'இன்னும் இந்தியாவின் 13 கப்பல்கள் ஹார்முஸில் நிற்கிறது; மீதி.!' - மத்திய அரசு சொ...
'சூர்யவன்ஷியின் போராட்டம் வீண்; தட்டித் தூக்கிய குஜராத் டைட்டன்ஸ்! - எப்படி வென்றது கில் & கோ?
குவாலிஃபயர் - 2 இல் ராஜஸ்தான் ராயல்ஸை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது குஜராத் டைட்டன்ஸ்.
குஜராத் டைட்டன்ஸுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் இந்த சீசனில் ஒருசில ஒற்றுமைகள் இருந்தன. அணியைத் தூக்கி நிறுத்தும் டாப் 3 வீரர்கள், மந்தமாக ஆடும் மிடில் ஆர்டர், ஆர்ச்சர் மற்றும் ரபாடாவை பெரிதும் சார்ந்திருக்கும் வேகப்பந்து வீச்சு என பல விஷயங்களையும் ஒப்பிட்டுச் சொல்லலாம். இருப்பினும் இந்த டாப் 3 வீரர்கள் பேட்டிங்கை அணுகும் முறை இரு அணிகளுக்கும் சற்றே வித்தியாசமானது.

சூர்யவன்சி - ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன் சேர்த்தால், கில் - சாய் சுதர்சன் கூட்டணி பட்ஜெட் குடும்பங்கள் போல ரிஸ்க் ஃபிரீ கிரிக்கெட்டே ஆடும். இருப்பினும் இருதரப்புமே தத்தம் அணிக்கு நிலைப்புத்தன்மையோடு ரன்களைக் கொடுத்தும் வந்தனர். பட்லர் மற்றும் ஜுரேல் இருவரும் சூழலை அனுசரித்து ஆடிவந்தனர். குறிப்பாக ஜுரேல் பல போட்டிகளிலும் ஆங்கராக மறுமுனைக்கு சப்போர்டிங் ரோலை செய்து வந்தார். இவை எல்லாம் ஒரே போல் இருந்தாலும் பேட்டிங்கில் ராஜஸ்தான் குஜராத்தை விட சற்றே பின்தங்கியதற்கு முக்கியக் காரணம் - ஜெய்ஸ்வால்.
நடப்பு சீசனில் ஜெய்ஸ்வால் அடித்த மூன்று அரைசதங்களையும் ஒரிரு கேமியோக்களையும் தவிர்த்துப் பார்த்தால் பெரியளவிலான தாக்கத்தை அவர் உண்டாக்கவில்லை. இதனால் இரட்டிப்பான அழுத்தம் சூர்யவன்சி மேல் ஏற்றப்படுவது தவிர்க்க முடியாததாக ஆனது. எலிமினேட்டரில் 100 ஸ்ட்ரைக்ரேட்டோடு 29 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஜெய்ஸ்வால், இப்போட்டியிலோ வெறும் ஒரு ரன்னோடு வெளியேறியிருந்தார்.
ராஜஸ்தான் ஒரு மிகப்பெரிய பின்னடைவை இதனால்தான் சந்தித்தது எனலாம். குஜராத் தரப்பில் ஓப்பனர்கள் இருவருமே சமமான பங்களிப்பை அளித்தனர், 167 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்திருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸில் அது நடக்கவில்லை. போட்டியின் முடிவை மாற்றியது இதுதான்.
ஜெய்ஸ்வாலுக்கு நேரெதிராக சூர்யவன்சி இப்போட்டியை அணுகிய விதம்தான் ஆச்சரியமூட்டியது. களம் சாதகமாக இல்லை, பேட்டிங்கும் சவாலாக இருந்தது. அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்ட சூர்யவன்சி பக்குவப்பட்ட வீரர்போல் முதிர்ச்சியான ஆட்டத்தை ஆடியிருந்தார். அரைசதமே 31 பந்துகளில்தான் வந்து சேர்ந்தது, அந்தப் புள்ளியிலிருந்து ஆட்டத்தை அவர் முடுக்கிய விதம்தான் அபாரம். முதல் 31 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்த சூர்யவன்சி அடுத்த 16 பந்துகளில் 46 ரன்களைக் குவித்திருந்தார்.

