போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை TTV தினகரனின் முதல் தேர்தலும் ஆச்சரியங்களும்! ...
சமபலத்தில் மோதும் அதிமுக, திமுக; களத்தில் இன்னாள் முன்னாள் அமைச்சர்கள்! மதுரையில் முந்துவது யார்?
முந்துவது யார்?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'
1. மதுரை மத்தி சட்டமன்ற தொகுதி
மதுரையின் பிரதான அடையாளமான மீனாட்சியம்மன் திருக்கோயில், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பெரியார் பேருந்து நிலையம், ரயில்வே சந்திப்பு, கூடலழகர் பெருமாள் திருக்கோயில், இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில், பழைமையான காஜிமார் தெரு பள்ளிவாசல், டவுன்ஹால் ரோடு என்று மதுரை மாநகரின் முக்கிய அடையாளங்கள் நிறைந்த தொகுதி மதுரை மத்தி.

தொகுதியில் முக்குலத்தோர், நாயக்கர், பட்டியல் சமூகத்தினருடன், இஸ்லாமியர், யாதவர் உள்ளிட்ட சமூகத்தினரும் கணிசமாக இருக்கின்றனர்.
தி.மு.க-வில், மீண்டும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கே சீட் என்கிறார்கள். அதேசமயம், வழக்கறிஞர் அன்புநிதி, செயற்குழு உறுப்பினர் தனச்செல்வம், மாநகராட்சி கவுன்சிலர் ஜெயராமன், முன்னாள் மேயர் குழந்தைவேல் ஆகியோரும் சீட் பெற முயல்கிறார்கள்.

அ.தி.மு.க-வில், பேராசிரியர் ஜெயபாலன், சோலைராஜா மற்றும் சமீபத்தில் கட்சியில் இணைந்த பி.எம் மன்னன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள்.
அ.ம.மு.க-வில் டேவிட் அண்ணாதுரை, பா.ஜ.க-வில் ராஜரத்தினம், சசிகுமார் ஆகியோரும் சீட் பெறுவதற்கான ரேஸில் இருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் ஹக்கிம்என்பவர் போட்டியிடுகிறார்.
தற்போதைய நிலவரப்படி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் சொந்த செல்வாக்கு, தி.மு.க-வின் கட்டமைப்பு உள்ளிட்டவற்றால், தொகுதியில் தி.மு.க-வே முன்னிலை பெற்றிருக்கிறது.
2. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி
ஆனைமலை நரசிங்கப் பெருமாள் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், பாண்டி கோயில் என ஏராளமான ஆன்மிகத் தலங்களும், சென்னை உயர் நீதிமன்றக் கிளையும் அமைந்திருக்கும் சட்டமன்றத் தொகுதி, மதுரை கிழக்கு.
மதுரை மாவட்டத்தின் முக்கியத் தொகுதியாகவும் விளங்கும் இந்தத் தொகுதியில், விவசாயம் ஒரு பக்கம் நடந்தாலும், நெசவு, வெள்ளிப் பட்டறை உள்ளிட்ட சிறு, குறு தொழில்களுடன் ஹெச்.சி.எல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் அமைந்திருக்கின்றன.

தொகுதியில், யாதவர், முக்குலத்தோர், முத்தரையர், பட்டியல் சமூகத்தினர் கணிசமாக இருக்கின்றனர்.
தி.மு.க-வில், மீண்டும் மூர்த்தியே களம் காண்பார் என்கின்றன அந்தக் கட்சி வட்டாரங்கள். அவர் தொகுதி மாறினால் மட்டுமே, கட்சியில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அ.தி.மு.க-வில், மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா பரிந்துரைப்பவருக்கே வாய்ப்பு என்கிறது அந்தக் கட்சி வட்டாரம்.

ராஜன் செல்லப்பாவின் சிபாரிசில், வழக்கறிஞர்களான கோபி அல்லது ரமேஷின் பெயர்கள் சீட்டுக்கு அடிபடுகின்றன. அதேசமயம், பா.ஜ.க-வில் சுசீந்தரனும், த.வெ.க-வில் கல்லானையும் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம்என்பவர் போட்டியிடுகிறார். தற்போதைய சூழலில், அமைச்சர் மூர்த்தியின் தனிப்பட்ட செல்வாக்கு, கட்சிக் கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்களால், தொகுதியில் தி.மு.க-வே முந்துகிறது!
3. மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி
திருமலை மன்னரின் அரண்மனை, பிரமாண்ட மாரியம்மன் தெப்பக்குளம், தூய மரியன்னை ஆலயம் என்று வரலாற்றைத் தாங்கி நிற்கும் ஏராளமான அடையாளங்கள் அமைந்திருக்கும் தொகுதி மதுரை தெற்கு. மதுரையின் வர்த்தகப் பகுதி அதிகமுள்ள பகுதியாகவும் இருக்கிறது.

