Doctor Vikatan: குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) இருந்தால்,உப்பு அதிகம் சேர்த்துக்...
'டெல்லியால முடியும்னா எங்களாலயும் முடியும்!' - ரெக்கார்ட் சேஸின் ரகசியம் பகிரும் ஸ்ரேயாஸ்
பஞ்சாப் vs டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 264 என்ற இமாலய இலக்கை அடிக்க, அதை 19வது ஓவரிலேயே எட்டி பிடித்து சாதனை படைத்துள்ளது ஷ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணி.

இந்த அபார வெற்றிக்குப் பிறகு பேசிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், 'உண்மையைச் சொல்லப்போனால், இப்போது பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. மைதானத்தில் வெயில் அனல் பறந்தது.அந்தச் சூழலில் பவுலர்களை எதிர்கொண்டு சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசுவது சாதாரணமான விஷயம் அல்ல. ஒரு கட்டத்தில் மனதளவில் சோர்ந்து போவோம், என்ன செய்வதென்றே தெரியாது. ஆனால் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
பவர்பிளே முடிந்து சஹால் பந்துவீச வந்தபோது பந்து சற்று நின்று வந்ததே தவிர, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ராகுல் ஆடிய விதம் அற்புதம், கண்ணுக்கு விருந்தாக இருந்தது. எதிரணி எவ்வளவு ரன்கள் குவித்தாலும், அவர்களை விட ஒரு ரன் அதிகமாக எடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ராகுல் ஒவ்வொரு பந்தையும் மிக அழகாகக் கையாண்டார், அவர் கஷ்டப்பட்டு ஆடுவது போலவே தெரியவில்லை. அப்போதுதான் எனக்குள் சொல்லிக்கொண்டேன், 'அவர்களால் இவ்வளவு ரன்கள் எடுக்க முடியுமென்றால், நம்மாலும் நிச்சயம் முடியும்' என்று.

கடந்த போட்டிகளில் கூட 220-225 ரன்களை இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும் போதே சேஸ் செய்திருக்கிறோம். அதனால் அதே நம்பிக்கையுடன் களமிறங்கினோம். பவர் பிளேயிலேயே அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். தொடக்க வீரர்கள் முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டி எங்களுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். மீதமிருந்த நாங்கள் அந்தத் தொடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டோம். கடந்த மூன்று நாட்களாக வெயிலில் கடுமையாகப் பயிற்சி செய்திருக்கிறோம். இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துவிட்டு, நாளை மீண்டும் அடுத்தக்கட்டத்தைப் பற்றி திட்டமிடுவோம்" என உற்சாகமாகப் பேசியிருந்தார்.

