இப்படி சூழலுக்கேற்றாற் போல் தன்னை மாற்றிக் கொள்வதுதான் அவருக்கும், அவரால் அணிக்கும் பலமாகிறது. தான் ஆடிய கடைசி நான்கு இன்னிங்க்ஸ்களில் மூன்றில் 90-களைக் கடந்தும் சதத்தை சொற்ப ரன்களில் தவறவிட்டிருக்கிறார் சூர்யவன்சி.
90-களில் அடிக்கடி ஆட்டமிழப்பது, அவர் களத்தில் இருக்கும்வரை ரசிகர்கள் நம்பிக்கையோடு போட்டியைப் பார்ப்பது, மொத்த அணியும் அவரைச் சார்ந்தே பயணிப்பது இவை எல்லாம் 90-ஸ் கிட்ஸுக்கு சூர்யவன்சி மற்றும் சச்சன் டெண்டுல்கர் உடனான ஒப்பீடுகளை சுலபமாக நினைவூட்டும். ஆடியுள்ள இரண்டே சீசன்களில் சூர்யவன்சி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், `Another Master Blaster Is In Making' என்றே சொல்ல வைக்கிறது. 1000 ஐபிஎல் ரன்களை அதிவேகமாகக் கடந்த வீரர், அதையும் வெறும் 440 பந்துகளில் கடந்தது, ஒரே சீசனில் அதிக பவுண்டரிகளை அடித்த வீரர் (130 பவுண்டரிகள்) உள்ளிட்ட சாதனைகளை இப்போட்டியிலும் சூர்யவன்சி படைத்திருந்தார்.
இறுதிப் போட்டிக்கு எடுத்துச் செல்ல தகுதியான ஓர் இன்னிங்க்ஸை அவர் ஆடியிருந்தும் அணி தோற்றது தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக மாறியிருக்கிறது.
சூர்யவன்சி போலவே ஜடேஜாவின் போராட்டமும் வீணானது. விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி ஃபெரைரா வருவதற்கான அவகாசத்தைக் கொடுப்பதற்காக இறக்கப்பட்டாலும் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். காயத்தினால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி மீண்டும் அணிக்காக வந்து நின்று கடைசிவரை ஆட்டமிழக்காமல் அரணாக நின்ற அவரது போராட்டமும், கூடவே ஃபெரைராவின் இறுதிநொடி அதிரடியும் என எல்லாமே வீணானது. ஜெய்ஸ்வால் போலவே இதற்கு இன்னுமொரு முக்கியக் காரணம் பராக். இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான இரு போட்டிகளில் மட்டுமே அவரது பேட் பேசியது. மற்ற எல்லாப் போட்டிகளிலும் மௌனித்து, சரணடைந்து வெளியேறி அணியை இக்கட்டில்தான் தள்ளியது.

பொறுப்பை உணர்ந்து சரியான பங்களிப்பை அவர் அளித்திருந்தால் இன்னமும் கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸின் தோல்வி பராக்கின் பேட்டின் உதவியால் எழுதப்பட்டது.
ஒரு கேப்டன் எப்படியொரு ஆட்டத்தை ஆடக்கூடாது என பராக் ஆடிக் காட்டினார் என்றால் "இப்படியொரு ஆட்டத்தைத்தான் ஆட வேண்டும்!", என சுப்மன் கில் செய்முறை விளக்கம் கொடுத்திருந்தார், அதிர வைத்த அதிரடி அதிவேக சதத்தோடு. பொதுவாகவே பல காலமாக டி20-ல் கில்லின் ஸ்ட்ரைக்ரேட் குறித்து விமர்சனங்கள் எழும், அவர் டி20-க்கே உகந்தவர் அல்ல என்றுகூட கருத்துக்குள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் அத்தகைய எல்லா விமர்சனங்களுக்குமான விடையாக இந்த சீசனும், குறிப்பாக இந்தப் போட்டியும் மாறியிருக்கிறது. பவர்பிளேயை அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டார் என்றால் மத்திய ஓவர்களில் பௌலிங் யூனிட்டை உடைத்து நொறுக்கினார். `Destructor' என்ற வார்த்தை மட்டுமே அவர் ஆடிய ஆட்டத்தை விமர்சிப்பதற்கான ஒற்றை பதமாக இருக்கும்.
