துருக்கி: நகைக்கடையில் திருடி விட்டு கழுதையில் ஏறி தப்பிய நபர்; வைரல் வீடியோவின்...
கேரளா: "பொன்னு மோளே நீ சாக மாட்டாய்" - 10 மாதக் குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு வாழ்வு
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவரது மனைவி ஷெரின் ஆன் ஜான். ஷெரின் ஆன் ஜான் ஆசிரியையாக உள்ளார். இவர்களது ஒரே மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம்.
ஆலின் ஷெரின் ஆபிரகாம் பிறந்து 10 மாதமே ஆகிறது. ஷெரின் ஆன் ஜான் பட்டம் பெறும் நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் கோட்டயத்துக்குச் சென்றுவிட்டு கடந்த 5-ம் தேதி காரில் வீடு திரும்பினர். அப்போது இவர்கள் பயணித்த கார் திடீரென மற்றொரு காரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் படுகாயம் அடைந்தது. குழந்தையின் தாய் ஷெரின் ஆன் ஜான் மற்றும் குழந்தையின் தாய்வழி தாத்தா ராஜன் ஜான், பாட்டி ஜெசி ஜான் ஆகியோரும் காயம் அடைந்தனர். அனைவரும் திருவல்லாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டது. குழந்தையின் தாய் உள்ளிட்டோர் திருவல்லா தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
சிகிச்சைக்கு இடையே கடந்த 13-ம் தேதி குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இதைத்தொடர்ந்து 10 மாதமே ஆன குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடல் உறுப்புகளைத் தானம்செய்ய அவரது பெற்றோர் சம்மதித்தனர். இதற்கான நடவடிக்கைகளை குழந்தையின் தந்தை அருண் ஆபிரகாம் செய்தார்.

குழந்தையின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 மாத குழந்தைக்கு கல்லீரல் தானம் செய்யப்பட்டது.
இரண்டு சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைக்கு வழங்கப்பட்டன. 10 மாத குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 குழந்தைகள் வாழ்வுபெறும் எனக் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தின் உறுப்பு தானம் செய்த மிகவும் வயது குறைந்த குழந்தை இதுவாகும். உறுப்பு தானம் செய்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
'பொன்னு மோளே நீ மரணமடையமாட்டாய், வேறு குழந்தைகளின் உடலில் வாழ்வாய்' எனக் கேரள மக்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பத்து மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. தனது அன்புக்குரிய குழந்தையை இழந்த வேதனை இருந்தபோதிலும், ஆலினின் பெற்றோர் அவரது உறுப்புகளைத் தானம் செய்ய முடிவு செய்தனர்.
ஆலின் ஷெரின் ஆபிரகாம் மூலம் 5 பேருக்குப் புதிய வாழ்க்கை கிடைக்கும். குழந்தையிடம் பெறப்பட்ட உறுப்புகள் முதற்கட்டமாக 2 குழந்தைகளுக்குத் தானம் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் உடல்நிலை மேம்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மகத்தான முயற்சியை வெற்றிபெறச் செய்த சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம். இந்த விஷயத்தில் அரசாங்கத்திற்கும் தனியார் துறைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது.
உடல் உறுப்பு தானத்தில் ஆலின் ஷெரினின் பெற்றோர் கேரள சமூகத்திற்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். அவர்களின் துயரத்திலும், இந்த ஊர் மக்களின் துயரத்திலும் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
















