'15 மணி நேர ஷிஃப்ட்; நோ லீவ்; கைக்கு வராத படி காசு!' - குமுறும் தீயணைப்பு காவலர்...
'டிசம்பரில் வங்கதேசத்திற்குத் திரும்புகிறேன்; எந்த அரசும் தவறுக்கு அப்பாற்பட்டது அல்ல' - ஷேக் ஹசீனா
2024-ம் ஆண்டு வேலைவாய்ப்பு கோட்டா பிரச்னை, ஊழல் போன்ற காரணங்களால் உள்நாட்டு கலவரம் வெடித்தது வங்கதேசத்தில். இது அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியைக் கவிழ்த்தது.
இதனால், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு தப்பி வந்தார் ஷேக் ஹசீனா. அவரை ஒப்படைக்குமாறு பல முறை இந்திய அரசிடம் வங்கதேசம் கேட்டும், இந்தியா இதுவரை அதை செய்யவில்லை.
ஆனால், இப்போது தானே வங்கதேசத்திற்கு இந்த டிசம்பர் செல்ல உள்ளதாக 'Reuters' செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார் ஷேக் ஹசீனா. அவர் கூறியதாவது...

"நான் நாடு திரும்பும்போது அவர்கள் என்னைக் கைது செய்யலாம், ஏன், என்னைக் கொல்லக் கூட செய்யலாம்.
ஆனாலும் நான் போய்த்தான் ஆக வேண்டும். என் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.
எனக்கு மரணம் வருவதாக இருந்தால், அது என் சொந்த மண்ணில், என் பெற்றோர் புதைக்கப்பட்ட, அவர்களின் ரத்தம் சிந்திய என் தாய்மண்ணில் வரட்டும் என்று நான் விரும்புகிறேன்.
டாக்காவில் உள்ள அதிகாரிகள் என்னை மீண்டும் அங்கு கொண்டு செல்ல விரும்புகிறார்கள். என்னை நாடுகடத்துமாறு இந்தியாவிற்குத் தொடர்ந்து கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நானே செல்வேன்.
எங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரின் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவர்களில் பலர் தலைமறைவாக உள்ளனர்.
அதனால் தான் நான் சொல்கிறேன்... இந்த முறை நான் தாயகம் திரும்புகிறேன். ஒரு நாள், நீங்கள் அனைவரும் வர வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நீதிமன்றத்தில் சரணடைவோம்.
நான் நீதியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கினால், இந்த நீதிமன்றம் எவ்வளவு பெரிய கேலிக்கூத்தாகச் செயல்படுகிறது என்பது மக்களுக்குத் தெளிவாகப் புரிந்துவிடும் — அதைத்தான் நான் நிரூபிக்க விரும்புகிறேன்.

ஒரு அரசாங்கம் நீண்ட காலம் செயல்படும் போது தவறுகள் நடப்பது இயல்புதான்.
எந்த அரசாங்கமும் தவறுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால், ஒரு அரசாங்கத்தின் நல்லது கெட்டதையும், சரியும் தவறையும் தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கு மட்டுமே உண்டு. அந்தத் தீர்ப்பை நான் மக்களிடமே விட்டுவிடுகிறேன்.
அவர்கள் என்னை ஒரு குற்றவாளியாக அறிவித்திருக்கலாம். என்னால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகலாம். ஆனால், அவர்கள் ஏன் அவாமி லீக் கட்சியை முடக்க வேண்டும்? நாங்கள் தவறு செய்திருந்தால், அதை மக்களே தீர்மானிக்கட்டும்."