தொகுதியில், வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய சக்திகளாக சௌராஷ்டிரர் சமூகத்தினரும், முக்குலத்தோரும் இருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து பட்டியலினத்தவர், இஸ்லாமியர், கிறிஸ்துவர், நாடார் சமூகத்தினர் கணிசமாக இருக்கின்றனர்.
ம.தி.மு.க சார்பில் மீண்டும் களமிறங்கத் தீவிரமாகிறார் சிட்டிங் எம்.எல்.ஏ பூமிநாதன். அதேநேரம், தொகுதியைக் குறிவைக்கும் தி.மு.க-வில், வேலுசாமி, முகேஷ் ஷர்மா சீட் எதிர்பார்க்கிறார்கள்.

அ.தி.மு.க-வில், எஸ்.எஸ்.சரவணன், அண்ணாதுரை, பகுதிச் செயலாளர்களான ஜெயபால், சண்முகவள்ளி ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். பாஜக சார்பில் இராம. ஸ்ரீநிவாசன், மஹாலட்சுமி ஆகியோர் போட்டியிடத் தீவிரமாகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சுமதிஎன்பவர் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில், தற்போதைய நிலவரப்படி தி.மு.க - அ.தி.மு.க கூட்டணிகள் சம பலத்தில் இருக்கின்றன!
4. மேலூர் சட்டமன்ற தொகுதி
கக்கன் போன்ற அப்பழுக்கற்ற தலைவர்களை, பொதுவாழ்க்கைக்குக் கொடுத்த சட்டமன்றத் தொகுதி, மேலூர். மதுரை மாவட்டத்தின் முக்கியமான தொகுதியான மேலூரில், தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும், அழகர்கோயில், பழமுதிர்ச்சோலை, திருவாதவூர் எனப் புகழ்பெற்ற ஆன்மிகத்தலங்களும் அமைந்திருக்கின்றன.
நெல் விவசாயம், கரும்பு, வாழை, தென்னை விவசாயமும் பலருக்கும் வாழ்வாதாரம் அளிக்கின்றன.

தொகுதியில் முத்தரையர், முக்குலத்தோர், பட்டியல் சமூகத்தினருடன், யாதவர், இஸ்லாமியர், வெள்ளாளர், செட்டியார் சமூகத்தினரும் கணிசமாக இருக்கின்றனர்.
அ.தி.மு.க-வில், மீண்டும் பெரியபுள்ளான் (எ) செல்வமே போட்டியிடுவார் என்கிறார்கள். அதேசமயம், முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசனும் சீட்டுக்காக முயல்கிறார். அ.ம.மு.க-வுக்கு இந்தத் தொகுதியில் ஆதரவாளர்கள் அதிகம் என்பதால், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ சாமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர், அந்தக் கட்சியின் சார்பில் இங்கு போட்டியிடுவார் என்கிறார்கள்.

கூட்டணியில், பா.ஜ.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால், மாவட்ட நிர்வாகி ராஜசிம்மன் சீட் கேட்கிறார்.
தி.மு.க-வில், மதுரை கிழக்கு ஒன்றியச் செயலாளர் ரகுபதி, மேலூர் சேர்மன் முகமது யாசின் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால், மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ரவிச்சந்திரன், மகாத்மா ஸ்ரீனிவாசன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் கோட்டைக்குமார் என்பவர் போட்டியிடுகிறார்.
தற்போதைய சூழலில், களத்தில் அ.தி.மு.க-வுக்குச் சாதகமான நிலையே நிலவுகிறது!
5. உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி
மதுரையை ஆண்ட பாண்டியர்களின் அடையாளங்கள், சங்க காலத்து தொல்லியல் மீதங்கள், குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்த பெருங்காமநல்லூர் என்று பல்வேறு முக்கிய இடங்கள் அமைந்துள்ள தொகுதி, உசிலம்பட்டி. ஃபார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் மூக்கையாத் தேவர், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்ட பல தலைவர்கள் உருவான தொகுதி. மல்லிகைப் பூ விவசாயம் பலருக்கும் வாழ்வாதாரம் அளிக்கிறது.
ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரான அய்யப்பன் சமீபத்தில் திமுகவில் இணைந்ததோடு எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்து விட்டார்.

