட்சியின் தவறுதான் என்று சொல்லியிருக்கிறார்.

இண்டி கூட்டணி - திமுக
உண்மையான காங்கிரஸ்காரராக இருந்தால் இந்தக் கேள்வியை சோனியா காந்தியிடம் தான் அவர் கேட்டிருக்க வேண்டும்.
காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைப்போம் என்று சொல்கிறார்கள். ஆனால் தவெக ஆட்சியை பிடிக்குமா? என்று தெரியாது.
அகில இந்திய அளவில் இண்டி கூட்டணியில் திமுக சக்தி வாய்ந்த கட்சியாக இருக்கிறது. நம்பிக்கையான தோழனாக இருக்கிறது.
இந்தச் சூழலில் இண்டி கூட்டணியில் இருந்து திமுக விலகிவிட்டால் அந்தக் கூட்டணி வலிமையை இழந்துவிடும்.
திமுக-விற்கு அழுத்தம் கொடுக்கும் காங்கிரஸ்
மோடியை அகில இந்திய அளவில் காங்கிரஸ் எதிர்ப்பது நீர்த்துப்போய் விடும். அதனால் இந்த விஷயத்தை சரியாகக் கையாள வேண்டியது காங்கிரஸின் பொறுப்பு.
மாணிக்கம் தாகூருக்கு அவரது தொகுதியில் திமுகவுடன் பிரச்னை, ஜோதிமணிக்கு செந்தில் பாலாஜியுடன் பிரச்னை, பிரவீன் சக்கரவர்த்திக்கு திமுக மாயவரம் சீட்டை கொடுக்கவில்லை என்பது பிரச்னை. தங்களுடைய தனிப்பட்ட பிரச்னைகளுக்காக காங்கிரஸ் கட்சியைப் பயன்படுத்தி திமுகவிற்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.
தற்போதே எவ்வளவு சீட்டுகள் கொடுக்கும் என்பதை திமுக உறுதிப்படுத்திவிட்டால் காங்கிரஸ் அதற்கு ஏற்றவாறு முடிவெடுக்கும்.

திமுக ஏன் தாமதம் செய்கிறது?
குறைவான சீட்டுகளை தந்தால் தவெகவிற்கு தாவி விடலாம் என்று காங்கிரஸ் நினைப்பதால் தான் திமுகவிற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
இயல்பாகவே திமுக தேர்தல் குழுவை தாமதமாகத்தான் அமைப்பார்கள். இப்போது ஆளுங்கட்சியாக பல வேலைகள் அவர்களுக்கு இருப்பதால் இன்னும் தாமதமாக அமைக்கிறார்கள்” என்று நம்மிடம் விளக்கினார்.















