இன்று கர்நாடகாவில் SIR: 11 பாயின்ட்டுகளில் தேர்தல் ஆணையத்திற்கு `செக்' வைக்கும் ...
செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அனுமதி! - ஆளுநருக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் முன்னாள் அமைச்சர்களான வி. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை (ED) கோரியுள்ள அனுமதி தொடர்பான கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்குமாறு தமிழக அரசு ஆளுநர் அர்லேகரிடம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், நேற்று ஆளுநரை நேரில் சந்தித்து அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமலாக்கத்துறை முன்வைத்துள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, அமலாக்கத்துறையின் கோரிக்கையைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசு ஜூன் மாத முதல் வாரத்தில் ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பியிருந்தது. ஆனால், இதுவரை அந்த கோப்புகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
செந்தில் பாலாஜி தொடர்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறி பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையாகக் கொண்ட வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் அவரது சகோதரர் மற்றும் உதவியாளர்கள் தொடர்புடையதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
அதேபோல், முன்னாள் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி விசாரணையை முன்னெடுத்து வருகிறது.

இரு வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, பொதுப் பணியில் இருந்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடர தேவையான அனுமதியை பெறும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகள் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளன.
இந்நிலையில், கோப்புகள் அனுப்பப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாகியும் ஒப்புதல் வழங்கப்படாததால், அவற்றை விரைந்து பரிசீலித்து முடிவு எடுக்குமாறு தமிழக அரசு ஆளுநரிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.