தொகுதியில், முக்குலத்தோர் அதிகமாகவும், பட்டியல் சமூகத்தினர், நாடார் உள்ளிட்ட பிற சமூகத்தினர் கணிசமாகவும் இருக்கின்றனர். அ.தி.மு.க கூட்டணியிலுள்ள அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் பி.வி.கதிரவனும், அ.தி.மு.க-விலுள்ள மகேந்திரனும் சீட் எதிர்பார்க்கிறார்கள்.

தி.மு.க-வில், கனிமொழியின் ஆதரவுபெற்ற தலைமைச் செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் இளமகிழன் சீட் எதிர்பார்க்கிறார். அதேசமயம், நகரச் செயலாளர் தங்கபாண்டியன், ஜெயச்ந்திரன் உள்ளிட்ட சிலரும் சீட்டுக்காக முயல்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிராமி தனபால்என்பவர் போட்டியிடுகிறார்.
தற்போதைய சூழலில், தி.மு.க - அ.தி.மு.க கூட்டணிகளுக்கு இடையே இழுபறியான நிலை நிலவுகிறது!
6. சோழவந்தான் (தனி) சட்டமன்ற தொகுதி
ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகள் அடங்கிய தொகுதி சோழவந்தான். மதுரை மாவட்டத்திலுள்ள ஒரேயொரு தனித்தொகுதியாகவும் அமைந்திருக்கிறது. முல்லைப்பெரியாறு பாசனத்தால் நெல் உள்ளிட்ட பயிர், பழ விவசாயத்துடன் வெற்றிலைச் சாகுபடியும் நடைபெறுகிறது. பண்ணைக் கருவிகள் உற்பத்தி ஆலை, ஜவுளிப் பூங்கா, சிறு குறு தொழில்களை நம்பி ஏராளமானோர் வாழ்வாதாரத்தை அமைத்திருக்கின்றனர்.

தொகுதியில், பட்டியல் சமூகத்தினருக்கு அடுத்தபடியாக முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகமாக இருக்கின்றனர். தெலுங்கு மொழி பேசுவோர், வெள்ளாளர், கவுண்டர் உள்ளிட்ட சமூகத்தினரும் கணிசமாக இருக்கின்றனர். தி.மு.க-வில், அமைச்சர் மூர்த்தியின் நம்பிக்கைக்குரியவர் என்பதால், மீண்டும் ஆ.வெங்கடேசனுக்கே சீட் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

அதேசமயம், மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசியும், காங்கிரஸ், வி.சி.க கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்கள்.
அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ-க்களான கே.மாணிக்கம், கருப்பையா ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் நாகலட்சுமி திருமாறன் என்பவர் போட்டியிடுகிறார்.
தற்போதைய சூழலில், அ.தி.மு.க - தி.மு.க இடையே தொகுதியில் இழுபறி நிலையே நிலவுகிறது!
7. திருமங்கலம் சட்டமன்ற தொகுதி
‘திருமங்கலம் ஃபார்முலா’ மூலம் அரசியல் களத்தில் புகழ்பெற்ற இந்தத் தொகுதி, ஆன்மிகரீதியாக மதுரை மீனாட்சி அம்மனுக்குத் திருமாங்கல்யம் செய்து கொடுத்த பெருமைக்குரியது. விவசாயமும், தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழிற்பேட்டையும் இந்தத் தொகுதியின் அடையாளங்கள்.

தொகுதியில், அகமுடையார், கள்ளர், நாயக்கர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், பட்டியல் சமூகத்தினர், நாடார் சமூகத்தினர் பரவலாகவும் இருக்கின்றனர்.
அ.தி.மு.க-வில், இந்த முறையும் ஆர்.பி.உதயகுமாருக்கே மீண்டும் வாய்ப்பு என்பது உறுதியாகியிருக்கிறது.

தி.மு.க-வில், மணிமாறன் மீண்டும் சீட் கேட்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் முனீஸ் என்பவர் போட்டியிடுகிறார்.
சசிகலாவின் புதிய கட்சியான அஇபுதமமுக சார்பில் ஜீவிதா என்பவர் சீட் கேட்டு வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி, தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. வேட்பாளர் தேர்வு, தவெக வுக்கு கிடைக்கும் ஆதரவு உள்ளிட்டவை வெற்றி தோல்வியில் பெரும் பங்காற்றும்.
8. மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி
காந்தி அருங்காட்சியம், கலெக்டர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி., கமிஷனர், எஸ்.பி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், தமுக்கம், உலகத் தமிழ்ச் சங்கம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் என மதுரையின் முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி மதுரை வடக்கு தொகுதி. இங்கு, அரசு ஊழியர்கள், வியாபாரிகள், நெசவாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.

