Biggboss: ``என்னையும்தான் கிழவன் என்றார்கள்" - நிகழ்ச்சிக்கு நடுவே சட்டையை கழற்ற...
”டூவீலரில் 229 கிலோ மீட்டர், திருட்டு நகையில் ஜாலி டூர்”- செயின் பறித்த நண்பர்கள் சிக்கியது எப்படி?!
தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிருபாமலர் இவரது கணவர் டாக்டர். கடந்த 8ம் தேதி மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, டூவீலரில் வந்த இருவர் நிருபாமலர் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். தஞ்சாவூர், மருத்துவக்கல்லூரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து நிருபாமலர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தஞ்சாவூர் எஸ்.பி சுந்தரவதனம், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் இதன் விசாரணை நடைபெற்றது. குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் தென்னரசு டீம் சிசிடிவி-யில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து செயின் பறிப்பில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை தேடினர். இதில் மதுரையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தனபாண்டி(27), சதீஷ்(28) ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்து போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து உள்விவரம் அறிந்த போலீஸ் தரப்பில் பேசினோம், ``நிருபாமலரிடம் செயினை பறித்து விட்டு டூவீலரில் தப்பிச் சென்ற குற்றவாளிகள் சென்ற சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். டூவீலரிலேயே திருச்சி, கரூர், திருப்பூர் வரை சென்றிருந்தனர். அதை வைத்து இருவரையும் நோட்டமிட்டு வந்தோம். திருப்பூரில் மட்டும் மூன்று வீடுகள் வாடகைக்கு எடுத்து மாறி மாறி தங்கி வந்துள்ளனர். மூன்று வீடுகளையும் கண்காணித்தோம். செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் இவர்கள் தான் என்பதை உறுதி செய்ததும் அந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினோம்.

இதில் மதுரையைச் சேர்ந்த, போலீஸாரால் கண்காணிக்க கூடிய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தனபாண்டி, சதீஷ் ஆகிய இருவரும் தான் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களும் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். தனபாண்டி, சதீஷ் இருவரும் நெருக்கமான நண்பர்கள். எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடிப்பது, சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் தங்க செயினை பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருவர் மீதும் பல வழக்குள் உள்ளன. தஞ்சாவூர் சம்பவத்தை செய்வதற்கு முன்பு கள்ளக்குறிச்சியில் பெண் டாக்டர் ஒருவரிடம் செயினை பறித்தனர். அப்போது அந்த பெண் டாக்டர் 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது அதிரச்செய்திருந்தது. இதையடுத்து அடுத்த சம்பவமாக தஞ்சாவூரில் செயின் பறிப்பை நிகழ்த்தியுள்ளனர். இதற்காக திருப்பூரில் இருந்து டூவீலரில் கிளம்பியவர்கள் காங்கேயம் நரப்பகுதி வரை வந்து விட்டு அந்த டூவீலரை ஸ்டாண்டில் போட்டு விட்டு வேறு டூவீலரில் கிளம்பி வந்து காரியத்தை செய்துள்ளனர். திரும்பி போகும் போதும் இதே முறையை கையாண்டுள்ளனர்.

போலீஸ், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் சிக்காமல் இருக்க இப்படி ஸ்கெட்ச் போட்டுள்ளனர். நுணுக்கமாக ஆய்வு செய்து இதை கண்டு பிடித்து குற்றவாளிகளை நெருங்கினோம். கொள்ளையடிக்கும் பணத்தில் பல ஊர்களுக்கு சென்று ஜாலியாக இருப்பார்கள். பணம் தீர்ந்ததும் மீண்டும் கைவரிசை காட்டுவார்கள். இதுபோல் பல குற்றங்களை செய்து விட்டு பல மாவட்ட போலீஸாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தவர்களை தஞ்சாவூர் போலீஸ் டீம் கையும், களவுமாக கைது செய்துள்ளது. 17 வழக்குகளில் ஆஜராகாததால் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, இரண்டு டூவீலர்கள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.
















