'டிசம்பரில் வங்கதேசத்திற்குத் திரும்புகிறேன்; எந்த அரசும் தவறுக்கு அப்பாற்பட்டது...
Gatta Kusthi 2: ``மோக்ஷாவா இருந்த என்னை மீனு டீச்சரா மாத்திட்டாரு" - எமோஷ்னலான நடிகை மோக்ஷா
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது.
2022, டிசம்பர் 2 அன்று வெளியான 'கட்டா குஸ்தி' முதல் பாகம் ரசிகர்களிடம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்தே இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் பேசிய நடிகை மோக்ஷா, ``கட்டா குஸ்தி 2' திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது என் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. இதற்காக அனைவருக்கும் என் நன்றிகள். குறிப்பாக, தமிழ் சினிமா ரசிகர்கள் என் மீது இவ்வளவு அன்பைப் பொழிவார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. ஒரே இரவில் மோக்ஷாவாக இருந்த என்னை 'மீனு மிஸ்' என்ற கதாபாத்திரமாக மாற்றி, இந்த அளவிற்குப் பிரபலமாக்கியது இன்னும் என் கற்பனைக்கும் சிந்தனைக்கும் எட்டாத ஒன்றாகவே இருக்கிறது.
தயாரிப்பாளர் விஷ்ணு சாருக்கு நான் நன்றி சொல்லிச் சொல்லி அவருக்கே சலிப்புத் தட்டி இருக்கும் என்று நினைக்கிறேன். அவரிடம் நான் ஒரு மன்னிப்பும் கேட்க வேண்டும். நான் 'கட்டா குஸ்தி 1' பார்த்ததில் இருந்தே ஐஸ்வர்யா மேமின் பெரிய ரசிகையாக மாறிவிட்டேன். ஆரம்பத்தில் விஷ்ணு சார் இந்த கதாபாத்திரத்தைப் பற்றிச் சொன்னபோது அவர் எந்த அளவிற்கு உறுதியாக இருந்தார் என்பதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இன்று, அவர் என்னை மோக்ஷா என்ற கலைஞரில் இருந்து 'மீனுமிஸ்' என்ற சிறந்த கதாபாத்திரமாக மாற்றியுள்ளார்.
வழக்கமாக எல்லா தயாரிப்பாளர்களும், "இந்தப் படத்தை நீ பண்ணு, அப்புறம் பார் என்ன நடக்குதுன்னு" என்றுதான் சொல்வார்கள். ஆனால், விஷ்ணு சார் சொன்னதை நான் முழுமையாக நம்பினேன். அவருக்காக நான் வேறு எந்தத் தமிழ் படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் இந்த ரோலுக்காகக் காத்திருந்தேன். எனக்கு இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய இயக்குநர் செல்லா சாருக்கும், தயாரிப்பு குழுவுக்கும் நன்றி.
நான் ஒரு மேடை நாடகக் கலைஞர். வங்காளம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நல்ல கதைக் களம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். தமிழிலும் ஒரு சிறிய படத்தில் நடித்தேன். ஆனால் அது ரிலீஸ் ஆகவில்லை. எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு, இந்தியாவின் மிகப்பெரிய சினிமாத்துறையான தமிழ் சினிமாவில் நுழைவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், இன்று முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து மேடையைப் பகிர்வது கடவுளின் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.
தமிழ்நாட்டின் மண் மற்றும் மக்கள் கொடுத்த ஆதரவிற்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல், இப்படத்தில் நான் ஒரு மலையாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், கேரளா மண்ணிற்கும் என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமா ஊடகங்களுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இன்னும் பல நல்ல படங்கள் பண்ணக் காத்திருக்கிறேன்" என்றார்.