கில் - சாய் சுதர்சன் கூட்டணி தான் ராஜஸ்தானின் இறுதிப்போட்டி கனவுக்கு இறுதி உரை எழுதியது. மொத்தம் 11 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்துள்ளது இந்த இணை. இருவரில் ஒருவர் இருந்தாலும் ஆபத்து எனும் பட்சத்தில் இருவரையுமே செட்டில் ஆக ராஜஸ்தான் அனுமதித்து விட்டது. 14 ரன்களில் விடப்பட்ட சாய் சுதர்சனின் கேட்சும் போட்டியின் போக்கு குஜராத்துக்கு சாதகமாவதற்கு காரணமானது.
பவர்பிளேயிலேயே 69 ரன்களையும், பத்து ஓவர்களிலேயே 127 ரன்களையும் எடுத்து ராஜஸ்தானுக்கான எல்லா வாயில்களையும் அடைத்து விட்டனர். நம்பவே முடியாத வகையில் இரண்டாவது முறையாக சாய் சுதர்சன் ஹிட் விக்கெட்டில் ஆட்டமிழந்திருந்தார். அது நடக்காது போயிருந்தால் போட்டி இன்னமும் சில ஓவர்கள் மீதமிருந்த போதே முடிவுக்கு வந்திருக்கும். 14-வது ஓவருக்குப் பின்பு ராஜஸ்தான் ராயல்ஸ் கட்டுக்கோப்பாக பந்துவீசி லகானைக் கைப்பற்ற முயற்சித்திருந்தது, ஆனால் அதற்குள் போட்டி அவர்களது கையிலிருந்து கில் - சாய் சுதர்சன் கூட்டணியால் விடுவிக்கப்பட்டு பல கிலோமீட்டர்களுக்கும் அப்பால் எடுத்துச் செல்லப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டு விட்டது என்பதே உண்மை.

அற்புதமாக லீக் சுற்றினை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் பல ஏற்ற தாழ்வுகளையும் தொடர்ச்சியாக பார்த்து வந்தது. இருப்பினும் கடைசிப் பேருந்தைப் பிடித்து ப்ளே ஆஃப்பில் நுழைந்து குவாலிஃபயருக்குள்ளும் எட்டிப் பார்த்ததில் The Lion's Share எனும்படி சூர்யவன்சியின் பங்கே மிக அதிகம். அதே போராட்டம் எல்லாத் தரப்பிலிருந்தும் வந்திருந்தால் இறுதிப்போட்டி ராயல்ஸ் வெர்ஸஸ் ராயல்ஸ் என மாறியிருக்கும். 2003 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருதைப் பெற்றும் அணியை கோப்பையை வெல்ல வைக்க முடியாத சச்சினின் கண்களில் இருந்த அதே வலியை சூர்யவன்சியின் கண்களிலும் பார்க்க முடிந்தது.
குஜராத்தைப் பொறுத்தவரை பௌலிங்கில் பலர் சறுகினாலும், ஃபீல்டிங்கில் பல புள்ளிகளில் சொதப்பினாலும், ஒரு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு அவர்களை அழைத்துச் சென்று விட்டது.
எல்லா வகையிலும் தகுதிவாய்ந்த அணியாகவே தொடர் முழுவதும் பரிமளித்து வந்த குஜராத் டைட்டன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை சந்திப்பது தான் இறுதிப் போட்டியை சுவாரஸ்யமானதாக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.




