தொகுதியில், முக்குலத்தோர், யாதவர், பட்டியல் சமூகத்தினர் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். அடுத்தபடியாக, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சௌராஷ்டிரர், நாயுடு, வெள்ளாளர் சமூகத்தினர் கணிசமாக இருக்கின்றனர்.

தி.மு.க-வில், அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர் சோமசுந்தரம், பொன் சேது, அக்ரி கணேசன் ஆகியோர் தொகுதியை விரும்பினாலும், மாநகரச் செயலாளர் என்பதால் மீண்டும் கோ.தளபதியே போட்டியிட வாய்ப்புள்ளது. காங்கிரஸில் கார்த்திகேயன் சீட் கேட்கிறார்.
அ.தி.மு.க-வில், டாக்டர் சரவணனுக்குத்தான் சீட் என்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் வி.திருநாவுக்கரசு என்பவர் போட்டியிடுகிறார்.
தற்போது கூட்டணி பலத்தால், தி.மு.க-வே களத்தில் முந்துகிறது!
9. மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி
பொதுவுடைமை இயக்க முன்னோடிகள் என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி போன்றோரும், எம்.ஜி.ஆரும் வெற்றிபெற்ற சிறப்புக்குரிய தொகுதி மதுரை மேற்கு. சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், சுப்பிரமணியபுரம், முத்துப்பட்டி, விளாங்குடி உள்ளிட்ட மதுரை மாநகராட்சியின் 22 வார்டுகளும் வடக்கு தாலுகா, தெற்கு தாலுகாவிலுள்ள பகுதிகளும், பரவை பேரூராட்சியும் அடங்கியுள்ள மதுரை மேற்குத் தொகுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், சிறிய பெரிய வர்த்தக நிறுவனங்கள், சிறு குறு தொழில்களிலுள்ள வேலைவாய்ப்புகளை நம்பி ஏராளமானோர் வாழ்வாதாரத்தை அமைத்திருக்கின்றனர்.

தொகுதியில், அகமுடையார், பிறமலைக்கள்ளர் சமூகத்தினர் அதிகமாகவும், நாயக்கர், வெள்ளாளர், யாதவர், பட்டியல் சமூகத்தினர், இஸ்லாமியர்கள் கணிசமாகவும் இருக்கின்றனர். அ.தி.மு.க-வில், சிட்டிங் எம்.எல்.ஏ செல்லூர் ராஜூவே மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

தி.மு.க-வில், அமைச்சர் மூர்த்திக்கு நெருக்கமான தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.பாலாஜியின் பெயர் அடிபடுகிறது. கூடவே இளைஞரணி ஜி.பி.ராஜா, சின்னம்மாள் உள்ளிட்டோரும் சீட் எதிர்பார்க்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சோ.விக்னேஷ் குமார் என்பவர் போட்டியிடுகிறார்.
தற்போதைய நிலையில் களத்தில், தி.மு.க - அ.தி.மு.க இடையே இழுபறியான சூழல் நிலவுகிறது!
10. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி
முருகக் கடவுளின் முதலாம் படை வீடு அமைந்திருக்கும் தொகுதி திருப்பரங்குன்றம். ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற அவனியாபுரம், மதுரை விமான நிலையம், காமராசர் பல்கலைக்கழகத்துடன் ஏராளமான தனியார் கல்லூரிகள், எய்ம்ஸ், வடபழஞ்சி ஐடி பார்க் உள்ளிட்டவை தொகுதியின் முக்கியமான அடையாளங்கள். விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் தொகுதியில் நிறைந்திருக்கின்றனர்.

தொகுதியில், முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், பட்டியல் சமூகத்தினர், முத்தரையர், நாயக்கர், சௌராஷ்டிரர் உள்ளிட்ட சமூகத்தினர் பரவலாகவும் இருக்கின்றனர்.
அ.தி.மு.க-வில் மீண்டும் ராஜன் செல்லப்பாவே சீட் கேட்கிறார். தி.மு.க-வில், திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யப்ரியா பாலாஜி, மகளிர் அணி நிர்வாகி கிருத்திகா தங்கபாண்டி ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள்.

அதேசமயம், தி.மு.க கூட்டணியிலுள்ள சி.பி.எம்., காங்கிரஸ் கட்சிகளும் தொகுதியை எதிர்பார்க்கின்றன.
நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் சத்தியாதேவி என்பவர் போட்டியிடுகிறார்.
கட்சிக் கட்டமைப்பு, எம்.எல்.ஏ-வின் செயல்பாடுகள் போன்றவற்றால், தற்போதைய சூழலில் அ.தி.மு.க-வே முந்திச் செல்கிறது!













